எதிரி, நோய் மற்றும் மரண பயம் போக்கும் சக்கரத்தாழ்வார்
அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: அனைத்து வைஷ்ணவ ஸ்தலங்களிலும் முக்கியமாக ஸ்ரீரங்கம், திருமோகூர், திருக்கோவிலூர், திருவல்லிகேணி, காஞ்சிபுரம் போன்ற அனைத்து ஸ்தலங்களிலும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஜெயந்தி கொண்டாப்படுகிறது.
பெருமாளின் கையில் ஆயுதமாக அலங்கரிக்கும் சக்கரத்தாழ்வார் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார். ஆனால் சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு.
இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கப்படுபவர். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு. இவர் பதினாறு, முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கைகளில் கைகளை உடையவர்.
பெரியாழ்வார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு என வாழ்த்திப் பாடியுள்ளார். திருமாலுக்கு இணையானவர் என்று எழுதிய சுவாமி தேசிகன், சுதர்சனாஷ்டகத்தில் சக்கரத்தாழ்வாரைப் பலவாறும் போற்றியுள்ளார்.
மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தின்போது, பவித்ர தர்ப்பத்தின் நுனியில் அமர்ந்து சுக்கிரனின் கண்ணைக் கிளறி அழித்தவர் சுதர்சனர்.
இராவணனின் முன்னோர்களான மால்யவான், சுமாலி என்ற கொடுமையான அரக்கர்களை தண்டிக்க கருடாரூடனாய் இலங்கை சென்ற பகவான், சுதர்சன சக்கரத்தால் அவர்களை அழித்தார்.
காசிநகரில் கண்ணனைப் போன்று சங்கு, சக்கரம் தரித்து, "நானே உண்மையான வாசுதேவன்' என்று பௌண்டரக வாசுதேவன் என்ற வலிமைமிக்க மன்னன் கூறிவந்தான். கண்ணனை மிரட்டி போருக்கு அழைத்தான். கருடன்மேல் ஏறிச்சென்ற கண்ணன் ஆழியினால் அவனைக் வென்றான்.
தேவர்கோன் முதலான சகல தேவர்களும் பரமசிவனிடமிருந்து சுதர்சன வழிபாட்டை அறிந்து சக்கரத்தாழ்வாரை வழிபட்டு திருவருளைப் பெற்றார்கள். கஜேந்திர மோட்ச வைபவத்தில் சக்கரத்தைக் கொண்டே கஜேந்திரனைக் கவ்விப் பிடித்திழுத்த முதலையை அழித்து, யானையைக் காப்பாற்றுகிறார்
சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள்:
சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள் பதினாறு. அதில் வலக்கையில் உள்ள ஆயுதங்கள் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவை. இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியன.
ஜோதிடத்தில் சக்கரத்தாழ்வார்:
ஜோதிடத்தில் வீரத்தினை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். மேலும் நெருப்பு, ஆயுதங்கள், ராணுவம், பாதுகாப்பு, போர் வீரர்கள், காவலர்கள், தீயணைப்பு துறை ஆகியவற்றின் காரகரும் செவ்வாய் ஆகும். சாகசம் செய்பவர்கள், சாதனையாளர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேஷம் - விருச்சிகம்
ஜோதிடத்தில் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழும் செவ்வாய் கால புருஷனுக்கு லக்னாதிபதியாகவும் ஆயுள் பாவமான அஷ்டமாதிபதியாகவும் விளங்குகிறார்.
கால புருஷனுக்கு எட்டாம் பாவமான விருச்சிகம் ஆயுள், மறைந்திருக்கும் எதிரி, பரம்பரை நோய் ஆகியவற்றை குறிக்கும். நீர் ராசியான விருச்சிகம் விஷ ஜந்துக்கள் நிறைந்த கடலை குறிப்பதால் இது மருத்துவம், மருந்துகள், விஷம், ரத்தத்தில் கண்டுபிடிக்க முடியாத வியாதிகள், புற்றுநோய் போன்ற எளிதில் கண்டுபிடிக்க முடியாத நோய்களை குறிக்குமிடமாகும்.
மிதுனம் - கன்னி
கன்னி கால புருஷனுக்கு ஆறாம் பாவமாக வருகிறது. ஆறாம் பாவம் என்பது நோய், கடன், சத்ரு ஆகியவற்றி குறிக்குமிடம் ஆகும். புதனின் மற்றோரு வீடான மிதுனம் கால புருஷனுக்கு மூன்றாம் பாவமாகும். மூன்றாம் பாவம் என்பது தைரியம் மற்றும் செய்யும் முயற்சியினை குறிக்குமிடமாகும். மேலும் மூன்றாம் பாவம் என்பது பாவாத்பாவபடி எட்டுக்கு எட்டாமிடமாகும். எனவே மூன்றாம் பாவம் என்பது தீவிரமான பிரச்சனைகளை குறிக்குமிடமாகும்.
சுதர்சன உபாசனை வீரம் அளிக்க வல்லது. தீராத நோய்களைத் தீர்க்கும். போர்முனையில் வெற்றியினைத் தேடித் தரும். எல்லாவிதமான சத்ருக்களையும் நீக்கி மங்களம் அளிக்க வல்லது.
பக்தர்களுக்கு சந்தோஷம்
பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தை போக்கிக் காப்பவர் சுதர்சனர். மனிதனின் நிம்மதியை பாதிப்பவை கடன், வியாதி, எதிரி தரும் துன்பம் இவற்றை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பவர். இவர் கல்வியில் தடையை நீக்கி இடைவிடாது தொடரும் கல்வி யோகத்தைத் தருபவர் என்பது நம்பிக்கை. செவ்வாயின் காரகத்தை தன்னுள்ளே கொண்ட ஸ்ரீ சக்கரத்தாழ்வார் விஷ்னுவின் அம்சம் மற்றும் ஸ்வரூபம் என்பதால் புதனின் காரகத்தையும் கொண்டிருக்கிறார்.
சுதர்சன ஹோமம்
ஜோதிடத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் பாவங்கள் வலுத்து அதனால் நோய், கடன் தொல்லைகள், எதிரிகள், வழக்குகள் போன்றவற்றால் மீளமுடியாத பிரச்சனைகளை சந்தித்துவருபவர்கள் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வழிபடுவது, சுதர்சனாஷ்டகம் பாராயணம் செய்வது, சுதர்சன ஹோமம் செய்வது போன்றவை சிறந்த பயனளிக்கும். மேலும் புற்று நோய் போன்ற உயிர் கொல்லி நோய் உடையவர்கள் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்கி வருவதால் நோய் நீங்கி மரணபயம் போகும்.
சித்திரை நட்சத்திரம்
செவ்வாயின் சித்திரை நக்ஷத்திம் புதனின் வீடான கன்னி மற்றும் துலா ராசியில் வருவதால் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்குபவர்களுக்கு நோய், எதிரி, விரயம், மரணம் ஆகிய பயம் நீங்குவதோடு தாரித்ரியத்தை போக்கி சகல செல்வங்களும் அளிக்கும் என்பது நிதர்சனம்.