அயோத்தியில் பிறந்த ஸ்ரீராமர் ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் உச்சத்தில் இருக்கு தெரியுமா?
Recommended Video
மதுரை: நவ கிரக தோஷங்கள் நீக்கும் ஸ்ரீ ராமர் ஜனன ஜாதகம். இந்த ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து பூஜித்தால் கிரக தோஷ பீடைகள் நீங்கும் என்பது ஐதீகம். சகல ஐஸ்வரிய அபிவ்ருத்தியும் ஆயுள் அபிவிருத்தியும் ஸ்ரீராமரின் அருளால் கிடைக்கும். ஓர் இல், ஒரு சொல், ஒரு வில் என்று வாழ்ந்த ஸ்ரீ ராமர் ஜாதகத்தில் நவகிரகங்களில் முக்கிய கிரகங்கள் உச்சத்தில் அமர்ந்துள்ளன. மேஷத்தில் சூரியன் உச்சம், கடகத்தில் சந்திரன் ஆட்சி, குரு உச்சம், துலாம் ராசியில் சனி உச்சம், மகரத்தில் செவ்வாய் உச்சம், மீனம் ராசியில் சுக்கிரன் உச்சம் என மொத்தம் 5 கிரகங்கள் உச்சம் பெற்றும், மனோகாரகன் சந்திரன் ஆட்சி பெற்றும் அமர்ந்துள்ள அம்சமான ஜாதகம் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் ஜாதகம்.
நவமியில் பிறந்த ராமபிரான், இலங்கையை ஆட்சி செய்து வந்த ராவணனை வதம் செய்வதற்காகவே அவதரித்தவர். சிவபெருமானிடம் இருந்தும், பிரம்மதேவனிடம் இருந்தும் பல சக்திவாய்ந்த வரங்களைப் பெற்றிருந்த ராவணன், அந்த வரங்களைக் கொண்டு, முனிவர்களையும், தேவர்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் தயவு தாட்சன்யம் இன்றி துன்புறுத்தினான்.
ராவணன் என்ற அரக்கனை அழிக்கவே மகாவிஷ்ணு மனிதராக ராமராக அவதரித்தார். காரணம் மனிதர்களையும் குரங்குகளையும் ஏளனமாக நினைத்தே ராவணன் பிரம்மன் சாகா வரம் கேட்ட போது மனிதர்கள், குரங்குகளுக்கு தன்னை கொல்ல தகுதியில்லை என்று சொன்னார். எனவேதான் ஸ்ரீராமர் மனிதராக அவதாரம் எடுத்து குரங்குகளின் துணையோடு ராவணனை அழித்தார்.
நவமியில் அவதரித்த ஸ்ரீராமர்
சித்திரை மாதம் வளர்பிறையான நவமி திதியில் பிறந்தவர் ஸ்ரீராமர் அதைத் தான் ராம நவமி என்ற பெரும் விழாவாக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். அயோத்தி மன்னர் தசரதருக்கும் கவுசல்யாவிற்கும் நவமி திதியில் மூத்த மகனாக ராமனாக அவதரித்தார் மகாவிஷ்ணு.
யோக ஜாதகம்
ஸ்ரீராமர் கடக லக்னம், கடக ராசி அவர் பிறந்த போது, நவ கிரகங்கள் எங்கெங்கு இருந்தன என்று பார்த்தால் ஐந்து கோள்கள் உச்சத்தில் இருக்க கடக லக்னம் புனர்பூச நட்சத்திரத்தில் சந்திரனும் பிரகஸ்பதியும் இணைந்து குரு சந்திர யோகத்தில் இருக்கிறார்கள். குருவும் செவ்வாயும் நேருக்கு நேராக பார்த்து குரு மங்கள யோகத்தில் இருக்கிறார்கள். சந்திரனும், செவ்வாயும் நேருக்கு நேராக பார்ப்பதும் யோகம்தான்.
தாயின் பங்கு
கடகத்தில் லக்னத்தில் சந்திரன், குரு. லக்னாதிபதி லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். ஆறு ஒன்பத்துக்கு உரிய குரு லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். கடகம் கால புருஷத்திற்கு நான்காவது வீடு. ராமர் ஜாதகத்தில் நான்காவது வீடான துலாமில் சனி உச்சமடைந்து வக்ரமடைந்திருக்கிறார். சனி ஏழு மற்றும் எட்டிற்கு உரியவர். ராமருக்கு அம்மாவும், வளர்ப்பு தாயான சித்தியும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
சீதை ராமர்
ராமரின் அம்மா முக்கிய பங்காற்றியிருக்கிறார். நான்கில் சனி உச்சம். சனி ஆயுள் காரகன், வேலைக்காரன், தசரதனின் இன்னொரு மனைவி கையேயி ராமரின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றியவர் அவரால்தான் அவர் வனவாசம் சென்றார். ஏழாம் வீடான களத்திரம் சீதை, களத்திர காரகன் சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்துள்ளார்.
போர் செய்த ராமர்
ராமர் ஜாதகத்தில் ஆறாம் வீட்டில் ராகு இருக்கிறார். நோய், கடன், எதிரி ஸ்தானம். ராகு அரக்கன். ராவணன் என்ற அரக்கனை கொல்ல வேண்டியதுதான் ராம அவதாரத்தின் நோக்கம். ராமரின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் செவ்வாய் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். தனது மனைவியை காப்பாற்ற அவர் போர் செய்தார். செவ்வாயின் ஏழாம் பார்வை லக்னத்தின் மீது விழுந்ததே வெற்றிக்கு காரணம்.
யுத்தம் செய்த ராமர்
கர்மவினையின் பயனாக, ராம அவதார நோக்கம் நிறைவேறுவதற்காக ராமபிரான் வனவாசம் செல்ல நேர்ந்தது. அவரோடு சீதையும், லட்சுமணரும் உடன் சென்றனர். வனத்தில் இருந்தபோது, சீதையின் அழகு பற்றி அறிந்த ராவணன், அவளைக் கடத்திச் சென்றான். இதனால் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் வந்தது. வானர வீரர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு, கடலில் பாலம் அமைத்து, இலங்கை சென்ற ராமர், ராவணனை அழித்து சீதையை மீட்டார். அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநாட்டப்பட்டது.
விரதம் இருந்தால் பயன்
ராமபிரான் அவதரித்த நாளில் விரதம் இருப்பது மிகவும் நன்மை அளிக்கக்கூடியது. பிரதமை தொடங்கி நவமி வரை ஒன்பது நாட்களும் ராம நாமத்தை உச்சரித்தபடியே இருக்க வேண்டும். ஒன்பது நாட்களும் ராமபிரானுக்கு சர்க்கரைப் பொங்கல், பாயசம் என நைவேத்தியம் படைத்து வழிபடுவது சிறப்பு. ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்தி வணங்குங்கள். ஒன்பது நாட்களும் நைவேத்தியம், மாலை அணிவிக்க முடியாதவர்கள், ராமநவமி அன்று மட்டுமாவது அதைச் செய்வது நல்லது. இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் நினைத்த காரியங்கள் கைகூடும். செல்வம், புகழ் உள்ளிட்ட எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
நவகிரக தோஷம் நீங்கும்
மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணம் ராம அவதாரம். ராமன் தன் அவதாரம் மூலம், உலகுக்கு உணர்த்தாத பொருளே இல்லை, உரைக்காத உண்மையில்லை. தந்தை சொல் கேட்டல், உடன்பிறப்பு ஒற்றுமை, தாய்க்குச் சிறந்த மகனாக இருத்தல், வாக்குத் தவறாமை, ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஏகபத்தினி விரதம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஓர் இல், ஒரு சொல், ஒரு வில் என வாழ்ந்து வழிகாட்டியவர் ஸ்ரீராமர். அவரது ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து பூஜை செய்தால் ஜாதக ரீதியாக இருக்கும் நவகிரக தோஷங்களும் நீங்கும்.