திருமணமாகலையா? விவாகரத்தா? கவலை வேண்டாம்! ஸ்வயம்வர பார்வதி மந்திரம் இருக்கு!
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்.
சென்னை: பெண்ணை பெற்றவர்களும் கன்னிப்பெண்களும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் திருமணத்திற்க்காக காத்திருந்த நிலையில் தை மாதமும் முடிந்து மாசி மாதமும் பிறக்க போகிறது. இன்று பல பெற்றோர்களின் பெருங்கவலை தங்கள் மகளுக்கு திருமணம் விரைவில் நடைபெறவேண்டுமே என்பதோடு மட்டுமல்லாமல் "காதல்-கத்திரிக்காய்" என மாட்டிக்கொள்ளாமல் தங்கள் எண்ணப்படி நடக்கவேண்டும் என்பதே ஆகும் திருமணம் ஆகாமல் கன்னி பெண்களை வீட்டில் வைத்திருக்க நாளுக்கு நாள் பீபி ஏறிக்கொண்டே இருக்கிறது.
திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. குறிப்பிட்ட பருவ வயதை அடைந்தவுடன் ஆண், பெண் இருவருக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது கடமை மட்டும் அல்லாமல் இயற்கை நியதியும்கூட. மண வாழ்க்கை சிலருக்கு எளிதாக கூடி வந்துவிடும். சிலருக்கு அதிக முயற்சிக்கு பிறகு கூடிவரும். ஒரு சிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக திருமண தடைகள், காதல் தோல்வி மற்றும் பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
திருமண விஷயத்தில் ஜாதக கிரக அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. சில கிரக சேர்க்கைகள், திசா, புக்திகள் கோச்சார நிலை போன்றவைகளால் திருமணம் தாமதமாகிறது. இவை காரணமாக திருமணம் தாமதமானால் என்ன செய்வது? அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? இது பலருக்கும் வரும் சந்தேகம். தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது.
பொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம். இது தவிர வேறு சில முக்கியமான தோஷங்களும் உள்ளன. அவை ராகு/கேது தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம், புணர்ப்பு தோஷம் ஆகும்.
செவ்வாய் தோஷம்:
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும்.
ராகு - கேது தோஷம்:
லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்.
மாங்கல்ய தோஷம்:
இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8&ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8&ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி. 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி.
சூரிய தோஷம்:
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. சூரியனும் சுக்கிரனும் நெருங்கிய பாகையில் நிற்கும்போது இருதார யோகமும், வீடு தள்ளி 42 பாகைக்கு மேல் இடைவெளி பெற்று நிற்பது திருமணம் ஆகா நிலையையும் ஏற்படுத்துகிறது.
களத்திர தோஷம்:
களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமண சுணக்கம் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும். மேலும் களத்திர காரகன் சுக்கிரன் நீசம் அடைவது, பாபகர்தாரி யோகம் பெறுவது,கேதுவுடன் சேர்ந்து நிற்பது, கேது சாரம் பெறுவது போன்றவையும் களத்திர தோஷமே ஆகும்.
சூரிய சுக்கிர இடைவெளி:
ஒரு ஜாதகத்தில் சுக்கிரனும் சூரியனும் நெருங்கிய பாகையில் நின்றுவிட்டால் அது பெண்ணிற்க்கு இருதார யோகத்தை தந்துவிடுகிறது. அதே நேரத்தில் ஒருவர் ஜாதகத்தில் சூரியனும் சுக்கிரனும் குறிப்பிட்ட இடைவெளிக்கு மேல் சென்று இருவருக்கும் இடையில் ஒரு வீடு இடைவெளி அமைந்துவிட்டால் அவர்களுக்கு திருமணம் அமைவது என்பது குதிரை கொம்பாகிவிடுகிறது.
புணர்ப்பு தோஷம்:
ஓருவருடைய ஜாதகத்தில் மனோ காரகன் சந்திரனும் கர்ம காரகன் சனியும் சேர்க்கை பெற்று நிற்பது, பரிவர்தனை பெறுவது, சார பரிவர்தனை பெறுவது, சம சப்தம பார்வை பெறுவது போன்றவை திருமண வாழ்வில் பிரச்சனை ஏற்படுத்தும் தோஷமாகும்.
காஞ்சி மகாபெரியவர் திருவாய் மலர்ந்து அருளிய திருமண பரிகாரம்:
இதுபோன்று ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தோஷங்களோடு திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு பரிகாரம்தான் என்ன? காஞ்சி மகாபெரியவர் ஒரு உடல் வளர்ச்சி காரணமாக திருமணமாகாமல் இருந்த பெண்ணிற்க்கு அருளிய திருமண பரிகாரம் இதோ!
ஒரு தம்பதியும்,இளம் பெண்ணும் தரிசனத்துக்கு வந்தார்கள். பெண், வெறும்குச்சி மாதிரி பலவீனமாக இருந்தாள். வயசுக்கேற்ற உடல் வளர்ச்சியும் இல்லை போல் இருந்தது. "பெரியவா அனுக்கிரஹம் பண்ணனும்.இவளுக்குக் கல்யாணம் செய்வதா,வேண்டாமான்னே புரியலை.ரொம்பக் குழப்பமா இருக்கு." என்று பெரியவாளிடம் கேட்டார்கள். அவர்களுக்கு பெரியவா சொல்லிய அறிவுரையில் மணி-மந்த்ர-ஔஷதம் என்று கூறுவதைப் போல,மூன்று வகையான சிகிச்சைகள் இருந்தன.
1.கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் காசி விசுவநாதர் கோயில் இருக்கு.அங்கே,மகாமகப் பெண்டுகள் என்று ஏழு தேவதைகள் சந்நிதிஇருக்கு.அந்தச் சிலைகளுக்கு வஸ்திரம் சார்த்தி பொங்கல் நேவேத்யம் செய்யணும்.
2. ஸ்வயம்வர பார்வதி மந்த்ரம் என்று ஒரு தேவி மந்த்ரம் இருக்கு. உங்க வீட்டு வைதீகரைக் கொண்டு,இந்த மந்த்ரங்களை ஆயிரம் ஆவ்ருத்தி வீதம் ஜபம் செய்யச் சொல்லணும்.
3. பெண்ணுக்கு உடல் புஷ்டி வேணும்னா..நாட்டு வைத்தியரிடம் போகணும். அவர் லேகியம் பண்ணிக் கொடுப்பார் அதைச் சாப்பிட்டா பலம் வந்துடும். "கல்யாணம் நன்னா நடக்கும்."
கேட்டுக் கொண்டிருந்த பெண்ணுக்கு ரொம்ப சந்தோஷம்.தன்னுடைய நல்வாழ்வுக்குப் பெரியவாள் நல்வாக்கு ஒன்றே போதும் என எண்ணினாள்.ஓராண்டுக்குப் பின்,உடல் நன்றாகத் தேறி, விவாகமாகி,தன் கணவருடன் வந்து, பெரியவாளுக்கு நன்றிப்பெருக்குடன் வந்தனம் செய்தாள், மாஜி குச்சிப் பெண்.
ஸ்வயம்வர பார்வதி மந்திரம்:
துர்வாசர் அருளிய ஸ்வயம்வர பார்வதி மந்திரம் பார்வதியினால் பரமசிவனை மணக்க முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. காயத்ரி மந்த்ரத்திற்கு இணையானது. அணைத்து திருமண தடைகளையும் தகர்த்து, திருமணம் விரைவில் நடப்பதற்கான ஒரே மந்திரம். மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கும், அந்நியோன்யம் வளரவும், குழந்தை பாக்கியம் அருளவும் வல்லது.
"ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி யோகேஸ்வரி யோக பயங்கரி ஸகல ஸ்தாவர ஜங்கமஷ்ய முக ஹ்ருதயம் மம வசமாகர்ஷ ஆகர்ஷாய நம: "
இந்த ஸ்வயம்வர பார்வதி மந்திரத்தை பக்தியோடு ஜெபித்து வர திருமண தடை நீங்குவது மட்டுமல்லாமல் பெண்களுக்கு மனதுக்கு பிடித்த கணவன் அமையவும் மிகச்சிறந்ததாகும். மேலும் திருமணமான தம்பதிகளுக்குள் ஒற்றுமை இன்றி விவாகரத்தாகும் நிலையில் இருந்தாலும் இந்த ஸ்வயம்வர பார்வதி தேவியை வணங்கி மந்திரத்தை மனமுருகி ஜெபித்து வர விவாகரத்தின்றி திருமண ஒற்றுமை ஒங்கும். என்ன நேயர்களே! காஞ்சி மகா பெரியவர் திருவாய் மலர்ந்து அருளிய எளிய பரிகாரத்தை நாமும் செய்து பயன் அடையலாம் தானே!