சூரிய கிரகணம்: சுசிந்திரம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் டிச.25ல் ஆஞ்சநேயர் ஜெயந்தி
டிசம்பர் 26ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ளதால் அன்றைய தினம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் டிசம்பர் 25ம் தேதியன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது.
நாகர்கோவில்: கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் வரும் டிசம்பர் 25ஆம் தேதியன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், டிசம்பர் 26ஆம் தேதியன்று சூரியகிரஹணம் நிகழ்வதால், அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும். இதன் காரணமாக, ஆஞ்சநேயர் ஜெயந்தியை ஒருநாள் முன்னதாக 25ஆம் தேதியன்றே கொண்டாடுவது என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் ஏராளமாக உள்ளன. அதில் மிகவும் பழமைவாய்ந்த கோவில் தாணுமாலயசுவாமி கோவில். சிவன் (தாணு) விஷ்ணு(மால்) பிரம்மா (அயன்) மூவரும் இணையப்பெற்றதால் இக்கோவில் உருவானதாக தலவரலாறு கூறகிறது. இந்திரன் தினமும் இரவு நேரத்தில் இந்த கோவிலுக்கு வந்து அர்த்த ஜாம பூஜை செய்வதாக ஐதீகம்.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இக்கோவில் உருவானதாக சொல்வதுண்டு. இக்கோவிலின் பல பாகங்களும் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அரசர்களாலும், பொதுமக்கள் ஒத்துழைப்புடனும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இக்கோவில் உள்ள 18 அடி உயரமுடைய விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உலகப் புகழ் பெற்றதாகும்.
அந்நியர்களின் படையெடுப்பின் போது இக்கோவில் சிலைகளை காப்பாற்றும் பொருட்டு இந்த ஆஞ்சநேயர் சிலையானது மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது. மீண்டும் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் கழித்து 1929ஆம் ஆண்டில், மேற்கு கோபுர வாசலுக்கு நிலத்தை தோண்டும்போது தான் இச்சிலை கண்டெடுக்கப்பட்டு, ஸ்ரீராமபிரான் சந்நிதிக்கு எதிரே பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத மூல நட்சத்திர தினத்தன்று நடைபெறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் வரும் டிசம்பர் 26ஆம் தேதி வரும் மூல நட்சத்திர தினத்தன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுவதாக இருந்தது.
டிசம்பர் 26ஆம் தேதியன்று சூரியகிரஹணம் நிகழ்வதால், அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும். இதன் காரணமாக, ஆஞ்சநேயர் ஜெயந்தியை ஒருநாள் முன்னதாக 25ஆம் தேதியன்றே கொண்டாடுவது என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து வரும் 24ஆம் தேதியன்று அதிகாலை 5 மணியளவில் ஸ்ரீராமபிரானுக்கு நடைபெறும்.
இதனையடுத்து, காலை 8 மணிக்கு விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, மாதுளைச்சாறு, நல்லெண்ணெய், தேன், களபம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு சோடச அபிஷேகம் நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அலங்காரமும் அதைத் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெறும். இரவு 7 மணிக்கு விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேகமும், அதனைத் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெறும். ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு 25ஆம் தேதியன்று காலை 10 மணி முதல் அன்னதானமும், பக்தர்களுக்கு பிரசாதமாக விபூதி, குங்குமம், லட்டு, முறுக்கு, வடை, பஞ்சாமிர்தம் ஆகியவை வழங்கப்படும்.