நெல்லை பிரம்மதேசத்தில் சுமங்கலி பூஜை - 1008 பெண்கள் பங்கேற்பு
நெல்லை மாவட்டம் பிரம்மதேசத்தில் நடைபெற்ற சுமங்கலி பூஜை விழாவில் 1008 பெண்கள் பங்கேற்றனர்.
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் கயிலாசநாதர் ஆலயத்தில் 1008 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடைபெற்றது. நெல்லை சேவாபாரதி தென்தமிழ்நாடு சார்பாக சுமங்கலி பூஜை நடைபெற்றது.
பிரம்ம தேசத்தில் ஸ்ரீபிரஹந்நாயகி ஆம்பாளுடன் ஸ்ரீகைலாசநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புகளை உடையது இத்திருக்கோயில்.
ஏழு நிலைகளுடன் திகழும் கம்பீரமான வானுயர்ந்த ராஜகோபுரத்துடன் காண்போரின் மனதில் பிரம்மிப்பை ஏற்படுத்தும் கலைநயமிக்கதாக இக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இன்று நடைபெற்ற சுமங்கலி பூஜையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
நெல்லையில் சுமங்கலி பூஜை
திருமணமான பெண்களை சுமங்கலி என்று அழைப்பது வழக்கம். பராசக்தி உலகைக் காத்தருள்வதைப் போல, குடும்பத்தைச் சீரும், சிறப்போடும் திறம்பட வழி நடத்தும் பெண்கள் சக்தியின் வடிவமாகவே போற்றப்படுகின்றனர். சுமங்கலிப் பெண்கள் ஒன்று சேர்ந்து, திறம்பட நடத்துவதால் சக்தி வழிபாடாகவே இது போற்றப்படுகிறது.
சகல தோஷங்கள் நீங்கும்
பிரம்தேசம் திருக்கோயிலின் ஆதிமூல லிங்கம் எனக்கூறப்படும் ஸ்ரீபதரிவனேஸ்வரர் என்ற சுயம்புலிங்கம் இலந்தை மரத்தடியில் உள்ள மிகப் பழமையானது. பிரம்மாவின் பேரன் ரோமஸ மஹரிஷியால் பூஜிக்கப்பட்ட இந்த இலந்தையடி நாதரையும் இலந்தை மரத்தையும் பிரதட்சணம் செய்வதால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்
வெள்ளிக்கிழமை பூஜை
பிரம்மதேசத்தில் அருளாட்சி செய்யும் ஸ்ரீ கைலாச நாதரை சூரிய பகவான் உத்தராயணம், தக்ஷிணாயனம் ஆகிய இரண்டு காலங்களிலும் கருவறை வரையில் வழிபடும் ஆனந்தக் காட்சியை அனுதினமும் காணலாம். உத்தரயண புண்ணிய காலம் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் வெள்ளிக்கிழமையன்று சுமங்கலி பூஜை நடைபெற்றது.
1008 சுமங்கலி பெண்கள்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது பிரம்மதேசம். இதை சதுர்வேதிமங்கலம் என்றும் சொல்வர். இந்த தலத்தில் நடைபெற்ற சுமங்கலி பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு தமிழக முன்னாள் சட்ட அமைச்சர் இசக்கி சுப்பையா தாலிக்கயிறு உள்ளிட்ட மங்கல பொருட்களை அளித்தார்.