ஐப்பசியில் அடைமழையால் அணைகள் நிரம்பி வழியும் - அன்றே ரெட் அலர்ட் கொடுத்த பஞ்சாங்கம்
Recommended Video
சென்னை: நவ கிரகங்களின் சஞ்சாரம் ராசி கட்டங்களில் கிரகங்கள் சேரும் கூட்டணியை வைத்து மழை, வெள்ளம், புயலை முன்கூட்டியே கணித்துச் சொல்லி பஞ்சாங்கம் எச்சரிக்கிறது. 2019, 2020ஆம் ஆண்டுகளில் புயல் மழை எப்படி இருக்கும், இயற்கை சீற்றங்களினால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்று ஆறு மாதத்திற்கு முன்பே விகாரி வருட பஞ்சாங்கம் கணித்து ரெட் அலர்ட் விட்டுள்ளது.
சென்னை பெருவெள்ளம், மழை, வர்தா புயல், ஓக்கி புயல், கஜா புயல் பஞ்சாங்கம் அனைத்தையும் கணித்திருந்தது. இதில் அனைத்துமே அப்படியே பலித்தது. சென்னையை பெருவெள்ளம் சூறையடியதற்குக் காரணம் அப்போது விருச்சிக ராசியில் செவ்வாய் வீட்டில் செவ்வாய் சனி கிரகங்கள் கூட்டணி சேர்த்ததுதான் என்று ஜோதிடர்கள் சொன்னார்கள். நூறாண்டுகளில் இல்லாத மழை வெள்ளத்தை சென்னை மக்கள் சந்தித்தனர்.
இந்த ஆண்டு மழை ஐப்பசி மாதத்தில் அதிக அளவு பெய்து தீபாவளி வர்த்தகம் பாதிக்கும் என்று ஆறு மாதத்திற்கு முன்பே கணித்துள்ளது. புயலால் தமிழகம் பாதிக்கும் என்றும் விகாரி வருட ஸ்ரீனிவாச சுத்த திருக்கணித சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
வலுப்பெறுகிறது.. சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் வெளியிட்ட புகைப்படம்!
குருவின் சஞ்சாரம்
இந்த விகாரி ஆண்டில் 28.10.2019 ஆம் நாளில் குருப்பெயர்ச்சி நடைபெறுகின்றது. அப்பொழுது தனுசு ராசிக்கு செல்லும் குரு பகவான் மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய மூன்று ராசிகளையும் பார்த்துப் புனிதப்படுத்துகின்றார். இந்த 7 ராசிக்காரர்களுக்கும் விகாரி ஆண்டு அதிக வெற்றி வாய்ப்புகளை வழங்கும். செல்வ விருத்தியும், செல்வாக்கும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
மழை வளம் பெருகும்
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்துப்போனதால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் தாக்கியது. மழை எப்போது பெய்யும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு குளிர குளிர மழை பெய்து வருகிறது. இந்த ஐப்பசி மாதத்தில் அதிக மழை பெய்து தீபாவாளி வியாபாரம் பாதிக்கும் என்று பஞ்சாங்கம் முன்பே கணித்துள்ளது. எப்பவுமே ஐப்பசி அடப்பு ஒரு சாத்து சாத்தும் என்று கிராமங்களில் இன்றைக்கும் சொல்வார்கள். அது போல இப்போது அடைமழை பெய்து வருகிறது.
பெருமழையால் ஆறுகளில் வெள்ளம்
ஐப்பசி 23ஆம் தேதி நவம்பர் 9ஆம் தேதி வானத்தில் இரவில் சிறிய வால் நட்சத்திரம் உருவாகும். உலகத்தில் புதிய நோய்கள் உருவாகும்.
கார்த்திகை 11ஆம் தேதி நவம்பர் 27ஆம் தேதி புதன்கிழமை 7 நாட்கள் அடைமழை பொழியும் அனைத்து நதிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும். முக்கிய அணைகளில் நீர் நிரம்பி வழியும். அட்லாண்டிக் கடலில் நீர் உருகி சீதோஷ்ண நிலை மாறும் அனைத்து இடங்களிலும் மழை பெய்யும் எனவும் பஞ்சாங்கம் கணித்துள்ளது.
சனி செவ்வாய் பார்வை
சனி செவ்வாய் பார்வை காலங்களில் அரசியல் களத்தில் போராட்டங்களும், இயற்கை சீற்றங்களால் கொந்தளிப்புகளும் காணப்படும். நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு நீதிமன்றத் தீர்ப்புகள் கடுமையாக இருக்கும். வன்முறையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அதிகப் பிரயாசை எடுக்கும் சூழ்நிலையும் ஏற்பட வாய்ப்பு உண்டு. உஷ்ணாதிக்க நோய்கள், நூதன நோய்கள் ஏற்படும். அதை கட்டுப்படுத்த மருத்துவத்துறை எடுத்த முயற்சி வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தனுசு ராசியில் உள்ள சனி பகவான் கன்னி ராசியில் உள்ள செவ்வாயை பார்க்கிறார். அதே போல கன்னி ராசியில் உள்ள செவ்வாய் பகவானும் இப்போது தனுசு ராசியில் உள்ள சனியை நான்காவது பார்வையாக பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாங்கம் ரெட் அலர்ட்
குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும். இதன் அளவு 21 செமீட்டருக்கு அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளனர், இவ்விடங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், திருநெல்வேலி தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.
நிரம்பி வழியும் அணைகள்
தென்மேற்கு பருவமழை அற்புதமாக பெய்து அணைகள் ஓரளவு நிரம்பின. வடகிழக்கு பருவமழையும் தீவிரமாக பெய்து வருவதால் தமிழ்நாட்டில் பல அணைகள் நிரம்பி வழிகின்றன. இந்த ஆண்டு விவசாயம் செழிக்கும் தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பு இல்லை என்பதால் மக்களின் மகிழ்ச்சி அதிகரித்துள்ளது. மழை வந்த பின்னர்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி ஆலோசனையே நடைபெறும் முன்னோர்கள் கணித்து ஆறு மாதத்திற்கு முன்பே எச்சரிக்கும் பஞ்சாங்கத்தை பார்த்து ஏற்கனவே நடவடிக்கை எடுத்தால் பாதிப்புகளில் இருந்து மக்கள் தப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.