கொரோனாவால் களையிழந்த ஸ்ரீ ராம நவமி - வீட்டிலேயே நீர் மோர், பானகம் படைத்து வழிபட்ட மக்கள்
ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர். இன்றைய தினம் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய அச்சத்தினால் ராமர் கோவில்களுக்கு பக்தர்கள் போக முடியாத சூழ்நிலையில் வீட்டிலேயே சிறப்பாக நைவ
சென்னை : இன்றைய தினம் ஸ்ரீ ராம நவமி பண்டிகை கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் எல்லா பண்டிகைகளுமே களையிழந்து விட்டன. பக்தர்கள் இல்லாமல் கோவில்களில் சாமிகளுக்கு மட்டுமே வழக்கமான நிவேதனம் செய்யப்படுவதால் பல பக்தர்கள் தங்களுடைய வீடுகளில் நீர் மோர், பானகம் படைத்து வடை பாயசம் செய்து ஸ்ரீ ராம நவமியை கொண்டாடினர். இன்றைய கால கட்டத்தில் வைட்டமின் சத்து நிறைந்த பானகத்தை குடித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வோம்.
தர்மம் அழிந்து, அதர்மம் தலை எடுக்கும் போதெல்லாம் மண்ணுலகையும், மக்களையும் காக்க மகாவிஷ்ணு அவதாரங்கள் எடுத்தார் என்கின்றன புராணங்கள். இதில் ஏழாவதாக எடுத்த ராம அவதாரம் மனித அவதாரமாக இருந்ததால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாக உதித்த ராமன், சீதாதேவியை மணந்து ஏகபத்தினி விரதனாக இருந்தார். தந்தை செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றினார். அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்து மக்களை காத்தார். இவரது சிறப்புகளை விளக்கும் ராமாயணம் நமது இதிகாசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இதில் ராம அவதாரத்தைப் பற்றியும், அவர் செய்த சாதனைகளைப் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.
பொதுவாக கோவில்களில் தீர்த்தமும் பிரசாதமும் கொடுப்பதே மனிதர்களுக்கு நோய்கள் நீங்கவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும்தான். பெருமாள் கோவில்களில் துளசி, பச்சைக்கற்பூரம் கலந்த தீர்த்தம் கொடுப்பதே சளி தொந்தரவுகள் வராமல் தடுப்பதற்காகத்தான். இந்த ராம நவமி கோடை காலத்தில் கொண்டாடப்படுவதால் நீர் மோரும், பானகமும் தயாரித்து மக்களுக்கு தானமாக வழங்கி கொண்டாடுகின்றனர்
ஸ்ரீ ராமர் அவதாரம்
முந்தைய அவதாரங்களான மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் வாமனர், பரசுராமர் ஆகியவை, நீர்வாழ்வனவாகவும், விலங்காகவும், விலங்கும், மனிதனும் இணைந்தும் காணப்படும். இந்த ராம அவதாரத்தில் தான் மனிதர்கள் படும் அனைத்து இன்னல்களையும் இறைவனும் அனுபவித்து அதன் மூலம் மக்களுக்கு பாடம் புகட்டியிருக்கிறார்.
அவதார திருநாள்
மகாவிஷ்ணு ராமராக அவதரித்த நாளை ஸ்ரீராம நவமி விழாவாக ஆண்டு தோறும் பக்தர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்களை முன் பத்து எனவும்; பிறந்த தினத்திலிருந்து வரும் பத்து நாட்களைப் பின் பத்து எனவும் இருபது நாட்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர். பஜனைகள், இராமாயணச் சொற் பொழிவுகள் நடைபெறும்.
ராமருக்கு பிடித்தமானது
இந்த நாளில் இறைவனை வணங்க வரும் பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும். ஏன் இந்த நைவேத்தியம் தெரியுமா? ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், கானக வாழ்க்கை மேற்கொண்டிருந்த போதும் தாகத்திற்கு நீர் மோரும் பானகமும் பருகினார் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே அவை இரண்டும் ஸ்ரீராமபிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஸ்ரீராமருக்கு வழிபாடு
வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும். வீடுகளில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்துப் பூஜை செய்து, நீர் மோர், பானகம், பாயசம், வடை நிவேதனம் செய்து வழிபட்டனர். ஸ்ரீராமர் படத்துடன் ராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜைகள் செய்து வழிபட்டனர்.
ராம நாமம் சொல்லுங்க
பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணையானது ராம நாமம். ஸ்ரீராம நவமியன்று ராமநாமம் சொல்வதும், ராமநாமம் எழுதுவதும் நற்பலனைத் தரும். ராம நாமத்தை அறிந்தோ அறியாமலோ உச்சரித்தாலே பகவான் அருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ராம நாமத்தை சொல்லி ராம நவமி கொண்டாடினால் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் அருள் கிடைக்கும்.
பானகம் தரும் பாதுகாப்பு
புளி, எலுமிச்சை, பனை வெல்லம், ஏலக்காய், சுக்குப்பொடி, மிளகு ஆகியவை சேர்த்து தண்ணீர் கலந்து தயாரிக்கப்படுகிறது பானகம். கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் நிறைந்துள்ள இன்றைய கால கட்டத்தில் தாகத்திற்கு பானகம் குடிப்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ராமபிரானுக்கு நிவேதனமாக படைத்த பானகத்தை நீங்களும் குடிப்பதோடு மக்களுக்கும் தானமாக கொடுக்கலாம்.