கந்த சஷ்டி விழா: திருச்செந்தூரில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது - 13ல் சூரசம்ஹாரம்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியுள்ளது. நவம்பர் 13ஆம் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படைவீடாக பக்தர்களால் போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. வரும் 13ஆம் தேதியன்று கடற்கரை சூரசம்ஹாரம் நிகழ உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமான் ஆலயங்களில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியுள்ளது. இதனையொட்டி முருக பக்தர்கள் சஷ்டி விரதத்தை தொடங்கியுள்ளனர். பல ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் விரதம் இருப்பதற்காக திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 5.30 மணிக்கு ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளினார். 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.
9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 13ஆம்தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்கிறார்.
14ஆம் தேதியன்று மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை மாற்று விழாவும் இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. ஆறு நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் தங்களின் விரதத்தை முடித்துக்கொண்டு அவரவர் ஊர்களுக்கு திரும்புவதுடன் கந்த சஷ்டி விழா முடிவடைகிறது.
பழனியில் சூரசம்ஹாரம்
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களின் கந்த சஷ்டி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நாளை உச்சிகால பூஜையின் போது காப்பு கட்டுதலுடன் தொடங்கியுள்ளது. வரும் 13ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடை பெறுகிறது. இதனை முன்னிட்டு அன்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் நடை திறக்கப்படும். மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். வடக்கு கிரி வீதியில் தாரகாசூரன் வதமும், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன் சூரன் வதமும், தெற்கு கிரி வீதியில் சிங்க முக சூரன் வதமும், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் வதமும் நடக்கிறது.
சூரனை வதம் செய்த முருகனுக்கு இந்திரன் தனது மகளை மணம் முடித்து கொடுக்கும் நிகழ்வாக நவம்பர் 14ஆம் தேதி மலைக் கோவிலில் சண்முகர், வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இரவு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானை திருக்கால்யாணம் நடை பெறுகிறது.
பழமுதிர்சோலையில் கந்த சஷ்டி விழா
மதுரை அழகர்மலையில் முருகனின் 6வது படை வீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். வருகிற 13ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு சூரசம்ஹாரமும், 14ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல் முருகன்-வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இதேபோல திருத்தணி தவிர அனைத்து முருகன் ஆலயங்களிலும் கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.