சிவ ரூபமான ஆதி சங்கரர்... பெருமாள் ரூபமான ராமானுஜர் - அவதார ஜெயந்தி விழா
அத்வைத தத்துவத்தை உலகிற்கு நிலைநாட்டிய ஆதிசங்கரர் சிவ ரூபமானவர், சைவம் தழைக்க நாடுமுழுவதும் பயணப்பட்டவர். விசிஷ்டாத்வைத தத்துவத்தை பரப்பிய ராமானுஜர் மதத்தில் புரட்சி செய்த மகான். இரண்டு துறவிகளின் அவத
சென்னை: மகான்கள் இந்த மண்ணுலகில் அவதரித்து மக்களின் வாழ்வை மேம்படுத்துகின்றனர். திருவாதிரை நட்சத்திரத்தில் ஆதிசங்கரரும், ராமானுஜரும் அவதரித்து இந்த பாரத மண்ணில் வாழ்ந்து மக்களுக்கு பல நன்மைகள் செய்துள்ளனர். சைவம், வைணவம் தழைத்தோங்கச் செய்த மகான்களின் அவதார தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூரில் சித்திரை மாதம் திருவாதிரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெருமாளின் அவதாரமாக தோன்றிய மகான் ஸ்ரீ ராமானுஜர். ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து திருமந்திரத்தை திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீதேறி உலகமே அறியும் படி உரக்க கூறியவர்.
மதத்தில் புரட்சி செய்த மகான் ராமானுஜரின் 1002வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ ராமானுஜர் திருப்பாற்கடலில் ஸ்ரீமந்நாராயணனின் படுக்கையாக உள்ள ஆதிசேஷன், ராமாவதாரத்தில் ராமர் தம்பி லஷ்மணனாகவும், கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணருக்கு அண்ணன் பலராமராகவும் தோன்றினார் என்கின்றன புராணங்கள். அந்த ஆதிசேஷனே கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராக ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார் என்பது நம்பிக்கை. அதேபோல சிவபெருமானே ஆதிசங்கரர் ஆக இந்த மண்ணுலகில் அவதரித்துள்ளதாக சைவ சமயத்தினர் போற்றி வழிபடுகின்றனர்.
ஆதிசங்கரர் அவதார ஜெயந்தி
கேரள மாநிலம் காலடி என்கிற சிறிய கிராமம் புண்ணியம் செய்திருக்கிறது. அங்குதான் ஆதிசங்கரரின் அவதாரம் நிகழ்ந்திருக்கிறது. சிவகுரு ஆர்யாம்பாள் தம்பதியருக்கு ஞானக்குழந்தையாக வைகாச மாதம் சுக்ல பட்ச பஞ்சமி திதியில் திருவாதிரையில் அவதரித்துள்ளார். சிவனின் அம்சமாக இந்த மண்ணில் தோன்றி சைவம் தழைக்க நாடு முழுவதும் யாத்திரை சென்றிருக்கிறார். முனிவர்களும், யோகிகளும் வளர்த்த புண்ணிய பூமியாகிய நம் பாரத அன்னை பொலிவிழந்து இருந்த நேரத்தில் சங்கரர் தன் குறுகிய வாழ்நாளில் வைதிக தர்மத்திற்கு புதுப் பொலிவூட்டி உயிர்ப்பித்தார்.
தங்கமழை பெய்வித்த மகான்
ஒரு நாள் ஒரு ஏழை பெண்மணியின் வீட்டிற்குச் சென்று பிக்ஷை கேட்க நேரிட்டது. அன்று துவாதசி. தன்னிடம் ஒன்றும் இல்லாத காரணத்தினால் அந்த எளிய பெண்மணி தான் உண்ண எடுத்து வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை மனப்பூர்வமாக சங்கரருக்கு கொடுத்தார். அப்போது சங்கரர் உள்ளம் குளிர்ந்து செல்வத்தின் கடவுளான ஸ்ரீ லக்ஷ்மி தேவியை வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம் என்கிற ஸ்லோகத்தை பாட, அப்போது ஸ்ரீ லக்ஷ்மி தேவி அருளால் அந்த எளியவளின் கூரை வீட்டின் மீது தங்க நெல்லிக்கனிகள் மழையாக பொழிந்தது.
ராமானுஜர் அவதாரம்
புரட்சித்துறவி என போற்றப்படும் ராமானுஜர் 1,017ம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதுாரில் அவதரித்தார். 16 வயதில் அவரை சீடனாக ஏற்ற பெரியநம்பி பஞ்ச சமஸ்காரம் என்னும் சடங்கை செய்து ராமானுஜர் என பெயரிட்டார். அந்தப் பெயரே நிலைத்து விட்டது.
திருமணம் முடிந்தாலும் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால், ராமானுஜர் துறவறம் மேற்கொண்டார். அவரது துறவுக் கோலத்தைப் பார்த்த திருக்கச்சிநம்பிகள் துறவிகளின் அரசன் என்று பொருள் வரும்படியாக 'யதிராஜரே' என அழைத்தார். ராமானுஜர் பிட்சைக்குப் போகும் போது ஆண்டாளின் பாசுரங்களைப் பாடுவது வழக்கம். இதனால் 'திருப்பாவை ஜீயர்' எனப்பட்டார்.
புரட்சித்துறவி ராமானுஜர்
கடவுளின் முன் அனைவரும் ஒன்றே என்னும் சமத்துவ தர்மத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கிய புரட்சித் துறவி ராமானுஜர்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த திருக்கச்சி நம்பியை தனது குருவாக ஏற்றுக்கொண்டவர். உறங்காவில்லி தாசர் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவரை தனது சீடராக ஏற்றுக்கொண்டவர். ராமானுஜரை பெருமாளாகவே கண்ட மக்கள் பக்தியுடன் எம்பெருமானார் என அழைத்தனர்.
120 ஆண்டுகள் வாழ்ந்த மகான்
120 ஆண்டுகள் வாழ்ந்த அவரை கடவுளின் அவதாரமாகவே மக்கள் வழிபட்டனர். கர்நாடக மாநிலம் திருநாராயணபுரத்திலும், ஸ்ரீபெரும்புதூரிலும் தான் வாழ்ந்த காலத்திலேயே சிலையை பிரதிஷ்டை செய்து அதனைக் கட்டித்தழுவி ஆற்றலை புகுத்தியதோடு இந்த சிலை வடிவில் நான் இருப்பேன் என்று கூறிவிட்டு ஸ்ரீரங்கம் சென்றார்.
ஸ்ரீரங்கநாதரிடம் சரணடைந்த மகான்
ஸ்ரீரங்கத்தில் தனது வாழ்நாளை முடித்துக்கொண்டு பரமபதத்தை அடைந்தார். ஸ்ரீரங்கம் கோயிலில் வசந்த மண்டபம் அருகே தென்கிழக்கு மூலையில் தனிச்சன்னிதியில் வைத்து வழிபட்டு வருகின்றனர். பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, அரிய மூலிகைகளால் பதப்படுத்தப்பட்டதால், இன்றும் உயிருடன் இருப்பது போல் காட்சி தருகிறார். சித்திரை திருவாதிரை மற்றும் ஐப்பசி திருவாதிரை நாட்களில் பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ தைலத்தால் காப்பிடுகின்றனர்.
1002வது அவதாரத்திருநாள்
மகான் ராமானுஜரின் 1002ஆம் ஆண்டு அவதாரத்திருவிழா கடந்த 30ஆம் தேதி ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஆதிசேஷனின் அம்சமான ராமானுஜரை வணங்கினால் ராகுவினால் ஏற்படும் மாங்கல்ய தோஷம், புத்தர பாக்கியமின்மை மற்றும் கேதுவினால் ஏற்படும் வாதக்கோளாருகள் போன்ற காலசர்ப்ப தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கையாகும்