புதுமணப் பெண்ணுக்கு பிறந்த வீட்டு பொங்கல் சீர் சுமந்து வரும் சகோதரர்கள்
இந்தியாவில் சகோதர உறவு என்பது உன்னதமான உறவு. இந்த சகோதரத்துவத்தை உலகிற்கு உணர்த்தவே ரக்சா பந்தன், பொங்கல் பண்டிகை போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. உடன் பிறந்தவள் நம் வீட்டில் இருக்கும் வரைக்கும் அவ
மதுரை: தைப்பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் தமிழ்நாட்டில் களைகட்டியுள்ளது. ஊரெங்கிலும் பொங்கசீருக்காக கடை கடையாக ஏறி இறங்க ஆரம்பித்துவிட்டனர் அண்ணன் தம்பிகள். அப்படி என்னதான் சகோதரிகளுக்கு பொங்க சீர் கொடுப்பார்கள் என்று கேட்கிறீர்களா? பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி, வெல்லம் மட்டுமல்லாது பானை முதல் கரண்டி வரை எல்லமே புத்தம் புதிதாக எடுத்துக்கொடுத்து சீர் செய்வார்கள் சகோதரர்கள்.
அக்கா தங்கைகளுடன் பிறந்த அண்ணன் தம்பிகள் தங்களின் சகோதரிகளுக்காக தலை தீபாவளி, தலை ஆடி, தலைப் பொங்கல் என திருமணம் செய்து கொடுத்தபின்னர் வரும் முதல் விசேசத்திற்கு அவரவர் வசதிக்கேற்ப பிறந்த வீட்டு சீர் கொடுத்து பெருமையை காப்பாற்றுவார்கள்.
இந்த பொங்கல் சீர் வரிசையில் இரண்டு வெண்கல பொங்கல் பானைகள், கரண்டிகள், 11 படி பச்சரிசி, 9 படி புழுங்கரிசி, கரும்பு, மஞ்சள் குலை, வாழைத் தார், ஒரு மூட்டை நெல் அல்லது அரிசி ஆகியவை பொங்கல் சீர் வரிசையில் முக்கியமாக இடம் பெறும். இவற்றோடு சாப்பாட்டுக்குரிய காய்கறிகள், கிழங்குகள் மளிகை பொருட்கள், துணிமணி என அனைத்தும் இந்த சீரில் இடம் பிடிக்கும்.
தலைப்பொங்கல்
திருமணமான புதுமணப்பெண்ணிற்கு முதல் முதலாக வரும் தலை தீபாவளியைப் போன்ற சிறப்பு மிக்கது தலைப்பொங்கல். பொங்கலுக்கு முன்பாக வரும் பதினைந்து, ஒன்பது, ஏழு என வசதிப்பட்ட ஒற்றைப்படை நாளில், சொந்த பந்தங்களை அழைத்துக் கொண்டு, பெண்ணைக் கட்டிக்கொடுத்திருக்கும் வீட்டுக்குச் சென்று சகோதரர்கள் சீர்வரிசையை கொடுப்பார்கள்.
விருந்து உபசரிப்பு
தனக்கு சீர் கொண்டு வந்திருக்கும் பெற்றோர்க்கும், சகோதரர்களுக்கும் கோழி அடித்தோ, கிடாக்கறி சமைத்தோ விருந்து கொடுத்து உபசரிப்பது மாப்பிள்ளை வீட்டாரின் வழக்கம்.
தலைமுறையாக தொடரும்
தலைப் பொங்கலில் இருந்து மூன்று பொங்கலுக்குத் தொடர்ச்சியாக பொங்கல் சீர் கொடுப்பது வழக்கமாக உள்ளது. தன் உடன் பிறந்தவளை கண் கலங்காமல் வைத்து வாழும் மாப்பிள்ளைக்கு காலம் பூராவும் பொங்கல் சீர் கொடுக்கும் வழக்கமும் சில ஊர்களில் இருக்கிறது.
உறவு பலப்படும்
முன்பெல்லாம் ஆண்டாண்டுகளுக்கும் தொடர்ந்த இந்த பொங்கசீர் இப்போதெல்லாம் மணிட்ரான்ஸ்பர் ஆக தொடர்கிறது. தொன்றுதொட்டுத் தொடர்ந்து, இன்று சகோதர உறவை பலப்படுத்தும் அன்பாயுதமாகவும் பயணப்படுகிறது இந்த பொங்கல் சீர் வரிசை.
தொட்டுத் தொடரும் பந்தம்
அண்ணன் தம்பிகளுடன் பிறந்து அவர்கள் கொடுக்கும் சீர் செனத்தியை அனுபவித்து பார்ப்பவர்களுக்குத்தான் அந்த ஆனந்தம் தெரியும். அண்ணன் தம்பிகள் இல்லாதவர்களுக்கு அவர்களின் அப்பாதான் சீர் சுமந்து வந்து கொடுத்துவிட்டுப் போவார். தமிழ்நாட்டில் காலம் காலமாக இந்தப் பழக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சகோதரர்கள் இல்லாவிட்டால் அப்பாவின் மறைவிற்குப் பின்னர் வீட்டின் மூத்த சகோதரி தானே தாயாகவோ, சகோதரனாகவோ மாறி, இளைய சகோதரிகளுக்கு சீர் அனுப்புவதும் உண்டு. தலைமுறை தலைமுறையாக உறவுகளையும் தழைக்க வைத்துக் கொண்டிருக்கிறது பொங்க சீர்.