கந்த சஷ்டி 2018: சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் அர்த்தம் தெரியுமா?
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. இதற்கான அர்த்தமே கந்த சஷ்டி விரதம் இருந்தால் கருப்பையில் பிள்ளை வளரும் என்பதுதான்.
தூத்துக்குடி: சஷ்டி திதியில் விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும். அகப்பை என்பது உள்ளிருக்கும் கர்ப்பப்பையைக் குறிக்கிறது. எனவேதான் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று பழமொழியாக கூறியுள்ளனர்.
கந்த சஷ்டி திருவிழா சமயத்தில் முருகனை நினைத்து குழந்தைப்பேறு இல்லாதவர்கள் விரதம் மேற்கொண்டால் அகப்பையான கருப்பையில் குழந்தை வளரும் என்பதே இதன் பொருளாகும்
குறிஞ்சி நிலத்தின் தெய்வமான தமிழ் கடவுள் முருகனின் முக்கியத் திருவிழா கந்த சஷ்டி விழா. தீமையின் உருவமான சூரபத்மனை நன்மையின் வடிவமான முருகப்பெருமான் வெற்றி கொண்ட நிகழ்ச்சியே, கந்தசஷ்டிப் பெருவிழா அந்தக் கந்தசஷ்டி நன்னாளில் குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் விரதம் இருந்து முருகனிடம் வேண்ட அவர்களுக்கு குழந்தைச் செல்வங்கள் உண்டாகும் என்பதன் அடிப்படையில் இப்பழமொழி உருவானது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் திருச்செந்தூரில் கந்த சஷ்டி இன்றைக்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
6 நாட்கள் கடும் விரதம்
ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள், பிரதமையில் விரதத்தைத் தொடங்கித் தொடர்ந்து சஷ்டி வரை ஆறுநாள்கள் முருகனை வழிபட்டுக் கடும் விரதம் காப்பது கந்த சஷ்டி விரதம்' இதனை மகா சஷ்டி விரதம்' என்றும் கூறுவர். ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம்.
முருகனுக்காக விரதம்
கந்த சஷ்டி விரதம் இருக்கும் ஆறு நாட்களும் கந்த புராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும். பாம்பன் ஸ்ரீமத் குமர குருபரதாச சுவாமிகள், கந்த புராணத்தின் சுருக்கமாக முதல்வன் புராண முடிப்பு' என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார். இதனைப் பாராயணம் செய்தால் முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்
சூரனை வதம் செய்த முருகன்
முருகனுக்குரிய விரதங்களில் இதுவே தலைமையானது. ஒப்பற்றது. முருகன் சூரபத்மனுடன் ஆறு நாள்கள் தொடர்நது போரிட்டான். ஆறாம் நாள், மாமரமாகி எதிர்த்துப் போரிட்ட அவனைத் தனது வேலாயுதத்தால் வதம் செய்தார். முருகன் பிளந்த ஒரு கூறு மயிலாயிற்று. முருகன் அதைத் தன் வாகனமாக ஏற்றான். மறு கூறு சேவலாயிற்று. அதைத் தன் கொடியாக ஏந்தினான்.
சஷ்டி விரதத்தின் பலன்
மகப்பேறில்லாத பெண்கள் சஷ்டி விரதமிருந்து முருகனை வழிபட்டால், அவனது அருளால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும் என்பது முன்னோர்களின் கருத்தாகும். இதைத்தான் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று பழமொழியாக சொல்லி வைத்தார்கள். நாளைய தினம் கிருஷ்ண பட்ச சஷ்டி. தீபாவாளிக்கு அடுத்து வரும் அமாவாசைக்கு பின்னர் கந்த சஷ்டி விரதம் தொடங்குகிறது இத்தனை ஆண்டுகளாக சஷ்டி விரதம் இருக்காதவர்கள் இனி இருந்து பாருக்க அழகன் முருகனின் அருள் கை மேல் கிடைக்கும்.