லோக்சபா தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் - விகாரி பஞ்சாங்கம் கணிப்பு
லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆளும் கட்சி பெரும் போராட்டத்திற்குப் பின்னர் ஆட்சியமைக்கும் என்று விகாரி வருஷத்திய பஞ்சாங்கம் கணித்துள்ளது.
சென்னை: தமிழ் புத்தாண்டு விகாரி இன்னும் சில வாரங்களில் பிறக்கப் போகிறது. இந்த புத்தாண்டு எப்படியிருக்கும் நல்ல மழை பெய்யுமா? வெள்ளம் தாக்குமா? வறட்சியால் தண்ணீர் தட்டுப்பாடு வருமா என்று பலரும் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். இது லோக்சபா தேர்தல் காலம் என்பதால் இந்த தேர்தலில் வெற்றி பெற்றி ஆட்சியமைக்கும் கட்சி எது என்று விகாரி வருஷத்திய ஸ்ரீநிவாசன் சுத்த திருக்கணித சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் கணித்துள்ளது.
சித்திரை மாதம் 1ஆம் தேதி ஏப்ரல் 14ஆம் தேதி ஞாயிறுகிழமை பகல் 2.09 மணிக்கு சூரிய உதயாதி 20-20 நாளிகை அளவில் கடக லக்கினம் ஆயில்யம் நட்சத்திரத்தில் மங்களகரமான விகாரி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டு எப்படியிருக்கும் என பல பஞ்சாங்கங்கள் கணித்துள்ளன.
மழை, வெயில், விலைவாசி உயர்வு, அரசியல்வாதிகள் நிலை, தங்கம், பங்குச்சந்தை நிலவரம் என அனைத்தையும் பஞ்சாங்கம் கணித்துள்ளது. லோக்சபா தேர்தலில் ஆளுங்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அமையும் பல போராட்டங்களுக்குப் பின்னர் ஆட்சி அமையும் என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
சந்திரன் சாதகம்
இந்த தமிழ் புத்தாண்டு பெண்களுக்கு ஏற்றம் தரும் வருடமாக அமையப்போகிறது. காரணம் கடக லக்னமாகி, லக்கினத்தில் சந்திரன் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். ஏற்றுமதி அதிகமாகும். ஜவுளித்தொழில் வளர்ச்சியடையும். கடல் சார்ந்த பொருட்களின் வியாபாரம் நன்கு விருத்தியாகும்.
ஆளுங்கட்சி ஆட்சிக்கு வரும்
இரண்டாம் இடம் சிம்மராசி. இரண்டுக்கு உடைய சூரியன் மேஷ ராசியான பத்தாமிடத்தில் உச்சமாகி குரு பார்வை பெறுகிறார். லோக்சபா தேர்தலில் ஆளும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். ஆளும் கட்சி வெற்றி பெற்றாலும் பல போராட்டங்களுக்குப் பின்னர் ஆட்சி அமைக்கும்.
செவ்வாயினால் நோய்கள்
மூன்றுக்குடைய புதன் நீசம் பெற்று ஒன்பதாம் இடம் அமைந்து சனி பார்வை பெறுவதால் நரம்பு தளர்ச்சி நோய்கள் பொதுமக்களுக்கு அதிகரிக்கும். ஆறாமிடமான தனுசு ராசியில் குரு சனி, கேது அமர்ந்து செவ்வாய் பார்வை பெறுவதால் பொதுமக்கள் பலருக்கு வயிறு, ஜீரண உறுப்புகளில் நோய்கள் ஏற்பட்டு ஆபரேசன் அதிகரிக்கும். கடன்கள் அதிகமாகும்.
திருமண தடை காதல் திருமணம்
ஏழாம் இடத்திற்கு உரிய சனிபகவான் ஆறாமிடத்தில் குரு கேது உடன் இருந்து ஏழாமிடம் சந்திரன் பார்வை பெறுவதால் இந்த ஆண்டு திருமண முடிவிற்குப் பின்னர் பல திருமணங்கள் தடைபடும். காதல் திருமணங்கள் அதிகமாகும்.
வேலையில் சிக்கல்
பதினொன்றாம் இடத்தில் செவ்வாய் அமர்ந்து பதினொன்றுக்கு உடைய சுக்கிரன் 8ஆம் இடம் சஞ்சரிப்பதால் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூட்டர் துறையில் தேக்க நிலை ஏற்படும் ஊழியர்கள் வேலையில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். 12ஆம் இடத்தில் ராகு அமர்ந்திருக்க 12ஆம் இடத்திற்கு உரிய புதன் நீசம் பெற்று அமர்ந்திருக்கிறார். இதனால் பொதுமக்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவார்கள் என பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.