சூரிய, சந்திர கிரகண காலங்களில் கோவில்களை மூடுவது எதற்கு தெரியுமா
கிரகண நேரத்தில் எதிர்மறை சக்திகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் அது கோவிலுக்குள் உள்ள விக்ரகங்களை பாதிக்கக் கூடாது என்பதற்காகவே கோவில்களின் நடையை அடைத்து விடுகின்றனர்.
சென்னை: 2020ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணமும் மிக நீண்ட சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ நிகழும் போது அதிகமாக எதிர்மறை சக்திகள் வெளிப்படும். இந்த நெகட்டிவ் எனர்ஜியின் தாக்கம் கோவிலுக்குள் வரக்கூடாது என்பதற்காகவும் கோவிலுக்கு வரும் பக்தர்களை அந்த எதிர்மறை சக்தி பாதிக்கக் கூடாது என்பதற்காகவும்தான் கோவில்களை மூடி விடுகின்றனர்.
சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் நிகழ்கிறது. சந்திரனின் நிழல் சூரியனை மறைக்கிறது. அதே நேரத்தில் சூரியன், சந்திரன் கிரகங்களை ராகு அல்லது கேது விழுங்கும் நிகழ்வுதான் சூரிய, சந்திர கிரகணம் என்று புராண கதைகளில் சொல்லப்படுகின்றன.
அமாவாசை அன்று சூரிய கிரகணமும், பெளர்ணமி அன்று சந்திர கிரகணம் ஏற்படுவது வழக்கம். பூமி சூரியனை சுற்றுகின்றது. சந்திரன் பூமியைச் சுற்றுகின்றது. கிரகங்கள் சுற்றும் போது ஒரு சில நேரங்களில் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அப்போது நிழல் மறைக்கும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
இந்தியாவில் சூரிய கிரகணம் தொடங்கியது.. மிக நீளமான கிரகணம் இதுவாகும்!
நல்ல சக்திகளின் ஆதிக்கம்
சினிமாக்களில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நடைபெற்றாலே மந்திரவாதிகள் தங்களின் சக்தியை அதிகரிப்பதற்காக தீய காரியங்கள் செய்வது போல சித்தரிப்பார்கள். நல்ல சக்திகளின் ஆதிக்கம் குறைவாக இருக்கும் தீய சக்திகளின் ஆதிக்கம் அந்த நேரத்தில் அதிகமாக இருக்கும் என்றெல்லாம் பல சினிமாக்களில் சொல்லப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். தெய்வங்களின் சக்தி செயல்பாடாது என்றும் சொல்லியிருப்பார்கள்.
சாப்பிட வேண்டாம்
சூரிய கிரகணத்தின் போது சூரியனிலிருந்து வரும் கதிர்கள் நம்மை தாக்கும் என்பதாலேயே வெளியே செல்ல வேண்டாம் என்று கூறினர். தீய கதிர்களால் கண்ணுக்கு தெரியாத பல உயிரினங்கள் கொல்லப்படுவதால், கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது என்றும், சமைத்த உணவுகள் மூடி வைக்க வேண்டும் என கூறப்பட்டது. கிரகணத்தின் ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ தான் சாப்பிடவேண்டும். தர்ப்பைப் புல் கதிர்வீச்சுகளை தடுக்கக் கூடிய வல்லமை வாய்ந்தது என்பதால், கிரகண நேரத்தில் உணவு வைத்திருக்கும் பாத்திரத்தில் தர்ப்பைப் புல் போட்டு வைக்கச் கூறினர் நம் முன்னோர்கள்.
நடை அடைப்பது ஏன்
கிரகணம் நிகழ்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாகவே கோவில்களை மூடி விடுவார்கள். அதற்கு காரணம் இருக்கிறது. கோவில் என்பது நேர்மறை சக்திகள் அதிகம் கொண்ட இடம். இங்குள்ள நல்ல அதிர்வுகளால்தான் கோவிலுக்கு வந்து வேண்டிக்கொள்பவர்களின் எண்ணங்கள் நிறைவேறுகின்றன. சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ நிகழும் போது அதிகமாக எதிர்மறை சக்திகள் வெளிப்படும். இந்த நெகட்டிவ் எனர்ஜியின் தாக்கம் கோவிலுக்குள் வரக்கூடாது என்பதற்காகவும் கோவிலுக்கு வரும் பக்தர்களை அந்த எதிர்மறை சக்தி பாதிக்கக் கூடாது என்பதற்காகவும்தான் கோவில்களை மூடி விடுகின்றனர்.
இறை வழிபாடு
மந்திர சாஸ்திரத்தில் பொதுவான நேரத்தில் ஒரு முறை இறைவனை வேண்டி ஜெப மந்திரத்தை உச்சரித்தால் ஒரு மடங்கு பலனும், அந்திசாயும் நேரத்தில் செய்தால் 10 மடங்கும் பலன்களும், பிரம்ம முகூர்த்தத்தில் செய்தால் 100 மடங்கு பலன்களும், பெளர்ணமி, அமாவாசை தினத்தில் செய்தால் 1000 மடங்கு பலன்களும் கிடைக்கும். அதுவே கிரகண நேரத்தில் செய்தால் லட்சம் மடங்கு பலன்கள் கிடைக்குமாம். எனவேதான் கிரகண நேரத்தில் எந்த வேலையும் செய்யாமல் வண்டி வாகனத்தில் செல்வதை தவிர்த்து வீட்டிலேயே இறை வழிபாடு செய்ய சொல்கின்றனர்.
கட்டாயம் பரிகாரம் பண்ணுங்க
ரோகிணி, மிருகஷீரிடம், திருவாதிரை, புனர்பூசம், சித்திரை, சுவாதி, அவிட்டம், சதயம், ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகார சாந்தி செய்து கொள்ள வேண்டும். கிரகணம் முடிந்த பின்னர் வீட்டை நன்கு கழுவி சுத்தம் செய்து, குளித்து, தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவதோடு, கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். கிரகணம் முடிந்த பின்னர் கடலிலோ அல்லது கல் உப்பு சிறிது போட்ட அந்த தண்ணீரில் குளித்தல் நல்லது. அப்படி செய்தால் கிரகண நேரத்தில் கெட்ட கதிர்களால் இறந்த நுண் உயிரிகள் நம் உடலில் இருந்து அகலும். கிரகணம் முடிந்த பின்னர் எல்லோருமே குளித்து விட்டால் நல்லதுதான்.