திருநள்ளாறு... குச்சனூர்... திருநரையூர் - சனிபகாவான் பரிகார தலங்கள்
சனிபகவான் பரிகார தலங்களுக்கு சென்று பரிகாரம் செய்தால் நன்மை உண்டாகும்.
சென்னை: தமிழகத்திலும் காரைக்கால் அருகில் உள்ள திருநள்ளாறில் உள்ள சனி பகவான் பரிகார தலத்திற்கும் சென்று வணங்குவதன் மூலம் சனிபகவானால் ஏற்படும் கெடு பலன்களில் இருந்து தப்பிக்கலாம்.
நவக்கிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனி பகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை; சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்பர்.
சூரிய தேவனின் மகன் சனிபகவான். இன்னொரு மகன் எமதர்மன். இருவரும் பகை கொண்ட நேரம் நிறைய உண்டு. ஒரு சமயம் பகையினால் எமதர்மன் சனிபகவான் காலில் ஓங்கி அடிக்க, அதனால் சனிபகவானின் கால் ஊனமானது. எனவேதான் ஊனமுற்றவர்களுக்கு தானம் செய்வதன் மூலம் சனிபகவானுக்கு பரிகாரம் செய்யலாம் என்கின்றனர்.
சனி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சனி தசை அல்லது சனி அந்தர் தசையின் போது: சனியின் கடவுளான அனுமனைத் தினமும் வழிபடவேண்டும். தினசரி அனுமன் சாலிசா அல்லது அனுமான் ஸ்தோத்திரம் படிக்க வேண்டும். சனிபகாவனுக்கு உள்ள முக்கிய பரிகார தலங்களை அறிந்து கொள்வோம்.
திருநள்ளாறு நாயகன்
காரைக்கால் அருகே உள்ளது திருநள்ளாறு. நளச் சக்ரவர்த்தியின் ஏழரை நாட்டு சனி விலகிய தலம். இங்குள்ள நள தீர்த்தத்தில் குளித்து நள்ளாறா எனக் கூறினால் நம் வினைகள் நாசமடையும். தர்ப்பாரண்யேஸ்வரர் சந்நதிக்கு செல்லும் வழியில் ஒரு சிறு மாடம் போன்ற அமைப்பில் அமர்ந்து அருளாட்சி செய்கிறார் சனிபகவான். விசேஷ நாட்களில் தங்கக் காக வாகனத்தில் சனி பகவான் எழுந்தருளுகிறார்.
கால் ஊனம் நீங்கியது
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள விளங்குளம் என்ற ஊரில் அச்சயபுரீஸ்வரரை வணங்கலாம். கால் ஊனத்துடன் நிவாரணம் தேடி மனித உருவத்தில் சுரைக் குடுவையில் பிச்சை ஏந்தி பெற்ற அந்த தானியங்களைச் சமைத்து அன்னதானமாக ஏழைகளுக்கும் முதியோர்களுக்கும் அளித்து வந்தார் சனிபகவான்.
ஊர் ஊராக சுற்றி வந்த சனிபகவான் விளாமரங்கள் நிறைந்த ஒரு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். பாதையை கடக்கும் போது ஓர் இடத்தில் விளாமரத்தின் வேரால் தடுக்கப்பட்டு நிலைதடுமாறி அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தார். அங்கே மறைந்திருந்த ‘பூச ஞான வாவி' என்ற ஞான தீர்த்தம் சுரந்து சனிபகவானை மேலே எழுப்பி கரை சேர்த்தது. இதனால் சனி பகவானின் கால் ஊனம் நிவர்த்தியானது. விளாவேர் தடுக்கி சனி பகவான் விழுந்ததால் சுரந்த ஞான வாவி தீர்த்தம் குளமாக உருவானது. அதனால் விளம்குளம் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி விளங்குளம் என்ற பெயரால் தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.
சுயம்பு சனிபகவான்
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உள்ளது குச்சனூர். இங்கு சனி பகவான் சுயம்பு மூர்த்தியாய் அருள்கிறார். கல் தூணாக பூமியில் இருந்து தோன்றிய இவருக்கு மஞ்சள் காப்பு சாத்துகிறார்கள். சூர்ய நாராயணின் மகன் என்பதால் நாமமும் ஈஸ்வர பட்டம் பெற்றிருப்பதால் விபூதியும் அணிவிக்கிறார்கள். நீதி வழங்குவதிலும் வயிற்று நோய் தீர்ப்பதிலும் நிகரற்றவர் இந்த குச்சனூரார்.
சனிபரிகார தலம்
இத்தலம் மதுரைக்கு வடகிழக்கே 20 கி.மீ. தொலைவில் உள்ளது. சனிபகவான் இங்கு தனி சந்நதியில் அருள்கிறார். மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் சனிபகவான் முடமாகிப் போக, அந்த சாபம் நீங்க இத்தலத்தில் அருளும் ஈசனான வேதபுரீஸ்வரரையும் இறைவிவேதநாயகியையும் சனிபகவான் வழிபட்டு தன் வாத நோயைப் போக்கிக் கொண்டார். அதனால் இத்தலம் திருவாதவூர் ஆயிற்று. இத்தலத்து ஈசனை வழிபட சனி பாதிப்பிலிருந்து தப்பலாம்.
மயிலாடுதுறை மயூரநாத ஸ்வாமி
மயிலாடுதுறையில் மயூரநாத சுவாமி திருக்கோயிலில் யமனால் வழிபடப்பட்ட லிங்கத்திருமேனி உள்ளது. இவரை வழிபட்டால் சனி தோஷம் நீங்கும். திருநரையூரில், சனிபகவான் தனது இரு மனைவியருடன், திருமணக் கோலத்தில், தசரத சக்ரவர்த்திக்கு காட்சி தரும் கோலமாய் கோயில் கொண்டுள்ளார். சனி பகவான் மங்கள கரமாய் - மகிழ்ச்சியாய் குடிகொண்டிருக்கும் கோயில் இது. எனவே, இவருக்கு மங்கள சனீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
வடதிருநள்ளாறு
சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூரில் உள்ளது, அகஸ்தீஸ்வரர் ஆலயம். இங்கு சனிபகவான் மிகவும் வரப்ரசாதியாய் வீற்றிருக்கிறார். சனீஸ்வர பகவானே இத்தல இறைவனை பூஜித்து இங்குள்ள நள்ளாறு தீர்த்தத்தில் நீராடி, தன் தோஷம் நீங்கப் பெற்றதாக ஐதீகம்! எனவே இத்தலம் வடதிருநள்ளாறு என அழைக்கப்படுகிறது. திருநள்ளாறுக்குச் சென்று பரிகாரம் செய்ய இயலாதவர்கள் இத்தல சனீஸ்வரனுக்கு அந்த பரிகாரங்களைச் செய்கின்றனர்