கந்த சஷ்டி 2018: திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் காண குவிந்த பக்தர்கள் - பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணியர் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நிகழ்வதை முன்னிட்டு 3200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
Recommended Video
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கந்த சஷ்டி விழாவின் 6 ஆம் நாளான இன்று கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்வை காண குவிந்துள்ள பக்தர்களுக்காக ஆயிரக்கணக்கான காவல்துறையினர் இரவும் பகலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கந்த சஷ்டியை முன்னிட்டு ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் பக்தர்கள் கடும் விரதம் இருந்து சூரசம்ஹாரத்தை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு வந்துள்ளனர். முருகப்பெருமானின் பல ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடந்தாலும் புராண கதைப்படி திருச்செந்தூர் யுத்தம் நிகழ்ந்த தலம் என்பதால் இங்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்துள்ளனர்.
இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக திருச்செந்தூர் நகர் முழுவதும் 10 கண்காணிப்பு கோபுரங்கள் 70 சி.சி.டி.வி கேமிராக்கள், 10 எல்.இ.டி.டிவிக்கள் ஆகியவைகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டு கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கடற்கரை மணல் பகுதியில் ரோந்து செல்லக்கூடிய இரண்டு ரோந்து வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் கடலினுள் 6 பைபர் படகுகள் நிறுத்தப்பட்டு கடலில் குளிக்கும் பக்தர்களை கண்காணிக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கடலில் குளிப்பவர்கள் ஒளிரும் விளக்குகளுடன் அமைக்கப்பட்டுள்ள மிதவைகள் போடப்பட்டுள்ள பகுதியை தாண்டிச் சென்று குளிக்க அனுமதி இல்லை. மரத் தடுப்புகளை யாரேனும் ஏறித் தாண்டினாலோ, சேதப்படுத்தினாலோ சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அனைத்து இடங்களுக்கும் செல்வதற்கு ஏதுவாக வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேவையான ஒளி, ஒலி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு உதவி செய்ய 6 இடங்களில் வைக்கப்பட்டு போதிய காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக 24 மணி நேரமும் இயங்கும் காவல் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திருச்செந்தூர் கோவில் புறக் காவல் நிலையத்திலும், கடற்கரையிலும் அமைக்கப்பட்டு பொதுமக்களின் புகார் மற்றும் கோரிக்கைகள் கேட்டறிந்து தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.
சூரசம்ஹார திருவிழாவிற்கு தூத்துக்குடி வழியாக வருகை தரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தப்படுவதற்கு வீரபாண்டியன்பட்டிணம் அருகே ஜே.ஜே. நகர் அருகே தற்காலிக வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி வழியாக வரும் வாகனங்கள் குமாரபுரம் இசக்கியம்மன் கோவில் அருகில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
வள்ளியூர் மற்றும் சாத்தான்குளம் வழியாக வரும் தனியார் வாகனங்கள் பரமன்குறிச்சி சாலையில் இருக்கும் எஃப்.சி.ஐ அருகே வாகனம் நிறுத்தமிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.கன்னியாகுமரி மற்றும் உவரி வழியே வரும் வாகனங்களை நிறுத்த வேலவன் நகரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவலர்கள் மட்டுமின்றி திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் இருந்தும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊர் காவல் படை பிரிவினர் உட்பட சுமார் 3200 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.