கங்கண சூரிய கிரகணம்: டிசம்பர் 26ல் சபரிமலை கோவில் 4 மணி நேரம் நடை அடைப்பு
Recommended Video
பட்டனம் திட்டா: சூரிய கிரகணம் நிகழவிருப்பதை முன்னிட்டு, வரும் டிசம்பர் 26ஆம் தேதியன்று சபரிமலை ஐயப்பன் சன்னிதான நடை 4 மணிநேரம் அடைக்கப்படுகிறது. இருமுடிகட்டிக் கொண்டு ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் அதற்கேற்ப தங்களின் பயண திட்டத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வழக்கம் போல், டிசம்பர் 26ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு, சபரிமலை நடை திறக்கப்பட்டு, காலை 6.45 மணி வரையிலும் நெய் அபிஷேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு உஷ பூஜை நடைபெறும்.
மண்டல பூஜை, படி பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை திருவிழாவுக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதியன்று சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதான நடை திறக்கப்பட்டது. அன்றிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டு பதினெட்டாம் படியேறி வந்து சபரிமலை ஐயப்பனை தரிசித்த வண்ணம் உள்ளனர்.
வருகிற டிசம்பர் 27ஆம் தேதியன்று மண்டல பூஜை நெருங்குவதால், நாளுக்கு நாள் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்தபடி உள்ளது. பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, ஐயப்ப பக்தர்கள் எந்தவிதமான சிரமமும் இன்றி பாதுகாப்பாக ஐயப்பனை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வருகிற டிசம்பர் 26ஆம் தேதியன்று கங்கண சூரிய கிரகணம் என்னும் அரிய சூரிய கிரகண நிகழ்வு ஏற்படவிருக்கிறது. இதனையொட்டி, டிசம்பர் 26ஆம் தேதியன்று 4 மணி நேரம் வரை சபரிமலை நடை அடைக்கப்படவுள்ளது.
வழக்கம் போல், டிசம்பர் 26ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு, சபரிமலை நடை திறக்கப்பட்டு, காலை 6.45 மணி வரையிலும் நெய் அபிஷேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு உஷ பூஜை நடைபெறும். அதன் பிறகு 4 மணி நேரம் நடை அடைக்கப்படும்.
பின்பு, பரிகார பூஜைகளும், கலசாபிஷேகமும் நடத்தப்படும். அன்று மாலை சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு விஷேச தீபாராதனை காட்டப்படும். வழக்கம் போல் டிசம்பர் 27ஆம் தேதியன்று மண்டல பூஜை நடைபெறும். பின்பு அன்று இரவுடன் கோவில் நடை அடைக்கப்படும். அதன் பின்னர், மகர விளக்கு பூஜைக்காக வருகிற ஜனவரி மாதத்தில் சபரிமலை சன்னிதான நடை திறக்கப்படும்.
எனவே, விரதமிருந்து இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை செல்லவிருக்கும் பக்தர்கள் அதற்கேற்ப தங்களின் பயண திட்டங்களை மேற்கொள்வது நல்லது.
தற்போது நிகழவிருக்கும் கங்கண சூரிய கிரகணம் அடுத்து வருகிற 2031ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதியன்று ஏற்படும். இந்த நிகழ்வை தமிழ்நாட்டிலும் காண முடியும்.