ஆடிப்பூரம் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் பரிசளித்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர்
ஆடிப்பூரம் நாளில் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து ரங்கநாதர் பட்டு வஸ்திரமும் மங்கள பொருட்களும் பாரிசாக அனுப்பி வைத்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: இன்று ஆண்டாள் அவதார தினம் கொண்டாடப்படுகிறது. இந்த பூவுலகில் துளசி மாடத்தில் அவதரித்து தன்னையே நினைத்து தன்னையே மணந்த ஆண்டாளுக்கு ஆண்டுதோறும் ஆடிப்பூர நாளில் ஸ்ரீரங்கநாதர் பட்டு வஸ்திரம் பரிசளிப்பது காலம் காலமாக நடந்து வருகிறது. அந்த பட்டு வஸ்திரங்களையும் மங்களப்பொருட்களையும் ஆண்டாள் அணிந்து கொண்டு ரங்கமன்னாருடன் தங்கத்தேரில் எழுந்தருளி வலம் வருவதைக்காண கண் கோடி வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியால் அவருக்கு பூ மாலையுடன் பாமாலை சூட்டியதோடு அவரிடமே மணமாலையும் சூடிக்கொண்டாள். இதனால் ஆண்டாளுக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்ற சிறப்பு பெயரும் ஏற்பட்டது. ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்குமிடையே சம்பந்த உறவும் மங்கள பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலம் இருந்து வந்தது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் சித்திரை தேரோட்டநாளில் ஆண்டுதோறும் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து மங்கல பொருட்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படும் அதேபோல ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் பிறந்த நாளான ஆடிப்பூரத் தினத்தன்று நடைபெறும் தேரோட்டத்தின்போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திர மரியாதை ஆண்டாளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் கடந்த 16ஆம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. கோவில் வளாகத்திற்குள்ளேயே வாகன புறப்பாடுகள் நடந்து வருகின்றன. முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் நடைபெறவில்லை அதற்கு பதிலாக, கோவில் வளாகத்திற்குள் தங்க ரத புறப்பாடு நடைபெறவுள்ளது. இதில் ஆண்டாள் ரங்கமன்னார் வலம் வரவுள்ளனர்.
இன்று நாக சதுர்த்தி : உங்களுக்கு நாக தோஷம் இருக்கா மறக்காம புற்றுக்கு பால் ஊற்றி வணங்குங்க
இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்டத்தினை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து ஆண்டாள், ரங்கமன்னார் மற்றும் கருடனுக்குப் பட்டு வஸ்திரங்கள் மஞ்சள், குங்குமம், பழங்கள் உள்ளிட்ட மங்களபொருட்கள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இவை முறைப்படி வியாழக்கிழமை மதியம் ஆண்டாள் கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வஸ்திரங்கள் அணிந்து ரங்கமன்னாருடன் ஆண்டாள் தாயார் எழுந்தருளிகிறார். தங்கத்தேரோட்டம் கோவில் வளாகத்திற்குள் நடைபெறுகிறது.