ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள்... விரதமிருந்து விஷ்ணுவை மணந்த புராண கதை
நோன்பிருந்து நல்ல கணவனை, மனைவியை அடைவது என்பது பாவை நோன்பின் முக்கிய அம்சம். பாவை நோன்புக்காக ஆண்டாள் அருளியதே திருப்பாவை.
Recommended Video
சென்னை: ஆண்டாள் மகாலெட்சுமி அவதாரமாக பெரியாழ்வாரின் நந்தவனத்தில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். பாவை நோன்பிருந்து அந்த இறைவனையே கணவராக அடைந்தார்.
தேவர்களது பிரம்ம முகூர்த்த காலமாகிய மார்கழியில், இறைவனை வழிபட்டால், சகல நன்மைகளும் உண்டாகும் எங்கின்றன சாஸ்திரங்கள். எனவேதான் ஆண்டாளும் மார்கழி மாதத்தைத் தேர்ந்தெடுத்து திருப்பாவை
நோன்பு ஏற்றாள்.
பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளாக வளர்ந்த ஆண்டாள் சிறு வயதிலிருந்தே கண்ணன் மீது தீராத காதல் கொண்டு திருப்பாவை மற்றும் நாச்சியார் திருவாய்மொழி இயற்றியவர். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.
ஆண்டாள் அருளிய திருப்பாவை
ஆண்டாளின் அவதாரத் தலமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்த மார்கழி மாதத்தில் நடைபெரும் திருப்பாவைத் திருவிழா சிறப்பு வாய்ந்தது. ஆண்டாளின் திருப்பாவை கொண்டே அனைத்துக் கோயில்களிலும் மார்கழி மாதம் பெருமாளை வழிப்படுகிறார்கள். திருமலை திருப்பதியில் மார்கழி உற்சவத்தில் அதிகாலை சுப்புரபாதம் பாடுவதற்குப் பதிலாக திருப்பாவை பாசுரம் பாடப்படுகிறது.
ஆண்டாள் அவதார தலம்
108 திவ்விய தேசங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆலயமும் ஒன்று! எல்லாவற்றுக்கும் மேலாக, கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்று ஸ்ரீவில்லிபுத்தூரை சொல்வார்கள். நளவருடம் ஆடி மாதம் செவ்வாய்க்கிழமையும் பூர நட்சத்திரமும் கூடிய அந்த திருநாள், பெரும் புண்ணியம் கட்டிக்கொண்டது. இந்த தினத்தில் தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் , பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனத்தில், துளசிச் செடியின் கீழ் லட்சுமியின் அம்சமாய் அவதரித்தாள் ஆண்டாள். செவ்வாய்கிழமையன்று ஆண்டாள் அவதரித்த துளசி வணத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டியவை நிறைவேறும் என்பது நம்பிக்கை.
கடவுளின் மாலை
நந்தவனத்தில் இருந்து சுத்தமாய் பறித்த மலர்களை மாலையாக தொடுத்து அரங்கனுக்கு சூட்டுவது பெரியாழ்வாரின் முக்கிய பணிகளில் ஒன்று. நந்தவனத்தில் பறிக்கும் பூக்களை இறைவனுக்கு மாலையாகக் கட்டி வைப்பார் பெரியாழ்வார். அதை முதலில் அதை தன் கழுத்தி சூடி, இறைவனுக்கு தாம் ஏற்ற பொருத்தம் உடையவளா என்பதைக் கண்ணாடியிலே கண்டு களிப்பாள் ஆண்டாள். பிறகு மாலையைக் கழட்டி வைத்து விடுவாள். இதை கண்ட பெரியாழ்வார் ஆண்டாளை சத்தம் போட, இறைவனோ, ஆண்டாள் சூடிய மாலையை அணிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.
ஆண்டாள் விரதம்
ஆண்டாளுக்கு ஆண்டவன் மீது காதல். இறைவனை மணமுடிக்க எண்ணி விரதமிருந்தார். இறைவனும் தாம் கோதையை நேசிப்பதாகவும் தன்னை திருவரங்கரத்திற்கு வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்தார். அதையடுத்து, பூப்பல்லக்கில் ஸ்ரீரங்கம் சென்று இறைவனோடு ஐக்கியமானாள். ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கோதையோடு சேர்ந்து எழுந்தருள வேண்டும் என்று பெரியாழ்வார் பிரார்த்திக்க, இறைவனும் அதை ஏற்று இத்தலத்தில் எழுந்தருளினார்.
கள்ளழகருக்கு ஆண்டாள் மாலை
ஆண்டாள் சூடிக்களைந்த மாலை இன்றைக்கும் பெருமாளுக்கு சாத்தப்படுகிறது. திருமலை திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவ நிகழ்ச்சியின்போது திருவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை மற்றும் வஸ்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு பெருமாளுக்கு சாற்றப்படுகிறது. மதுரை சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாகப் பார்க்கப்படும் கள்ளழகர் வைகையற்றில் இறங்கும் வைபவத்தில் ஆண்டாள் மாலை கள்ளழகருக்கு தல்லாகுளத்தில் அணிவிக்கப்படுகிறது.
வேண்டுதல் நிறைவேறும்
ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கிழக்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள். பொதுவாக கிழக்கு நோக்கியிருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வி ஞானம், வியாபார விருத்தி, குடும்ப ஜஸ்வர்யம் கிடைக்க, விவசாயம் செழிக்க இத்தல பெருமாளிடம் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.