நிரந்தர வேலை... கை நிறைய சம்பளம் வேண்டுமா - இந்த பரிகாரங்களை மறக்காமல் செய்யுங்கள்
நிரந்தர வருமானத்தை நிலையான வேலை வாய்ப்பை தரக்கூடிய சக்தி சூரிய பகவானுக்கு உண்டு. சூரிய பகவானை தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும்.
சென்னை: வேலை கிடைக்காமல் கஷ்டப்படுபவர்கள், புதிய வேலை தேடுபவர்கள் தினசரி சூரிய நமஸ்காரம் செய்யவும். தொழில்காரகன், ஜீவனகாரகன் சனிபகவான் வாகனமான காகத்திற்கு தினசரியும் சாதம் வைக்க நல்லது நடக்கும் புதிய வேலை கிடைக்கும். வேலை கிடைப்பதில் இருக்கும் தடைகள் நீங்கும்.
படித்து முடித்து விட்டு வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்படுபவர்கள் தினசரி சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். நிரந்தர வருமானத்தை நிலையான வேலை வாய்ப்பை தரக்கூடிய சக்தி சூரிய பகவானுக்கு உண்டு.
சூரிய பகவானை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு நிச்சயமாக நல்ல வருமானத்தில் வேலை கிடைக்கும். தேவைக்கு ஏற்ப மாதம்தோறும் நிலையான வருமானம் கைக்கு வந்து கொண்டே இருக்கும். பணப்பற்றாக்குறை என்ற வார்த்தைக்கு இடம் இல்லை.
ஜாதகத்தில் கர்மஸ்தானம் எனப்படும் 10ஆம் வீடு தொழில் ஜீவனஸ்தானம் ஆகும். 6ஆம் வீடு என்பது நாம் செய்யும் தொழிலைக் குறிக்கும் வீடாகும். 7ஆம் வீடு என்பது வியாபாரத்தைக் குறிக்கும். 2ஆம் வீடு என்பது தனஸ்தானம் நமக்கு வேலையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை குறிக்கும். 11ஆம் வீடென்பது லாபஸ்தானம். ஆக 2, 6, 10, 11ஆம் வீடுகளைக் குறிக்கின்ற தசா, புக்தி, அந்தரத்தில் வேலை கிடைக்கும்.
ஒருவரின் ஜாதகத்தில் 10 ஆம் இடமான ஜீவனஸ்தானத்தில் குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் இருந்தால் சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கும். சனி இருந்தால் வேலை கிடைக்கவே தாமதமாகும். வேலை கிடைத்தாலும் செய்யும் வேலைக்கு ஏற்ப சம்பளம் கிடைக்காது.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வுக்கு மிகவும் காத்திருக்க வேண்டும். செவ்வாயிருப்பின் செய்யும் தொழிலில் பிரச்சனைகள், சண்டை, சச்சரவு போன்றவை இருக்கும். நல்ல வேலை கிடைக்க வேண்டும் பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, சூரிய நமஸ்காரம் செய்ய மறந்துவிடாதீர்கள்.
ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய பகவான் சன்னிதிக்குச் சென்று இரண்டு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவது மேலும் சிறப்பினைத் தரும். இது தவிர சூரிய பகவானின் ஆசீர்வாதத்தை பெற இரண்டு வழிமுறைகள் உள்ளது.
வீட்டில் உள்ள பூஜை அறையில் ஞாயிற்றுக்கிழமைகளில் கொஞ்சம் கோதுமையை கீழே பரப்பி, அதன் மேல் ஒரு மண் அகல் தீபத்தை வைத்து, நெய் ஊற்றி தீபம் போட்டு சூரியபகவானை மனதார நினைத்து வணங்க வேண்டும். தொடர்ந்து 48 வாரங்கள் இப்படி செய்து வர வேண்டும்.
இந்த பரிகாரம் செய்வதன் மூலம் உங்களுக்கு இருக்கக்கூடிய பண கஷ்டம் நீங்கும். நிதிநிலைமை உயரும். நிலையான வருமானம் வரும். தீபம் முழுமையாக எரிந்து முடிந்து விட்ட பின்பு, கீழே பரப்பி வைத்திருக்கும் கோதுமையை எடுத்து பசுமாட்டிற்கு கொடுத்துவிடலாம்.
மற்றொரு பரிகாரமாக நம் வீட்டில் உள்ள கோதுமை மாவில் கொஞ்சம் எடுத்து ஒரு தட்டில் பரப்பி வலது கை மோதிர விரலால் 'ஸ்ரீம்' என்ற வார்த்தையை எழுதி அதில் ஒரு சொட்டு நெய் விட்டு, தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ள வேண்டும். சப்பாத்திக்கு மாவு பிசைவது போல். இந்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து, குளத்தில் இருக்கும் மீன்களுக்கு உணவாகப் போட வேண்டும்.
இப்படி செய்தால் நமக்கு இருக்கக்கூடிய கர்ம வினைகள் எல்லாம் நீங்கி, நிரந்தர வருமானத்தை தேடித்தர வழி கிடைக்கும். ஞாயிற்று கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம். அதே போல கோதுமை தானம் கொடுக்கலாம் நல்ல வேலையும் நிரந்தர வருமானமும் கிடைக்கும்.