குழந்தை வரம் தரும் கண்ணன் - தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா
தன்வந்திரி பீடத்தில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், சீடை, முருக்கு, தட்டை, அப்பம், லட்டு போன்ற பல்வேறு பலகாரங்கள், பழங்கள் வைத்து நிவேதனம்
வேலூர்: வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் இன்று ஜென்மாஷ்டமியை முன்னிட்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், சீடை, முருக்கு, தட்டை, அப்பம், லட்டு போன்ற பல்வேறு பலகாரங்கள், பழங்கள் வைத்து நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த தினத்தை ஸ்ரீ ஜெயந்தி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை “கண்ணா'' ''முகுந்தா'' என்று பல பெயர்களில் அழைக்கிறோம். கண்ணைப் போல காப்பவன் என்றும், முகுந்தா என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து, முக்தி அளிப்பவன் என்றும் நம்புகிறோம்.
கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவீனமுறையில், கல் ஊஞ்சலில், ஒரடி உயரத்தில் தவழ்ந்த கோலத்தில், நவநீத கிருஷ்ணர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
நவநீத கிருஷ்ணருக்கு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தம்பதியர் குழந்தை பாக்யம் வேண்டியும், குடும்ப ஒற்றுமை வேண்டியும், அகந்தை அகலவும், மூர்க்க குணம் குழந்தைக்கு ஏற்படாமல் இருக்கவும், தர்மசீலராக வாழவும், அரசியல் ஞானம் உண்டாகவும், நிர்வாக திறன் அதிகரிக்கவும், மாமனார் வழியில் சொத்துக்கள் கிடைக்கவும், திருமணத் தடைகள் அகலவும், செல்வம் பெருகவும், வயல்களில் விளைச்சல் அதிகரிக்கவும், ஆடு, மாடுகள் பெருகவும், கடன் தீரவும், பகைமை ஒழியவும், புகழ் கூடவும், அமைதி நிலவவும், ஆற்றல் பெருகவும், வறுமை இல்லா வாழ்வு அமையவும் ஸ்ரீகிருஷ்ண யாகமும், மஹா அபிஷேகமும் நடைபெற்று கூட்டுப் பிரார்த்தனையுடன் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், சீடை, முருக்கு, தட்டை, அப்பம், லட்டு போன்ற பல்வேறு பலகாரங்கள், பழங்கள் வைத்து நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.