ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்
தென்காசியிலுள்ள பிரசித்திபெற்ற காசி விஸ்வநாதர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
Recommended Video
தென்காசி: தென்காசி மாவட்டம் காசி விஸ்வநாதர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
தென்காசியில் பிரசித்தி பெற்ற காசிவிசுவநாத சுவாமி சமேத உலகம்மன் கோவில் உள்ளது. சுமார் எழுநூறு வருடங்களுக்கு முன்பு பராக்கிரம பாண்டியன் சிவ பெருமானை வழிபட காசிக்கு செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தான். ஒருநாள் மன்னன் கனவில் தோன்றிய இறைவன், வடக்கே உள்ள காசிக்கு வருதற்கு பதிலாக இவ்விடத்திலேயே தட்சிண காசியில் கோயில் அமைத்து வழிபடும்படி கூறினார். அதாவது எறும்பு ஊர்ந்து செல்லும் வழியாக சென்று அது எங்கு முடிகிறதோ அங்கு கோயில் கட்டும் படி இறைவன் கூறுகிறார். அதன்படி மன்னனும் எறும்பு சென்ற வழியே சென்ற போது, அது சிற்றாற்றங்கரையில் செண்பக வனத்திற்கு வந்து சேர்ந்தது. அந்த இடத்தில் புற்றில் சுயம்புலிங்கம் கண்டு கோயில் கட்டி வழிபட்டான். இன்றைக்கு சிறப்பு வாய்ந்த கோவிலாக திகழ்கிறது தென்காசி கோவில்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வாண்டுக்கான திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற சிறப்புப் பூஜைகளிலும், திருக்கொடியேற்றத்திலும் திரளான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர். தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்புப் பூஜைகள் அதனைத் தொடர்ந்து மண்டகப்படி பூஜைகள் நடைபெற்றன.
இதுபோல் தினமும் இரவு சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெற்றது. விழாவின் 9ஆம் நாளான செவ்வாய்கிழமையன்று முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு புறப்பட்ட உலகம்மன் திருத்தேர் நான்கு ரத வீதிகள் வழியாக வலம்வந்து 10.15 மணிக்கு நிலையம் வந்தடைந்தது.
தேரோட்ட ஏற்பாடுகளை திருநெல்வேலி இணை ஆணையர் பரஞ்சோதி உதவி ஆணையர் சங்கர் செயல் அலுவலர் நாராயணன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர் பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் செய்திருந்தனர்