காசிக்கு போனாலும் கிடைக்காத ஸ்ரீரங்கம் கருடசேவை - நாளை மாசி தெப்ப உற்சவம்
ஸ்ரீ ரங்கத்தில் மாசி மாத கருட வாகனத்தில் உலா வரும் பெருமாளை தரிசனம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும் என்பது நம்பப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கருட சேவை தெப்பத்திருவிழாவின் நான்காம் நாளன்று மார்ச் 1
திருச்சி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசி தெப்ப உற்சவம் நாளை மார்ச் 5ஆம் தேதி நடைபெறுகிறது. தெப்ப திருவிழாவின் முக்கிய அம்சமான வெள்ளி கருடசேவை மார்ச் 1ஆம் தேதி நடைபெற்றது. இதனை முன்னிட்டு, நம்பெருமாள், வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆஸ்தான மண்டபத்தில் இருந்து வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் நான்கு உத்திர வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெரிய திருவடி என பக்தர்களால் வணங்கப்படுபவர் கருடாழ்வார். கருடன் கடவுளாகவும் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் ஏற்று இந்துக்களால் வணங்கப்படுகிறார். பெருமாள் கருடனை வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய் என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
கருட வாகன சேவை
ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோவிலில் செப்புச் சிலை வடிவில் மிகப்பெரிய உயரமான கருடன் தனி சன்னதி கொண்டுள்ளார். நாச்சியார் கோவிலில் கல்கருடன் தனி சன்னிதியில் கம்பீரமாக காட்சி தருகிறார். தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம், திருநாங்கூர்,கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய கோயில்களில் கருட சேவை நிகழ்ச்சி ஆண்டு தோறும் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. அதே போல ஸ்ரீரங்கத்தில் மாசி மாதம் தெப்பத்திருவிழாவின் நான்காம் நாளில் நடைபெறும் கருடசேவை பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி கருடசேவை நடைபெற்றது.
நம்பெருமாள் வீதி உலா
ஸ்ரீரங்கம் கோயில் வாகனங்களுக்கு தனி மகத்துவம் உள்ளது. மாசி மாதம் மட்டும் நடைபெறும் வெள்ளி கருடசேவை சிறப்பு வாய்ந்தது. வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா வந்தபின், கருடனுக்கு கொழுக்கட்டை அமுது படைக்கப்பட்டது. அப்போது மாசி கருடனை தரிசனம் செய்வதால் காசிக்கு சென்ற பலன் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
காசியில் கிடைக்காத சிறப்பு
ஸ்ரீரங்க ஸ்தலமானது சுக்ர ஸ்தலம் என்பதால் இங்கு வெள்ளி உலோகம் மிகவும் விசேஷமானது. இத்தகைய சிறப்பு வாய்ந்தது மாசி கருடன். இது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வரும் மிக விசேஷமான காட்சி. இந்த வெள்ளி கருட சேவையின் சிறப்பைக் கூறும் மாசி கருடன் காசியிலும் கிடைக்காது என்ற பழமொழி பழக்கத்தில் உள்ளது.
முன்னோர்களின் ஆசி கிடைக்கும்
இது தவிர நாக தோஷம் மற்றும் களத்திர தோஷம் உடையவர்கள் கருட வாகனத்தில் வலம் வரும் பெருமாளை தரிசிப்பதால், அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி சகலசெல்வங்களும் பெறுவார்கள் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. கருட சேவையை தரிசிப்பதற்கு , மறைந்த முன்னோர்களான பித்ருக்களும் வருவார்கள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கருட சேவையை தரிசிக்க சென்றால் பெருமாள் ஆசியுடன், நம் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். சுவாதி நட்சத்திர நாளில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று கருடனை வழிபடுவதால் திருமணம் யோகம் மற்றும் வாகன யோகமும் உண்டாகும் என்பது மக்களின் நம்பிக்கை.
தெப்பத்திருவிழா
மாசி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு தினமும் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 6ஆம் திருநாளான நாளான நேற்று வெள்ளி யானை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்தார். இன்று மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்திருவீதிகளில் உலா வருகிறார்.
மாசி தெப்பத் திருவிழா
மாசி மாத தெப்ப உற்சவத்தின் முக்கிய அம்சமான தெப்பத்திருவிழா நாளை நடைபெறுகிறது. நாளை மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார்.
இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
பெருமாளின் அருள்
வெள்ளிக்கிழமை காலையில் பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவதுடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.
பெருமாள் கோவில்களில் கருடனுக்கு தனி சன்னதிகள் உள்ளன. பெருமாளை சுமக்கும் கருட வாகனம் இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல உருக்கொண்டு, கருடன் போன்ற வளைந்த மூக்குடன் கூடிய முக தோற்றத்தில் இரு பெரும் கரங்களை பெருமாளின் பாதங்களை ஏந்துவதற்காக முன்புறம் நீட்டியவாறு இருப்பார்.