கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சிறப்பு ஹோமம்
கொரோனா வைரஸ் நோய் வராமல் தடுக்க வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெற்றது.
ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், கொரோனா வைரஸ் நோய் வராமல் தடுக்கவும் தாக்கத்தின் அச்சம் குறையவும் மற்றும் பாதிக்கபட்ட நபர்கள் விரைவில் குணமடையவும் இன்று 12.03.2020 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை சிறப்பு தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது.
தன்வந்திரி ஆயுர்வேத மருந்துகளின் அதிபதி. மருத்துவக்கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்துதான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும்.
வாலாஜாபேட்டை அடுத்துள்ள அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில்ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு தனிக்கோயில் உள்ளது. கலி காலத்தில் அழியாமல் இருக்க ஐம்பத்திநான்கு கோடி தன்வந்திரி மஹா மந்திர ஒலிகளுடன் தோன்றிய மகத்தான தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. இந்த பீடம் ஒளஷத பீடமாக அமைந்து ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி என்பதாகும்.
தன்வந்திரியே மூலவராக அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். தன்வந்திரி பகவான் சிலை எட்டு அடி உயரம். ஒரே கல்லால் செய்யப்பட்டது. சுமார் இரண்டு டன் எடையுள்ளது. பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் அருள் புரிகின்றார். நான்கு திருக்கரங்கள். பகவானின் திருமார்பில் வலது பக்கம் தங்கத்தால் ஆன ஸ்ரீலட்சுமியின் உருவம் இருக்கிறது. சற்றுக் கீழே கஜலட்சுமி தேவி காட்சி தருகிறாள். வலது மேற்கரத்தில் சக்கரம். வலது கீழ்க்கரத்தில் அமிர்த கலசம். இடது மேற்கரத்தில் சங்கு. இடது கீழ்க்கரத்தில் சீந்தல் கொடி. வலது தொடையில் வெள்ளியால் செய்யப்பட்ட அட்டைப் பூச்சி. வெள்ளியால் ஆன ஸ்டெதஸ்கோப்பும், கைக்கடிகாரமும் வைத்து, கத்தியும் இடுப்பில் பெல்ட் அணிந்து தலைமை அலோபதி மருத்துவாகத் தரிசனம் தருகிறார்.
இந்த ஆலயத்தில் 365 நாட்களும் யாகங்கள் நடைபெறுகிறது. ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், கொரோனா வைரஸ் நோய் வராமல் தடுக்கவும் தாக்கத்தின் அச்சம் குறையவும் மற்றும் பாதிக்கபட்ட நபர்கள் விரைவில் குணமடையவும் இன்று 12.03.2020 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை சிறப்பு தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது.
இதில் நெய், தேன், மூலிகைகள், புஷ்பங்கள், பழங்கள், வஸ்திரங்கள், நிவேதனப் பொருட்கள் சமர்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் நோயின் அச்சம் குறையவும், பாதிப்புகள் குறையவும், பயம் விலகவும் விழிப்புணர்வு ஏற்படவும் கூட்டு பிராத்தனைகள் செய்தனர். மேலும் பங்கேற்றவர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்களை வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.