ஸ்ரீரங்கத்தில் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்... நாச்சியாரை தரிசித்த பக்தர்கள்
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் நாளை அதிகாலை திறக்கப்படுகிறது. பகல் பத்து திருவிழாவில், நம்பெருமாள் நாள்தோறும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். பகல்பத்தின் கடைசி நாளான இன்று, நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் ரத்தினகிரி, ரத்தினம் பதித்த தங்க அபயஹஸ்தம் அணிந்தும், வாசனைமிக்க ஏலக்காய் ஜடையினை தரித்தும் மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் வெள்ளிப்பல்லக்கில் உலாவந்தார்.
அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்த நம்பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
இந்த பிறவியே போதும் இனி ஒரு பிறவி வேண்டாம் இறைவனின் பாதங்களில் சரணடைந்து விடுவோம் என்ற எண்ணம்தான் பலருக்கும் வருகிறது. அவ்வாறு சொர்க்கத்திற்கு போக நினைப்பவர்கள் வைகுண்டத்திற்கு செல்வதா கைலாயத்திற்கு செல்வதா என்ற குழப்பத்திலும் இருப்பவர்கள். சைவர்கள் சிவன் வசிக்கும் கைலாயத்திற்கும் செல்ல வேண்டும் என்று விரும்புவார்கள்.
விஷ்ணுவை வணங்குபவர்கள் வைகுண்டத்திற்கு செல்ல வேண்டும் என்று விருப்பத்தை சொல்வார்கள். அத்தகைய பெருமை மிகு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நாளை பெருமாள் ஆலயங்களில் நடைபெற உள்ளது. 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 26ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் காலை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி வருகிறார். தினசரியும் அரையர் சேவையும் நடைபெறுகிறது.
பகல்பத்து உற்சவ 10வது நாளான இன்று நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் இன்று காலை மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். காலை 7.30 மணி முதல் 11 மணி வரை அரையர் சேவையுடன் பொது ஜன சேவை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்படுகிறார். இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இன்று மூலவர் முத்தங்கி சேவைக்கு பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 4.30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். மாலை 4.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவைக்கு அனுமதி கிடையாது.
நாளைய தினம் ஜனவரி 6ஆம் தேதி பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளதால் ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் அதிகாலை 3.45மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு திருஆபரணங்கள் அணிந்து புறப்படுகிறார். தங்கக் கொடி மரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரம பதவாசலை அடைகிறார். பின்னர் சொர்க்க வாசலை கடந்து திருக்கொட்டகையில் பக்தர்கள் மத்தியில் எழுந்தருள்வார்.
நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றால் பிறவி பலனை அதாவது மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம். தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வந்துள்ளதால் கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு நாளை திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.
தமிழகம் முழுவதும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. திருப்பூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக லட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி காலையில் சிறப்பு வழிபாடு, சாமி பவனி போன்றவை நடைபெறுகிறது. வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன்கோவில், ஏழகரம் பெருமாள் கோவில் கிருஷ்ணன்கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்.