ஸ்ரீபிரத்தியங்கிராதேவியை நேரில் வந்து வழிபட்ட நாகம் - மெய்சிலிர்த்த தூத்துக்குடி பக்தர்கள்
ஸ்ரீபிரத்தியங்கிராதேவியை அமாவாசை தினத்தில் நிஜமான நாகபாம்பு நேரில் வந்து வழிபட்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்தது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்ரீசித்தர் பீடத்தில் ஸ்ரீபிரத்தியங்கிராதேவியை அமாவாசை தினத்தில் நிஜமான நாகபாம்பு நேரில் வந்து வழிபட்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்தது பெரும் ஆச்சரியத்தையும், பக்தர்கள் மத்தியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகிலுள்ள அய்யனடைப்பு ஸ்ரீசித்தர்நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் ஸ்ரீபிரத்தியங்கிராதேவி-காலபைரவருக்கு மிகப்பிரமாண்டமான ஆலயம் அமைந்துள்ளது.
இவ்வாலயத்தில் ஸ்ரீபிரத்தியங்கிராதேவி, ஸ்ரீசரஸ்வதி, லெட்சுமி தேவியர்களும், காலபைரவர், குருமகாலிங்கேஸ்வரர், ஸ்ரீமுனீஸ்வரரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
ஸ்ரீபிரத்தியங்கிராதேவி
ஸ்ரீசித்தர் பீடத்தில் அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி நாட்களில் மஹாயாகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு 18ம் தேதி உலகமக்கள் அனைவரும் நோயின்றி நலமாக வாழவேண்டியும், நன்குமழை பெய்து வறட்சி நீங்கி பசுமை வளம் சிறக்கவேண்டியும் முப்பெரும் தேவியர்களுக்கு சிறப்பு மஹாயாக வழிபாடுகள் நடைபெற்றது.
நாகம் வழிபாடு
சிறப்பு மஹாயாகத்திற்கான வழிபாடுகள் அனைத்தும் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குருசீனிவாச சித்தர் தலைமையில் துவங்கி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கோவிலின் வெளியே காட்டுப்பகுதியில் இருந்து திடீரென்று கோவிலுக்குள் நுழைந்த ஒரு நாகபாம்பு ஸ்ரீபிரத்தியங்கிராதேவியை சென்று தரிசித்தது.
மெய்சிலிர்த்த பக்தர்கள்
அதன்பின்பு தேவியின் மீது ஏறி நின்று ஆடியபடி படம் எடுத்த வடிவில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தது. நிஜமான நாகபாம்பு திடீரென்று வந்து ஸ்ரீபிரத்தியங்கிராதேவி மீது நின்று காட்சி கொடுத்ததை பார்த்த பக்தர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து போனதுடன் பயபக்தியுடன் வணங்கினர்.
அம்மனுக்கு அபிஷேகம்
சிறிதுநேரத்திற்கு பின்பு நாகபாம்பு வந்தது போன்று அப்படியே இறங்கி வெளியே வந்து காட்டுப்பகுதிக்குள் சென்று மறைந்தது. தொடர்ந்து சிறப்பு மஹா யாகமும், முப்பெரும் தேவியர்களுக்கு பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட 16வகையான அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், மஹாதீபாரதனையும் கோலாகலமாக நடைபெற்றது. இதில், பக்தர்கள், திரளாக பங்கேற்று வணங்கிச்சென்றனர். வழிபாடுகளைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.
பக்தர்கள் வழிபாடு
இதுகுறித்து, சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குருசீனிவாச சித்தர் கூறியதாவது, இந்த நாகபாம்பு கடந்த சிலமாதங்களாகவே அவ்வப்போது கோவிலுக்குள் உலாவி வந்ததை நான் உட்பட பக்தர்கள் சிலர் பார்த்துள்ளோம்.
அமாவாசையில் வந்த நாகம்
அம்பாளின் ஆலயம் இயற்கையாகவே காட்டுப்பகுதியில் இருப்பதால் நாகபாம்பு வந்து சென்றிருக்கலாம் என்று எண்ணியிருந்தேன். இந்நிலையில் நான் கண்ட நாகபாம்பு அமாவாசையான இன்று நேரில் வந்து அம்பாளை தரிசித்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தது எல்லாம் என்அன்னையின் அருளே ஆகும். இந்த நாகவழிபாடு காட்சியை கண்ட பக்தர்கள் அனைவருக்கும் வாழ்வில் வேண்டும் வரங்கள் யாவும் கிடைத்து மகிழ்வுடன் வாழ்வார்கள் என்றார்.
நாகத்தின் நிஜ தரிசனம்
இது ''நிழல் அல்ல நிஜம்'' என்று சொல்லும் வகையில் நாகபாம்பு நேரில் வந்து அம்பாளை தரிசித்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்த பக்தி மிகுந்த சம்பவம் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தர் தலைமையில்
சிறப்பு மஹாயாக வழிபாடுக்கான ஏற்பாடுகளை சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில், சித்தர்பீடத்தினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.