விஜயதசமி கோலாகலம் : அம்பு எய்து அரக்கனை கொன்ற அன்னை - வன்னி மரத்தில் அம்பு போட்ட முருகன்
வெற்றி தரும் விஜயதசமி திருவிழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வான விஜயதசமி நாளான நேற்று சமயபுரம் மாரியம்மன்
Recommended Video
மதுரை: விஜயதசமி திருவிழா தீமை என்ற அரக்கனை வென்று நன்மையை நிலை நாட்டிய விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் துர்க்கா பூஜை, ராவண வதம் என்று கொண்டாடப்பட்டாலும் தமிழ்நாட்டில் எருமைத்தலையானான அசுரனை அழித்து சம்ஹாரம் செய்த நாள்தான் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. மாரியம்மன் கோவில்களில் அம்பு போட்டும், சூலாயுதம் ஏந்தியும் அசுரனை அழித்து வதம் செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் முருகனும் வில் அம்பு போட்டு வன்னி மர அசுரனை அழித்தார். கன்னியாகுமரியில் விஜயதசமியை முன்னிட்டு பரிவேட்டை நடைபெற்றது.
முருகப்பெருமான் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் கடந்த 29ஆம் தேதி முதல் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. விஜயதசமியையொட்டி வில் அம்பு எய்தும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதனையொட்டி நேற்று மாலை 5.30 மணி அளவில் மேளதாளங்கள் முழங்க கோவிலில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி பசுமலையில் உள்ள வில் அம்பு எய்தல் மண்டபத்திற்கு மண்டபத்திற்கு வந்தார். அங்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட வன்னி மரத்தடியில் விநாயகருக்கு பூஜை நடந்தது.
வில் அம்பு வைத்து விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகசானம் உள்ளிட்ட சகல பூஜைகள் நடந்தன. இதனையடுத்து மண்டபத்தை சுற்றி கோவில் யானை தெய்வானை முன்னே வலம் வந்தது. தங்க குதிரை வாகனத்தில் அமர்ந்தபடி குன்றத்து குமரன் மண்டபத்தை 3 முறை வலம் வந்து, எட்டு திக்குமாக வில் அம்பு எய்தார். அப்போது அங்கு திரளாக கூடியிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரையில் நவராத்திரி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா ஒன்பது நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. தினம் ஒரு அலங்காரத்தில் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். பத்தாம் நாளான நேற்று 108 வீணை இசை கலைஞர்கள் பங்கேற்ற வீணை கச்சேரி நடைபெற்றது. கடந்த 20 ஆண்டுகளாக மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள வீணை கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வீணையில் 22 பாடல்களுக்கும் மேல் வாசிக்கப்பட்டன. பக்தர்கள், மாணவர்கள், இசை ரசிகர்கள் என பலரும் இந்நிகழ்ச்சியை நேரில் கண்டும் கேட்டும் ரசித்தனர்.
அம்பு போடும் நிகழ்ச்சி
சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த பத்து நாட்களாக கோலகலமாக நடைபெற்று வருகிறது.
நேற்று விஜயதசமியையொட்டி இரவு 7.30 மணிக்கு அம்பாள் வெள்ளி குதிரை வாகனத்தில் வேடுபரி அலங்காரத்தில் கோவிலிலிருந்து புறப்பாடாகி வன்னிமரம் சென்றடைந்தார்.
அங்கு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதேபோல் இனாம் சமயபுரத்தில் ஆதிமாரியம்மன் கோவில் அருகே உள்ள அய்யாளம்மன் கோவிலில் நேற்று இரவு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
32 அம்மன் கோவில்கள்
நெல்லை டவுனில் உள்ள பிட்டாபுரத்தி அம்மன், துர்க்கையம்மன், சாலியர் தெரு மாரியம்மன், நல்லமுத்தம்மன், முப்பிடாதி அம்மன், உச்சிமாகாளி அம்மன், தடிவீரன் கோவில் தெரு மாரியம்மன், திருப்பணிமுக்கு மாரியம்மன், தங்கம்மன், காந்தாரி அம்மன், பூமாதேவி அம்மன், ஆயுள்பிராட்டி அம்மன், ராஜராஜேசுவரிஅம்மன், திரிபுரசுந்தரி அம்மன், வாகையடி அம்மன், முத்தாரம்மன், சுந்தராட்சி அம்மன், அறம்வளர்த்தநாயகி அம்மன், பூமாதேவி அம்மன் உள்ளிட்ட 32 அம்மன் கோவில்களிலும் நேற்று தசரா விழா நடந்தது.
அம்மன்களுக்கு தீபாராதனை
நேற்று அதிகாலை 5 மணிக்கு அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், துர்கா பூஜையும் நடந்தது. மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. இரவு 10 மணிக்கு அம்மன்களுக்கும் சிறப்பு அலங்கார தீபாராதனையும், இரவு 11 மணிக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. இதை தொடர்ந்து அனைத்து கோவில்களிலும் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் அம்மன் எழுந்தருளி அந்தந்த வீதிகளில் வீதி உலா நடந்தது. நள்ளிரவில் அனைத்து சப்பரங்களும் நெல்லையப்பர் கோவில் முன்பு வந்து நின்ற பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
பகவதி அம்மன் பரிவேட்டை
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10ஆம் திருவிழாவான நேற்று பரிவேட்டை திருவிழா நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அம்மன் எலுமிச்சம்பழ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரி வேட்டைக்காக மகாதானபுரம் நோக்கி புறப்பட்டார். இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
அரசுனை வதம் செய்த அம்மன்
வேட்டை மண்டபத்தை அம்மன் ஊர்வலம் சென்றடைந்த பின்னர் அங்கு அம்மன் பாணாசுரன் என்ற அரக்கனை வேட்டையாடி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் பவனி வந்து காரியக்கார மடத்துக்கு சென்று, அங்கிருந்து வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு இரவு 10 மணிக்கு அம்மன் கடற்கரைக்கு வந்தடைந்தார். பின்னர் முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டும், தொடர்ந்து வருடத்திற்கு 5 விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அம்மன் கோவிலுக்குள் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.