நம்பர் ரொம்ப முக்கியம் மக்களே... காமராஜர் தொடங்கி எடப்பாடியார் வரை... 5ம் நம்பர் ராசி!
நம்பர்ல என்ன இருக்கு என்று சிலர் கேட்கலாம். சில நம்பர்கள் அதிசயத்தை நிகழ்த்தும். குறிப்பாக 5ஆம் நம்பர் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: தமிழக முதல்வர் நாற்காலிக்கும் ஐந்தாம் நம்பருக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. சென்னை மாகாணத்தை ஆண்டாவர்களும் சரி தமிழ்நாடாக மாறிய பின்னர் ஆள்பவர்களும் சரி ஐந்தெழுத்தை பெயராகக் கொண்டவர்கள்தான் அதிக காலம் முதல்வர் நாற்காலியை அலங்கரித்திருக்கின்றனர். தற்போதய முதல்வர் பழனிசாமி கூட ஐந்தெழுத்தை கொண்டவர்தான். திமுகவில் கருணாநிதிக்குப் பின்னர் ஸ்டாலின், அழகிரி, அருள்நிதி, உதயநிதி, தயாநிதி என இருந்தாலும் அரசியலில் ஆர்வமாக இருப்பது ஸ்டாலினும், உதயநிதியும்தான். ஐந்தெழுத்து மந்திரம் யாருக்கு கை கொடுக்கும் முதல்வர் நாற்காலி யாருக்கு வசியமாகும் என்று பார்க்கலாம்.
ஐந்திணை, ஐவகை நிலங்கள், பஞ்சபூதங்கள், ஐம்பெரும் காப்பியங்கள் என ஐந்தாம் எண்ணுக்கும் தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
தமிழகம் என்று சொன்னாலும் சரி, தமிழ்நாடு என்று சொன்னாலும் சரி ஐந்தெழுத்துதான். அரசியல்,முதல்வர், கையெழுத்து, வேட்பாளர், வேட்புமனு,பிரசாரம் என அரசியல் தொடர்புடைய அத்தனை வார்த்தைகளும் ஐந்தெழுத்தை கொண்டதுதான்.
ஐந்தாம் எண்ணுக்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உடையது. 5ஆம் எண் புதனின் ஆதிக்கம் கொண்ட எண். ஜாதகத்தில் புதன் வலுவாக உள்ளவர்கள். புதனுக்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. புத ஆதிபத்ய யோகம் கொண்டவர்கள் அரசியலில் ஜொலிப்பார்கள். பச்சை நிறமும் புதன் ஆதிபத்யம் கொண்டதுதான். கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்தே அப்போதய முதல்வராக இருந்த ஜெயலலிதா அதிகம் பயன்படுத்தியது பச்சை நிறமும், ஐந்தாம் எண்ணையும்தான்.
காமராஜர் டூ பழனிசாமி
தமிழ்நாட்டை ஆண்டவர்களில் காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என பல முதல்வர்கள் ஐந்தெழுத்தை பெயராக கொண்டவர்கள்தான். இந்த ஐந்தெழுத்து பெயர்காரர்கள்தான் தமிழக முதல்வர் நாற்காலியில் அமர்ந்து அழியாத புகழை பெற்றவர்களாக மாறியிருக்கின்றனர். தற்போதய முதல்வர் பழனிச்சாமியும் ஐந்தெழுத்தை பெயராகக் கொண்டவர்தான். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு பல சிக்கல்களையும் கடந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து மூன்றாண்டுகளை நிறைவு செய்து விட்டார்.
காமராஜர்
காமாட்சியாக இருந்தவர் காமராசுவாக மாறி பின்னர் காமராஜர் ஆக உயர்ந்து பெருந்தலைவராக தென்னாட்டு காந்தியாக மக்கள் மனதில் இன்றைக்கும் நிற்கிறார். தமிழ்நாட்டு முதல்வர் பதவியில் பத்தாண்டுகளுக்கு மேல் பொற்கால ஆட்சி செய்து இன்றைக்கும் காமராஜர் ஆட்சியைப் பற்றி பலரையும் பேச வைக்கிறார். காமராஜருக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியையும், ஆட்சியையும் தமிழ்நாட்டில் முன்னெடுத்து செல்ல மக்களின் மனம் கவர்ந்த தலைவர்கள் யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
காங்கிரஸ் முதல்வர்கள்
ஏ.சுப்பராயலு ரெட்டியார்,இராமராய நிங்கார், ராஜாஜி எனப்படும் ராஜகோபாலாச்சாரியார், குமாரசுவாமி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பக்தவச்சலம், என பல முதல்வர்கள் அரியணையில் அமர்ந்திருந்தாலும் இன்றைய தலைமுறையினர் பலருக்கு இவர்களைப் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை. பக்தவச்சலத்திற்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு தமிழ்நாட்டில் சாவுமணி அடித்து விட்டார்கள். காங்கிரஸ் கட்சியினர்தான் எத்தனையோ முதல்வர்கள் ஆண்டிருந்தாலும் காமராஜர் ஆட்சி அமைய பாடுபடுவோம் என்று இப்போதும் பேசுகிறார்கள்.
அண்ணாதுரை
மூன்றெழுத்தில் முத்தாக பேசி கைத்தட்டல்களை அள்ளியவர் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. ஐந்தெழுத்து பெயர் கொண்ட அவரை அண்ணாவாக சுருக்கி விட்டனர். அவர் தமிழகத்தை ஆண்டது என்னவோ சில ஆண்டுகள்தான். ஆனால் அவர் தமிழ்நாட்டின் மறக்க முடியாத முதல்வராகி விட்டார்.
அரை நூற்றாண்டுகால அரசியல்
அவருக்குப் பின்னர் திமுக தலைவராக பொறுப்பெற்ற கருணாநிதி என்ற ஐந்தெழுத்துக்காரர்தான் தமிழகத்தின் அரசியலில் பல ஆண்டு காலம் கோலோச்சியவர். தமிழக அரசியலின் வரலாற்று பக்கங்களை புரட்டினால் அரை நூற்றாண்டு காலம் கருணாநிதியின் சாதனையை சொல்லும்.
அவருக்குப் பின்னர் ஸ்டாலினால் முதல்வர் நாற்காலியில் இன்னமும் அமரமுடியவில்லை அதற்கான யோகமும் வரவில்லை.
அதிமுக ஆட்சிகாலம்
அதிமுக ஆட்சி காலத்தை எம்ஜிஆர் சகாப்தம், ஜெயலலிதா சகாப்தம் என பிரிக்கலாம். மூன்றுமுறை தமிழகத்தை ஆண்டவர் எம்ஜிஆர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை ஆண்டவர் ஜெயலலிதா. எம்ஜிஆருக்குப் பின்னர் அதிமுகவின் தொண்டர்கள் பலத்தை அதிகரித்து கருணாநிதிக்கு சரியான போட்டியாக உருவானர் ஜெயலலிதாதான். சிறை சென்று திரும்பினாலும் திரும்பிய பக்கமெல்லாம் எதிரிகளையே காணோம் என்று சொல்லும் அளவிற்கு வெற்றி பெற்று முதல்வர் அரியணையில் அமர்ந்தார். முதல்வராகவே மறைந்தார். எண்கணித ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர். 5ஆம் எண்ணை ராசி எண்ணாக உபயோகப்படுத்தியர் ஜெயலலிதாதான்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல்
இதோ அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. ஆளும் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்கவும்
எதிர்கட்சி பத்தாண்டு கால வனவாசத்தை முடிவுக்கு கொண்டு வரவும் போராடி வருகின்றன. தமிழ்நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் திமுக, அதிமுக உடன் கூட்டணி கட்சிகளுக்கு இடையேதான் போட்டியே.
முதல்வர் நாற்காலி சண்டை
தமிழ்நாட்டின் அரியணையில் அமர யாருக்குத்தான் ஆசையிருக்காது. முதல்வராக வேண்டும் என்ற கனவில் தேர்தல் பிரச்சாரத்தின் போதே முதல்வராக பதவியேற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களும் ஐந்தெழுத்து கொண்டவர்கள்தான் ஆனால் சாதிக்கட்சி என்ற பிம்பமும், அப்பாவின் பெயரை இணைத்துக்கொண்டதாலும் முதல்வர் நாற்காலி வெறும் கனவாகவே போய் விட்டது.
அதிமுக - திமுக
ஜெயலலிதா இருந்த போதும் சரி, அவரது மரணத்திற்குப் பின்னரும் சரி ஓபிஎஸ் எனப்படும் ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் நாற்காலியில் அமராமலேயே முதல்வராக பதவி வகித்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வராக மூன்றாண்டு காலம் முதல்வர் நாற்காலியில் நீடித்திருக்கிறார். 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை மூன்றாவது முறையாக தக்கவைக்குமா? அல்லது திமுக ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதல்வர் யோகம்
ஐந்தெழுத்து ராசிக்காரர்கள்தான் முதல்வராக முடியும் என்று நியூமராலஜி படி யோசித்தால் திமுகவில் இளைஞரணி செயலாளர் உதயநிதிக்குதான் ஐந்தெழுத்து இருக்கிறது. அவர் தனது பெயருக்கு பின்னால் அப்பாவின் பெயரையும் இணைத்துக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே பாமகவின் அன்புமணி தனது அப்பாவின் பெயரை இணைத்து ஜொலிக்க முடியாமல் போனது நினைவிருக்கலாம். இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது. தமிழக அரசியல் அரங்கில் புதிய காட்சிகள், கோலங்கள் அரங்கேறலாம். முதல்வர் அரியணையில் அமரப்போகும் அடுத்த ஐந்தெழுத்துக்காரர் யார் என்று பார்க்கலாம்.