சாமித்தோப்பு ஐயா வைகுண்டர் வைகாசி திருவிழா 24ல் கொடியேற்றம் - ஜூன் 3ல் தேரோட்டம்
சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இந்த ஆண்டு வைகாசி திருவிழா வருகிற 24ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூன் 3ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி: சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர். சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக அய்யா வைகுண்டரை அவர் வழியை பின்பற்றும் மக்கள் பார்க்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக்குளம் கிராமம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது.
இங்கு ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு வைகாசி திருவிழா வருகிற 24ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
24ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், அய்யாவுக்கு பணிவிடையும், காலை 6.30 மணிக்கு திருக்கொடியேற்றமும் நடக்கிறது. பால பிரஜாபதி அடிகளார் கொடியேற்றி வைக்கிறார். அன்று இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் வீதி உலா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தினமும் சிறப்பு பூஜைகளும், இரவு அய்யா வெவ்வேறு வாகனங்களில் பவனியும் நடைபெறுகிறது.
மே 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை எட்டாம் நாள் திருவிழா நாளன்று மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு 11 மணிக்கு பதியின் வடக்கு வாசலில் அன்னதானம் நடைபெறுகிறது.
ஒன்பதாம் நாள் விழாவில் இரவு அனுமன் வாகன பவனியும் பத்தாம் நாள் விழாவில் இரவு இந்திர வாகன பவனியும் நடக்கிறது. ஜூன் 3ஆம் தேதி பதினொன்றாம் நாள் திருவிழாவன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.