செல்வ செழிப்பையும் மன நிம்மதியும் தரும் சோமவார பிரதோஷம்!
சென்னை: இன்றைக்கு சோம வாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமை. பிரதோஷமும் இணைந்த சிவபெருமானுக்கு உரிய அற்புத நாள். இந்த நாளில் சிவ தரிசனம் செய்வது மிகவும் விசேஷம். உத்திராயணத்தின் ஐந்தாம் மாதமான வைகாசியும் தக்ஷிணாயனத்தின் ஐந்தாம் மாதமான கார்த்திகையும் சிவ வழிபாட்டிற்கும் முருக வழிபாட்டிற்க்க்கும் ஏற்ற மாதங்களாகும். இந்த மாதங்களில் வரும் சோம வார பிரதோஷங்கள் நம் பாவங்கள் அனைத்தும் போக்கி புண்ணியங்கள் பெருக்குவதோடு செல்வ வளமும் சேர்க்கும் என்கிறார்கள் ஆன்றோர்கள்.
பிரதோஷத்தையொட்டி, நந்திதேவருக்கும் சிவலிங்கத்துக்கும் இன்று சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். அபிஷேகத்துக்குத் தேவையான பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, திரவியப்பொடி ஏதேனும் வழங்கி, சிவனாரை கண்ணார தரிசிப்பது சிந்தையில் தெளிவு பிறக்கும். எடுத்த காரியத்தில் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார் சிவபெருமான்! அனைத்துக்கும் மேலாக, தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த பாவங்கள் விலகி, புண்ணியங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்!
சோம வார பிரதோஷ தரிசனம்:
சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது சோமன் எனப்படும் சந்திரன், மகாலக்ஷ்மி எனப்படும் திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. சந்திரனை சிவபெருமான் தலையில் சூடிக்கொண்டார். மஹாலக்ஷ்மியை திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளிர்க்கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது.
பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். சர்ப்பதோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு காலம். அதேபோல, மனிதர்கள் சிவனை வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷம். அதில் தேய்பிறை பிரதோஷம் மனிதர்களுக்கு தோஷம் போக்கவும் வளர்பிறை பிரதோஷம் வாழ்வின் வளம் சேர்க்கவும் ஏற்றதாகும்.
ஜோதிடத்தில் சோமவார பிரதோஷம்:
ஜோதிடத்தில் கடலும் கடல் சார்ந்த பொருட்களுக்கும் காரகர் சந்திர பகவான் ஆவார். காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகம் சந்திரனின் ஆட்சி வீடாகும். மேலும் கடக ராசி கடலும் கடல் சார்ந்த இடமுமான நீர் ராசியாகும். மாத்ரு காரகன், மனோ காரகன் என்றெல்லாம் ஜோதிடத்தில் சிறப்பிடம் பெற்ற நவக்ரஹ நாயகர்களில் ஒருவரான சந்திரன் மஹாவிஷ்ணுவின் மனதிலிருந்து பிறந்ததாகவும் (சந்த்ரமா மனஸோ ஜாத: - புருஷ ஸூக்தம்), பாற்கடல் கடைந்த போது தோன்றியதாகவும் அறியமுடிகின்றது. பெரும் தவம் செய்து கிரஹ பதவி பெற்றவர் சந்திர பகவான்.
சந்திரனை "சந்திரமா மனஸோ ஜாத:" வேதம் போற்றுகிறது. இவரே உடலுக்கு காரகன். அமாவாசை தவிர அனைத்து நாட்களிலும் வளர்ந்தும் தேய்ந்தும் நமக்கு காட்சி கொடுப்பவர் 'சர்வம் சந்திர கலாபிதம்' என்று சந்திரனை ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. லக்னத்துக்கு அடுத்தபடியாக முக்கியம் வாய்ந்தது ராசி. ஜோதிடம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எடுத்தவுடன் கேட்கும் கேள்வி 'நீங்கள் என்ன நட்சத்திரம், என்ன ராசி?' என்பது. எந்த நட்சத்திர தினத்தன்று நாம் பிறந்தோமோ, அது நமது ஜென்ம நட்சத்திரம். அந்த நட்சத்திரத்துக்கான ராசி ஜென்மராசி அல்லது ஜனன ராசி. இந்த ராசியின் அடிப்படையிலேயே யோகங்கள் உண்டாகின்றன. அதுபோல குருபலம், ஏழரை சனி, அஷ்டம சனி கண்டசனி ஆகிய கோசார பலன்கள் சந்திரனை பிரதானமாக வைத்து நடக்கின்றன. எல்லா திதிகளிலும் சந்திர, சூரியன் ஆளுமை இருக்கும் சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும் காலம் அமாவாசை.
பிரதோஷ நாளில் சிவ தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும். அதுவும், திங்கட்கிழமையுடன் பிரதோஷம் வரும்போது, சோமவாரம் என்பார்கள் திங்கட்கிழமையை அந்த சோமவாரத்தில் வரும் பிரதோஷ நாளில் சிவ தரிசனம் செய்துவிட்டால் வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும். அதனால் சோமவார பிரதோஷம் என்பது ஒரு தெய்வீக தன்மை கொண்டதாகும். அதில் விரதம் இருப்பதும் சிவ தரிசனும் செய்வதும் மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கக் கூடியது.
ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் சோம வார பிரதோஷ விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் பிரதோஷ தரிசனம் செய்யவேண்டும். சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன்,கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள அமைப்பு இருப்பவர்கள் இந்த சோம வார பிரதோஷ வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.
சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் சோம வார பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்வது சந்திரனின் பரிபூர்ண அருளைப் பெறலாம். மேலும் ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்தவர்கள், சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்கள் இவர்களும் சோம வார பிரதோஷ வழிபாடு செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும்.
ஜோதிடத்தில் சூரியனையும் சந்திரனையும் ராஜ கிரகங்கள் என சிறப்பித்து போற்றப்படுகிறது. மேலும் சூரியனை ஆதம காரகன் மற்றும் பித்ரு காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். சந்திரனை மனோ காரகன் என்றும் மாத்ரு காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். சூரியனும் சந்திரனும் ஒரு ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால்தான் அனைத்து நல்ல பலன்களும் ஜாதகர் அனுபவிக்க முடியும். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கிரகம் சந்திரன்.
இந்த சோம வார பிரதோஷ நாளில் பிரதோஷ காலம் எனும் கோதூளி லக்ன காலத்தில் சந்திரனை தலையில் சூடிய நிலையில் காட்சி தரும் ரிஷபாரூட மூர்த்தியையும் சோமாஸ்கந்த மூர்த்தியையும் தரிசிப்பது சந்திர சகோதரியான மகாலக்ஷ்மியின் அருளால் வாழ்வில் செல்வ செழிப்பு, சந்தோஷம் மற்றும் மனநிம்மதியும் பெறமுடியும் என்பது நிதர்சனம்
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
9498098786