ஸ்டாலினுக்காக ஸ்ரீரங்கத்தில் சுக்கிர ப்ரீத்தி யாகம்- தமிழகத்தின் தலைமை பதவி தேடி வருமா?
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலில் சுக்ர ப்ரீத்தி யாகம் நடத்தியதுதான் இப்போதய பரபரப்பான பேச்சாக உள்ளது.
Recommended Video
திருச்சி: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சார்பில் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் சுக்கிர ப்ரீத்தி யாகம் நடத்தினார்களாம். ஸ்ரீரங்கநாதருக்கு வெண்மை நிற வஸ்திரம் அளித்து இருபத்து ஐந்து பேருக்குத் தானம் கொடுத்திருக்கிறார்களாம். தமிழகத்தின் தலைமை அதிகாரமும், தலைமை பதவியும் பெறவே இந்த யாகம் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நவகிரகங்களில் சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. ஒருவருக்கு வளமான வாழ்க்கை, செல்வம், ஆடம்பர வாழ்க்கை கிடைக்க சுக்கிரனின் அனுக்கிரகம் அவசியம். சுக்கிரன் அருள் இல்லையென்றால் வசதியான வாழ்க்கை கிடைக்க வாய்ப்பு இல்லை. சுக்ர ப்ரீத்தி யாகம் செய்தால் அதிகாரம், பதவி, செல்வம் ஆகியவை தேடிவரும் என்பது நம்பிக்கை. எனவேதான் வசதியாக வாழ்பவர்களைப் பார்த்து சுக்கிரதிசை அடிக்குதுப்பா என்று பேசுவார்கள்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் சுக்கிர ஸ்தலம். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சிம்மராசி பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர். பூரம் நட்சத்திரம் சுக்கிரனுக்கு உரியது. எனவேதான் வெள்ளிக்கிழமையான இன்று ஸ்டாலின் ஸ்ரீரங்கம் சென்று சுக்கிர ப்ரீத்தி யாகத்தில் பங்கேற்றார் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் சமயம், இங்கேயே முகாமிட்டு பிரசாரம் செய்தபோதுகூட ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஸ்டாலின் சென்றதில்லையாம். ஸ்டாலின் மனைவி துர்க்கா ஸ்டாலின், பல முறை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்றபோதும், ஸ்டாலின் மட்டும் ரங்கநாதரை தரிசனம் செய்ததே இல்லை. ரங்கா ரங்கா கோபுரம் இருக்கும் பக்கம் கூட வர மாட்டாராம். ஆனால் இப்போது ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்ற ஸ்டாலின், அங்கே பட்டர்களின் பூரண கும்ப மரியாதை வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
ஸ்டாலினுக்காக ரங்கநாதர் கோயிலுக்குள் சுக்கிர ப்ரீத்தி யாகம் நடைபெற்றது என்றும் அதற்காகவே ஸ்டாலின் ரங்கா ரங்கா கோபுர வாசல் வரை வந்திருக்கிறார் என்றும் பேசப்பட்டது. ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் உக்கிரமாகவோ வக்கிரமாகவோ இருந்தால் அதை சாந்தப்படுத்துவதற்கான பரிகாரத் தலங்களில் முக்கியமானது ஸ்ரீரங்கம். சுக்கிரன் என்பது அனைவராலும் விரும்பப்படுவதற்குரிய கிரகம் என்கிறது ஜோதிடம்.
அந்த வகையில் ஸ்டாலின் ஜாதகத்தில் இப்போது சுக்கிரன் சரியில்லாத நிலையில் இருப்பதால் அதனை சரி செய்யவே ரங்கநாதர் ஆலயத்தில் பரிகாரம் செய்துள்ளனராம். இதன் மூலம் ஸ்டாலின் பொதுமக்களால் இன்னும் அதிகம் விரும்பப்படும் தலைவராக மாறுவார். அதாவது தேர்தலில் பெருவாரியாக வெற்றி பெற்று முதல்வர் ஆவார் என்றும் ஸ்டாலின் குடும்பத்தாரிடம் ஜோதிடர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்தே கடந்த நான்கு நாட்களாக கோயிலுக்குள் சுக்கிர ப்ரீத்தி யாகம் நடைபெற்றது.
யாகம் முடியும் நாள் சுக்கிரனுக்கு உகந்த வெள்ளிக்கிழமையாக இருக்கவே, இன்று காலை ஸ்ரீரங்கத்தில் நடந்த திருமணத்துக்கு வந்தவர், கோயிலுக்குள் வராமல் ரங்கா ரங்கா கோபுரம் வரைக்கும் வந்து பட்டர்கள் அளித்த பூரண கும்ப மரியாதையை ஏற்றுக்கொண்டு அவர்கள் அளித்த பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு சென்றுள்ளார் என்கின்றனர்.
கர்நாடக முதல்வராக இப்போது இருக்கும் குமாராசாமியின் ஜாதகத்திலும் சுக்கிரன் உக்கிரமாக இருந்தார். அதனால் ஜோதிடர்களின் ஆலோசனைப்படி தேர்தலுக்கு முன்பே அவரது அண்ணன் ரேவண்ணா ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்து ஐந்து நாட்கள் சுக்கிர ப்ரீத்தி யாகம் நடத்தினார். அதன் பிறகே யாருமே எதிர்பாராத வகையில் குமாரசாமி முதல்வர் ஆகிவிட்டார் என்று ஸ்டாலின் காதை கடித்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இஷ்ட தெய்வமாக திகழ்பவர் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர். இந்த ஆலயத்திற்காக பல கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது ஸ்ரீ ரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வரானார் ஜெயலலிதா. யார் கண்டது அடுத்த சட்டசபைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் ஸ்ரீ ரங்கம் தொகுதியில் போட்டியிட்டாலும் ஆச்சரியமில்லை.