சனிப்பெயர்ச்சி: இந்தியா, இந்தோனேசியாவில் சுனாமி,பூகம்பம் அச்சுறுத்தும் - ஜோதிடர் கணிப்பு
சனீஸ்வர் நின்ற கேது கிரகம் கடல் ராசியில் இருப்பதாலும், கேது நின்ற கிரகம் செவ்வாய் என்பதாலும் கடல் கொந்தளிக்கும், இந்தோனேசியா, ஜப்பான், இந்தியாவில் உள்ளிட்ட நாடுகளில் சுனாமி தாக்கம் மக்களை பயமுறுத்தும்
Recommended Video
சென்னை: இந்தோனேசியாவில் அக்னி குழம்புகள் வெளிப்படும்... ஜப்பான், இந்தியா, மலேசியாவில் கடல் கொந்தளிக்கும்... கடலுக்கு அடியில் உள்ள பூமியில் விலகுதல் ஏற்படும் என்று பண்டிதர் பச்சை ராஜென் கணித்துள்ளார்.
டிசம்பர் 15ஆம் தேதி முதல் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் ஆண்டு வரை இதன் தாக்கம் இருக்கும் என்றாலும் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது என்று கணித்துள்ளார் பண்டிதர். அவர் எழுதிய புத்தகத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சனிப்பெயர்ச்சி இன்னும் சில தினங்களில் நிகழ உள்ளது. வரும் 19ஆம் தேதியன்று செவ்வாய் கிழமையன்று விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார் சனி பகவான். நீர் ராசியில் இருந்து நெருப்பு ராசியில் அமர்கிறார் சனீஸ்வரன்.
நாட்டில் நன்மை
பண்டிதர் பச்சை ராஜென் எழுதிய புத்தகத்தில், தனுசு ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் மக்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். 2018 மார்ச் 2ஆம் தேதி வரை நாட்டில் அரசியல் கட்சிகளிடையே சிக்கல் ஏற்படும், குழப்பம், போராட்டம் அதிகரிக்கும். அநீதிகள் அழிக்கப்பட்டு ஆகஸ்ட் 2018ஆம் தேதிக்கு பிறகு மக்கள் மாறுபட்ட சிந்தனையை நாடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படும்.
கடல் கொந்தளிப்புகள்
சனிப்பெயர்ச்சி தினத்தன்று சனீஸ்வரர் நின்ற கிரகம் கேது. கேது கிரகம் கடல் ராசியில் இருப்பதாலும், கேது நின்ற கிரகம் செவ்வாய் என்பதாலும் சனி, செவ்வாய், கேது கிரகங்களின் போராட்டங்களினால் கடலுக்கு அடியில் விலகுதல் ஏற்பட்டு கடல் கொந்தளிக்கும். இது டிசம்பர் 15 முதல் 2018 பிப்ரவரி வரை இருந்து வரும்.
ஆசியா, ஐரோப்பிய நாடுகள்
இந்தோனேசியா, ஜப்பான், இந்தியா, நேபாளம், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற ஆசிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும்,அக்னிக்குழம்புகள் வெளிப்படும். எரிமலை தாக்கமும் பல நாடுகளில் இருந்து வரும். என்றாலும் பெரிய அளவில் பாதிப்புகள் வந்து குறைந்து விடும் என்று கணித்துள்ளார் பண்டிதர் பச்சை ராஜென்.
உருமும் எரிமலை
இந்தோனேஷியாவை அவ்வபோது இயற்கை சீற்றங்கள் ஆட்கொள்வது ஒன்றும் புதிதல்ல. தற்போது அங்குள்ள பாலி தீவில் உறுமி வரும் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு சுற்றுவட்டார மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
நள்ளிரவில் நடுங்கிய மக்கள்
இந்நிலையில் இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா தீவில் நேற்று இரவு 11.47 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது.
பஞ்சாங்கம் கணிப்பு
அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான்,ஈராக் இந்தோனேசியா நாடுகளில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டு உயிர், பொருள், உடமைகள் சேதம் ஏற்படும் என்றும் 11 புயல்கள் உருவாகி 5 புயல்கள் பலஹீனமடைந்து மற்ற 6 புயல்களினால் நல்ல மழை ஏற்படும் என்று 2017-18 ஆம் ஆண்டு பஞ்சாங்கம் கணித்துள்ளது.
கடல் சீற்றம்
ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் இந்தோனேசியா, ஈரான், ஈராக் நாடுகளில் பூமி வெடிப்பும், நில நடுக்கங்களும் ஏற்படும், கன்னியாகுமரி, திருச்செந்தூர் கடலூர், பாண்டிச்சேரி, சென்னை, நாகையில் கடல் கொந்தளிப்பும், கடல் சீற்றமும் ஏற்படும் என்றும் பஞ்சாங்கத்தில் கணித்துள்ளது.