உங்க எதிர்கால மனைவி இந்த ராசியா? செக் பண்ணுங்க மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும்
திருமணத்திற்கு வரன் பார்க்கும் போது எந்த ராசி நட்சத்திரம் என்று மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் பொருத்தம் பார்ப்பார்கள். சில ராசிக்கார பெண் அமைந்தால் உடனே ஓகே சொல்லி விடுங்கள் அவர்கள் ரொம்ப பெஸ்ட் ஆக இர
மதுரை: கல்யாணம் பண்ணியும் சிலர் பிரம்மசாரிகளாக இருப்பார்கள். சிலர் வீட்டிலோ கணவன் மனைவிக்கான நெருக்கமும் அந்நியோன்யங்கள் இல்லாமல் ஏதோ கடமைக்காக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இதற்குக் காரணம் சரியாக பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்து வைத்திருப்பதுதான். ஆணோ, பெண்ணோ தங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத்துணை கஷ்டமோ நஷ்டமோ கடைசி வரைக்கும் கை பிடித்து கூட நடக்க வேண்டும் என்று விரும்புவார்கள். வரன் பார்க்கும் போதே சில ராசிக்களில் பிறந்த பெண் அமைந்தால் விட்டு விட வேண்டாம் உடனே ஓகே சொல்லி திருமணம் செய்து விடுங்கள் அந்த வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.
சிலருக்கு மட்டுமே மனைவி கடவுள் கொடுத்த வரமாக அமையும் சிலருக்கு சாபமாக அமைந்து விடும். தேவ குணம், மனித குணம் இல்லாமல் ராட்சஸ குணம் அதிகம் கொண்டவர்கள் வாழ்க்கை துணையாக அமைந்து விட்டால் அவ்வளவுதான் காலம் பூராவும் மல்லுக்கட்டிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.
சில ராசி நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே தேவ குணம் கொண்டவர்களாகவும் மனித குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அத்தகைய ராசி, நட்சத்திரங்களில் பிறந்த பெண் உங்களை தேடி வந்தால் கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள் விட்டு விட வேண்டாம். மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசியில் பிறந்த பெண்கள் கணவரிடம் பாசமும் நேசமும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.
பாசக்கார பெண்கள்
மேஷம் நெருப்பு ராசி அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரத்தின் 1ஆம் பாதம் கொண்ட நட்சத்திரங்கள் இந்த ராசியில் உள்ளது. செவ்வாய் ராசி அதிபதியாக இருந்தாலும் கேது, சுக்கிரன், சூரியன் கிரகங்கள் இந்த நட்சத்திரங்களை ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த ராசிக்காரர்கள் பொதுவாகவே கோபம் அதிகம் கொண்டவர்களாக இருந்தாலும் நல்ல குணசாலிகளாகவும் அடுத்தவரின் மனதை புரிந்து கொள்பவர்களாவும் விட்டுக்கொடுத்து செல்பவர்களாகவும் இருப்பார்கள். இந்த ராசி பெண்கள் கணவனை சந்தோஷப்படுத்துவதில் கெட்டிக்காரர்கள்.
காதலான பெண்கள்
ரிஷபம் ராசிக்காரர்களில் பிறந்தவர்கள் கார்த்திகை 3 பாதங்கள், ரோகிணி, மிருகஷீரிடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இருப்பார்கள். இந்த ராசி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் காதலும் நேசமும் கொண்டவர்கள். சுக்கிரன் ஆதிக்கம் ராசியில் இருந்தாலும் நட்சத்திரங்களை சூரியன், சந்திரன், செவ்வாய், கிரகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த ராசி, நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பாசத்தோடும் நேசத்தோடும் இருப்பார்கள். அன்பிற்கு அடிமையான இந்த ராசி பெண்கள் தங்களின் கணவர் அன்பானவராக இருந்தால் எதையும் செய்து முடிப்பார்கள்.
மிதுனம்
புத்தி காரகன் புதன் ஆதிக்கம் நிறைந்த புதன் ராசியில் மிருகஷீரிடம் 2 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 3 பாதங்கள் அமைந்துள்ளன. செவ்வாய், ராகு, குரு கிரகங்களின் ஆதிக்கம் இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இருக்கும். கனிவானவர்கள் அதே நேரத்தில் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபத்தை வெளிப்படுத்துவார்கள். குணவதிகளாக இருக்கும் இந்த ராசிக்கார பெண்கள் தங்களின் கணவரிடம் பாசமும், விஸ்வாசமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் துணையாக அமைந்தால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக மாறி விடும்.
கடகம்
சந்திரன் ஆதிக்கம் நிறைந்த கடகம் ராசியில் புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம் நட்சத்திரங்கள் அமைந்துள்ளன. குரு, சனி, புதன் கிரகங்களின் ஆதிக்கம் இந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் இயல்பாகவே பாசத்தை மழையாக பொழிபவர்கள். அன்புடனும் அனுசரணையாகவும் நடந்து கொள்வார்கள். குடும்பத்தை கட்டுப்கோப்பாக நடத்துவதில் வல்லவர்கள்.
சிம்மம்
சூரியன் ஆதிக்கம் நிறைந்த சிம்மம் ராசியில் பிறந்தவர்கள் இந்த ராசியில் மகம், பூரம், சித்திரை 1 பாதம் நட்சத்திரங்கள் உள்ளன. கேது, சுக்கிரன், சூரியன் ஆதிக்கம் நிறைந்திருக்கும் இந்த ராசிக்கார பெண்கள் நேர்மையானவர்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள். கணவருடன் கரம் கோர்த்து கடைசி வரைக்கும் கூட நடப்பார்கள். இவர்களின் முடிவும் தேர்வும் சரியாகவே இருக்கும்.
மீனம்
குருவின் ஆதிக்கம் நிறைந்த மீனம் ராசியில் பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்கள் உள்ளன. குரு, சனி, புதன் கிரகங்களின் ஆதிக்கம் கொண்டவர்கள். இந்த ராசியில் பிறந்த பெண்கள் மென்மையானவர்கள். அன்பானவர்கள், அனுசரணையானவர்கள். இனிமையான பேச்சும், குணமும் கொண்டவர்கள். அமைதியை விரும்பும் இவர்கள் கணவனுடன் தோளோடு தோள் நிற்பார்கள்.
வரமா சாபமா?
இந்த ஆறு ராசிகள் தவிர மற்ற ஆறு ராசிகளில் பிறந்த பெண்கள் குடும்பம் நடத்த சரிப்பட்டு வரமாட்டார்களா என்று கேட்பது காதில் விழுகிறது. இந்த ராசி நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். எந்த ராசியில் பிறந்த பெண்ணாக இருந்தாலும் அனுசரணையாக விட்டுக்கொடுத்து சென்றால் மனைவி தேவதையாக இருப்பார்கள். அப்படி இல்லாமல் அடிதடியில் இறங்கி பெண்களை அடிமையாக நடத்தினால் பெண்களின் உண்மையான சுயரூபத்தை ஆண்கள் பார்க்கத்தான் வேண்டியிருக்கும். மனைவி தேவதையாக இருப்பதும் ராட்சஸியாக மாறுவதும் ஆண்களின் கையில்தான் இருக்கிறது.