தமிழகம் முழுவதும் ஸ்ரீராம நவமி கொண்டாட்டம் கோலாகலம் - ஆலயங்களில் பக்தர்கள் தரிசனம்
தமிழகம் முழுவதும் ராம நவமியை முன்னிட்டு ராமர் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை: ஸ்ரீராம நவமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ராமர் ஆலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் விதிமுறைகளைப் பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.
பகவான் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானதாக மக்களால் கொண்டாடப்படும் ராம அவதாரம் சித்திரை மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய நவமி திதியில் ஸ்ரீராமன் அவதரித்தார்.
சித்திரை வளர்பிறை பிரதமைத் தொடங்கி நவமி திதி வரை சித்திரை நவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது.ராம நவமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ராமர் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
மதுராந்தகத்தில் உள்ள ஏரிகாத்த ராமர் கோவிலில் இன்று ராம நவமி விழா நடைபெற்றது. சென்னையிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் மதுராந்தகத்தில் உள்ளது இந்த ஆலயம். இலங்கையிலிருந்து ராமர், அன்னை சீதை மற்றும் இலக்குவனனுடன் அயோத்திக்கு திரும்பியபோது, இங்கு புஷ்பக விமானத்தில் வந்திறங்கினர் என்பது ஐதீகம். ஆங்கிலேய ஆட்சியில் ஒரு மழைக்காலத்தில் மதுராந்தகம் ஏரியின் சீற்றத்தால் பெரும் அபாயம் எற்பட்டது.
கலக்கமுற்ற மாவட்ட ஆட்சியர், தினமும் இரவில் ஏரியில் நீரின் அளவைக் காண சென்றதாகவும் அங்கு ராமரே வெள்ளம் ஊருக்குள் வராமல் பார்த்துக்கொண்டதை அவர் கண்டதாகவும் கூறப்படுகின்றது. அதனாலேயே இந்த ராமர் கோவிலுக்கு ஏரிகாத்த ராமர் கோவில் என பெயர் வந்தது. இங்கு ஆண்டு முழுவதும் பல பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். ராம நவமியை முன்னிட்டு கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சேலத்தில் உள்ள அயோத்தியப்பட்டினம் நகரில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமையான கோயிலாகும். ராவணனை வென்று அயோத்தி திரும்பிய ராமர் இங்கு ஓய்வெடுத்ததாகவும் கூறப்படுகின்றது. இங்கு வந்த ராமர், அன்னை சீதை, இலக்குவன், ஆஞ்சனேயர், விபீஷணன், சுக்ரீவர் ஆகியோருடன் இங்கு வந்து இளைப்பாறியதாகவும் புராணங்கள் கூறுகின்றன. ராமரின் கால்தடம் இங்கு உள்ளதாகக் கூறப்படுகின்றது.
சேலம் அயோத்தியாபட்டணம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி திருக்கோயில் உள்ளது. ராம நவமியை முன்னிட்டு காலை 5 மணி முதல் சுப முகூர்த்த நேரத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு ராமர் சீதை லட்சுமணன் ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்தார் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா கட்டுப்பாடுகளுடன் சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் என பக்தி கோஷங்கள் எழுப்பினர்
கும்பகோணத்தில் தென்னக அயோத்தி என்று போற்றப்படும் ராமசாமி திருக்கோயிலில் தக்க்ஷிண அயோத்தி எனப் புகழப்படுகிறது. இந்த ஆலயத்தில் ராம நவமி விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த ஆலயத்தில் பட்டாபிஷேக மூர்த்திகளாய் ஸ்ரீராமனும் ஸ்ரீ சீதா தேவியும் சகோதரர்களுடன் காட்சி அளிக்கிறார். ஆண்டு தோறும் ராம நவமி விழா இங்கு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் உள்ளதால் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. ராமர், சீதை, லட்சுமணர் உள்புறப்பாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ஸ்ரீராம் ஜெயராம் என்று ராம நாமம் உச்சரித்து வழிபட்டனர்.
ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள கோத்தண்டராமர் கோயில் புகழ்பெற்ற ராமர் ஆலையங்களில் ஒன்றாகும். இந்த ஆலயம் ராமேஸ்வரத்தின் தென் மூலையில் அமைந்துள்ளது. இங்கிருந்துதான் ராமர் இலங்கை செல்வதற்கான பாலத்தைக் கட்டினார் என புராணகதைகளில் கூறப்படுகிறது. ராவணனை வதம் செய்த தோஷத்தில் விடுபட ராமர் பிரார்த்தனை செய்த இடமாகவும் இது கருதப்படுகின்றது. கோதண்டராமர் கோவிலில் இந்த ஆண்டு ராம நவமி விழா கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீராம நவமி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீராம நவமியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.