For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எதிரிகள் தொல்லை ஒழிக்கும் நரசிம்மர்... கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் நவ. 25ல் சுவாதி பூஜை

நரசிம்மனிடம் பிரகலாதன் போல நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தி இருந்தால் அதைகொடு, இதை கொடு என்று கேட்க வேண்டியதே இல்லை. எல்லா வற்றிலுமே நரசிம்மர் நிறைந்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: கடன்கள் தீரவும் நோய்கள் அகலவும் சத்ரு என்கிற எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விலகவும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஹோமம், வழிபாடு மிகவும் பலன் தரும். தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை திங்கள்கிழமை அக்டோபர் 25ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 3 மணிக்கு 16 வகையான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஸ்ணு சூத்த ஹோமம், மன்யு சூத்த ஹோமம், பாக்ய சூத்த ஹோமம், மகாலட்சுமி ஹோமம் ஆகியன நடைபெறுகின்றன. தொடா்ந்து சிறப்பு அபிசேகமும், பெருமாள் சப்பரத்தில் தீா்த்தவலம் வருதல், தீபாராதனை நடைபெறுகிறது.

சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நரசிம்மரை பற்றி அறிந்து கொள்வோம். திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர். நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.

மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம்.

பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது. சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது. நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு. இரவும் பகலுமற்ற அந்தி மாலை நேரத்தில் அவதரித்தவர் நரசிம்மர். நான் தூணிலும் இருப்பேன் துரும்பிலும் இருப்பேன் என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் வணங்கலாம். நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.


நரசிம்மர் வழிபாடு

நரசிம்மர் வழிபாடு

திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்பட வில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள். நரசிம்மரைத் தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

இரண்யவதம்

இரண்யவதம்

நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன. நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.

நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான். திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், ``இரணியன் பட்ட தெம்மிறை எய்தினான்'' என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார். இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப் பட்டுள்ளது.

நரசிம்மர் ஆலயங்கள்

நரசிம்மர் ஆலயங்கள்

சோளிங்கரின் உண்மையான பெயர் சோழசிங்கபுரம். நரசிம்மரின் பெருமையை பெயரிலேயே கூறும் இந்த ஊர் பெயரை ஆங்கிலேயர்கள் சரியாக உச்சரிக்க இயலாமல், அது சோளிங்கர் என்றாகிப் போனது. சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரிகட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன. கீழ் அகோபிலத்தில் நாம் கொடுக்கும் பாகை நைவேந்தியததில் பாதியை நரசிம்மர் ஏற்றுக் கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள்.

மூச்சு விடும் நரசிம்மர்

மூச்சு விடும் நரசிம்மர்

வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும். வாடபல்லி தலத்தில் உள்ள நரசிம்மரின் மூக்குக்கு எதிரில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும், நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் நரசிம்மரின் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம் ஆடாமல் அசையாமல் நின்று எரியும்.

புராணங்களில் நரசிம்மர்

புராணங்களில் நரசிம்மர்

ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார். நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும். நரசிம்மரை வழிபடும் போது ஸ்ரீநரசிம்ஹாய நம என்று சொல்லி ஒரு பூவைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும்.

நரசிம்மர் தரிசனம்

நரசிம்மர் தரிசனம்

சிங்க முகமும், மனித உடம்பும் கலந்த மாறுபட்ட வடிவில், அகோபிலம் என்னும் மிக உயர்ந்த மலைப்பகுதியில், பவநாசினி நதிக்கரையில் மகாவிஷ்ணு நரசிம்மராக அவதாரம் எடுத்தார். யுகங்களுள் முதலாவதான கிருதயுகத்தில் இந்த அவதாரம் நிகழ்ந்தது. இந்த ஆலயம் தற்போதைய ஆந்திர மாநிலத்தில் உள்ளது. அங்கு செல்ல முடியாதவர்களாக தென் பகுதியில் தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ளார்.

இங்கு சுவாதி, திருவோணம், பிரதோ‌ஷம், வளர்பிறை சதுர்த்தசி, செவ்வாய், சனி ஆகிய நாட்களில் தீர்த்த வல வழிபாடு நடக்கிறது.

சுவாதி பூஜை

சுவாதி பூஜை

சுவாதி பூஜை இங்கு சிறப்பானது. ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று 16 வகை மூலிகை ஹோமம் உள்பட ஐவகை ஹோமமும், தொடர்ந்து பால், இளநீர், திரவியப்பொடிகளால் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கின்றன. சுவாதி பூஜையில் தொடர்ந்து கலந்து கொண்டால் கடன் தொல்லை நீங்கி செல்வம் சேரும். வியாபாரம் பெருகும். திருமணத்தடை அகல, நீதிமன்ற வழக்கு முடிவுற, நீண்டகால நோய் தீர, கடன் தொல்லை நீங்க, இங்கு பரிகாரம் செய்து கொள்ளலாம். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்குரிய தலமாகவும் இது திகழ்கிறது. நவம்பர் 25ஆம் தேதி சுவாதி பூஜையில் பங்கேற்று நரசிம்மர் அருள் பெறலாம்.

English summary
Swathi Star Sri Lakshmi Narasimha janma star, Special Yagam, Swathi Homam and special abhishekam for Sri Lakshmi Narasimhar Temple,Keelapavoor on 25.11.2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X