ஸ்ரீ ராகவேந்திரர் 348 வது ஆராதனை விழா: ஸ்ரீராகவேந்திரரை கனவில் காணும் வியாழக்கிழமை விரதம்
ஸ்ரீ ராகவேந்திரரின் 348 வது ஆராதனை விழா தன்வந்திரி பீடத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது. 16.08.2019 வெள்ளிக்கிழமை முதல் 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை இன்று வரை தினசரி காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை விச
வேலூர்: வாலாஜாபேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ஸ்ரீ குரு ராகவேந்திரரின் 348 ஆவது ஆராதனையை முன்னிட்டு சென்ற 16.08.2019 வெள்ளிக்கிழமை முதல் 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை இன்று வரை தினசரி காலை விசேஷ ஆராதனைகளுடன் மஹோத்ஸவ விழாவாக நடைபெற்றது. இதில் ராகவேந்திரர் மூலமந்திர ஹோமத்துடன், நவக்கிரஹ ஹோமங்களும், லட்சுமி பூஜையும் பஞ்சாமிர்த அபிஷேகமும் நடைபெற்றது.
உலகில் வேறெங்கும் இல்லாதவாறு 4 அடி உயரத்தில் ம்ருத்திகா பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் காமதேனுவுடன் மார்பில் ராமரும், பிருந்தாவனத்தில் லட்சுமி நரசிம்மருடன் வடிவமைக்கப்பட்டு தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களில் கரிகோல பவனியாக கொண்டு செல்லப்பட்டு மிகவும் பிரசித்தி பெற்ற ம்ருத்திகா பிருந்தாவனங்களில் வைத்து பூஜிக்கப்பட்டு பக்தர்களால் ஆராதனை செய்யப்பட்டு, 51 பிருந்தாவனங்களில் இருந்து கொண்டு வந்த ம்ருத்தி வைத்து தன்வந்திரி மஹா மந்திரத்துடன் மத்துவாச்சாரியர்களைக் கொண்டு விசேஷமான முறையில் தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ராகவேந்திரரை பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஆராதனையும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் கலந்து கொண்டவர்களுக்கு குரு மகான் ஆசீர்வாதத்துடன் அனைத்து விதமான பிரச்னைகளும் நீங்கி, சகல சம்பத்துடனும், ஆரோக்யத்துடனும் வாழ வழி கிடைக்கும் என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். நாம் பெருபாலான நேரங்களில் வாழ்வில் ஏதேனும் பிரச்சனைகள் தோன்றும் போது மட்டுமே திருவடி ஆன இறைவனின் அருளை வேண்டுகிறோம்.
அவ்வாறு இறைவனை வேண்டியும் சிலருக்கு அவர்களின் பிரச்சனைகள் தீருவதில்லை. உலகில் இறைவனின் பிரதிநிதியாக தோன்றியவர்கள் தான் மகான்களும், ஞானிகளும். இவர்களை நாம் எல்லோரும் தூய்மையான இதயத்துடன் சரணடையும் போது நமக்கு எல்லா வகையிலும் உதவுகின்றனர்.
அப்படி வாழ்ந்த ஒரு மகான் "ஸ்ரீ ராகவேந்திரர்" ஆன்மீக பூமியான தமிழ் நாட்டில் 17 ஆம் நூற்றாண்டில் அவதரித்தவர் தான் ஸ்ரீ ராகவேந்திரர். இவர் இப்பிறவியில் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் வழிபாட்டை மக்கள் அனைவரிடமும் பரப்பும் புண்ணிய பணியை மேற்கொண்டார்.
மகானாகிய ஸ்ரீ ராகவேந்திரர் தன்னை சோதிக்க நினைத்தவர்களுக்கு அவர்களின் அகங்காரத்தை அடக்கி ஞானத்தை அருளினார். தன்னை உள்ளன்போடு வணங்கியவர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்த்தினார். அப்படிப்பட்ட மகானுக்குரிய இம்மந்திரத்தை உண்மையான பக்தியுடன் உரு ஜெபித்து அவரை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
மகான் ராகவேந்திரரை கனவில் காணவிரும்பும் பக்தர்கள் அதற்குரிய விரதத்தினைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விரதத்தை ஆரம்பிக்க வியாழக்கிழமை உகந்தநாள் ஆகும். அன்று பூச நட்சத்திரமாக இருந்தால் மிகவும் சிறப்பு. வேறு நட்சத்திரமாக இருந்தாலும் வழிபடலாம். ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து நம்பிக்கையுடன் பூஜை செய்ய வேண்டும். ஏழாவது வியாழக்கிழமை பூஜையின் விரத முடிவு நாளாகும். அன்று ஒரு அடி உயரத்திற்கு மேல் உள்ள ஐந்து முக குத்து விளக்கு, பூஜைக்கு வேண்டிய வெற்றிலைப் பாக்கு, பழம், மணமிக்க மலர்கள், தூப தீபங்கள் ஆகியவைகள் தேவை.
பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் ஸ்ரீ காம தேநுவே
என்று சொல்லிக்கொண்டே படத்தையும் விளக்கையும் பதினோரு தடவைகள் வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறையும் சுலோகத்தைச் சொல்ல வேண்டும். கையில் வைத்திருக்கும் துளசி இலையை படத்திற்கு அர்ப்பணித்தலும் முழு நம்பிக்கையுடன் கனவில் வந்து தரிசனம் கொடுக்கும்படி பிரார்த்தனை செய்தபின் கீழே சாஸ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். இதுபோல் ஆறு வியாழக்கிழமை வழிபட்ட பின் ஏழாவது வியாழக்கிழமை பழங்களுடன் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யவேண்டும்.
ஸ்ரீராகவேந்திரரை வழிபடும் வியாழக்கிழமையில் பகலில் திரவ பதார்த்தங்கள் சாப்பிடலாம். இரவில் சிறிதளவு பால் அன்னம் சாப்பிடலாம். இதுபோல் விரதம் கடைப்பிடித்து ஸ்ரீராகவேந்திரரை நம்பிக்கையுடன் வழிபட்டால் கனவில் நிச்சயம் தரிசனம் தருவார். அவர் தரிசனம் கிடைத்தால் நமது குறைகள் நீங்கும்.