தை அமாவாசை 2020: உங்க ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கா... இந்த பரிகாரங்களை செய்யுங்க
மதுரை: ஒருவருடைய ஜாதகத்தில் என்ன தான் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்று பலமாக அமர்ந்திருந்தாலும், பித்ரு தோஷம் மட்டும் இருந்தால் அவ்வளவு தான், அவர் என்னதான் பகீரத பிரயத்தனம் செய்தாலும் வாழ்வில் முன்னேற்றம் காண முடியாது. எடுக்கும் அனைத்து காரியங்களும் தோல்வியில் தான் முடியும். ஜான் ஏறினால் முழம் சறுக்கும். அவர் மானசீகமாக கும்பிடும் தெய்வம் கூட அவருக்கு துணைக்கு வராமால் ஓரமாக ஓதுங்கி நின்று கை கட்டி வேடிக்கை தான் பார்க்கும்.
இதற்கு காரணம் பித்ருக்களின் சாபம் தான். பித்ருக்களின் சாபத்தை போக்க வேண்டுமென்றால், முதலில் பித்ருக்களை சாந்தப்படுத்த வேண்டும். பித்ருக்களை சாந்தப்படுத்த வேண்டுமென்றால், பித்ரு தோஷத்தை போக்க வேண்டும். பித்ரு தோஷத்தை போக்கிய பின்பே, ஒருவரது ஜாதகமே தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பிக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் மஹாளய பட்சம் என்று ஒரு காலம் வரும். புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை பிரதமை திதியில் இருந்து அமாவாசை திதி வரை உள்ள 14 நாட்கள் தான் அந்த மஹாளய பட்ச காலமாகும். இந்த மஹாளய பட்ச காலத்தில் தான் நமது முன்னோர்கள் இந்த பூமிக்கு வந்து தன்னுடைய சந்ததிகளின் இல்லத்தில் உள்ள நீர் நிலைகளில் தங்கியிருப்பார்கள். அந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால், அந்த தர்ப்பணத்தை நமது பித்ருக்கள் நேரடியாகவே ஏற்றுக்கொண்டு நமக்கு ஆசி வழங்குவார்கள். அதோடு நம்முடைய பித்ரு தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம். மகாளய பட்ச காலத்தில் செய்த மறந்தவர்கள் தை அமாவாசை நாளில் பித்ருக்களை மறக்காமல் தர்ப்பணம் கொடுப்பது அவசியமாகும்.
ஜாதகம் சொல்வதென்ன
ஒருவருடைய ஜாதகம் பித்ரு தோஷம் உள்ள ஜாதகம் என்பதை எப்படி கணக்கிடுவது. ஒருவரது ஜாதகத்தில் பாவ கிரகம் எனப்படும் பாம்பு கிரகங்களான ராகுவும், கேதுவும் 1,3,5,7,9,11 ஆகிய இடங்களில் அஸ்திவாரம் போட்டு உட்கார்ந்திருந்தாலும் சரி, சூரிய சந்திர கிரகங்களோடு சேர்ந்து உட்கார்ந்திருந்தாலும் சரி, அந்த ஜாதகம் பித்ரு தோஷம் உள்ள ஜாதகமாகும்.
ராகு கேது
ராகுவும் கேதுவும் தான் முன்வினைகளை பிரதிபலிக்கும் கிரகங்களாகும். ராகு நமது தந்தை வழி முன்னோர்களையும், கேது தாய் வழி முன்னோர்களையும் குறிக்கும் கிரகங்களாகும். சாயா கிரகங்களான ராகுவும், கேதுவும் நம்முடைய முன்னோர்கள் செய்த பாவ-புண்ணிய கணக்கை தெளிவாக காட்டுவதோடு மட்டுமில்லாமல், அந்த பாவங்களை தீர்க்க முடியுமா, முடியாதா? என்பதையும் படம் பிடித்து காட்டும் கிரகங்களாகும்.
முன்னோர்களின் பாவங்கள்
ஒருவருடைய ஜாதகத்தில் ராகுவும் கேதுவும் அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து தான் அவரின் படிப்பு முதல் எதிர்கால வாழ்க்கையும் அமையும். மேற்குறிப்பிட்டவாரு, ஒருவரின் ஜாதகத்தில் 1,3,5,7,9,11 ஆகிய இடங்களில் ராகுவும் கேதுவும் பலமாக உட்கார்ந்துவிட்டால், படிப்பு, வேலை, மண வாழ்க்கை என அத்தனையுமே கேள்விக்குறி தான். அதற்கு காரணம், அவர் முற்பிறவியில் செய்த பாவங்களும், முன்னோர்கள் செய்த பாவங்களும் தான்.
பாவ புண்ணியங்கள்
ஒருவர் முற்பிறவியில் செய்த பாவங்களே, இப்பிறவியில் அப்படியே தோஷங்களாக மாறி அவரின் ஜாதக கட்டத்தில் அஸ்திவாரம் போட்டு அமர்ந்துகொள்கின்றன. அதுவே முற்பிறவியில் புண்ணியம் செய்திருந்தால், இப்பிறவியில யோக கட்டங்களாக அமைந்துவிடுகின்றன. கூடவே, நமது முன்னோர்களிடம் இருந்து தான் நாம் உடல், பொருள், ஜீவன் என அனைத்தையும் பெறுகிறோம். எனவே, முன்னோர்களின் பாவ-புண்ணியத்தில் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் நாமும் அனுபவிக்கவேண்டும் என்பது தான் நமது தலைவிதியாகும். புண்ணியம் செய்திருந்தால் அந்த புண்ணியத்தையும் சேர்த்தே அனுபவிக்க வேண்டும்.
புராணங்கள்
நமது முன்னோர்களின் பாவமும், நாம் முற்பிறவியில் செய்த பாவமும் பார்ட்னர்ஷிப் போட்டுக்கொண்டு, இந்தப் பிறவியிலும், நமக்கு பின்பு நமது சந்ததிகள் என தலைமுறை, தலைமுறையாக நிழல் போல் பின்தொடர்ந்து வரும் என புராணங்களிலும், ஜோதிடத்திலும் கூறப்பட்டுள்ளன. ஆகவே தான், நாம் ஒவ்வொருவரும் நமது பாவத்தையும், நமது முன்னோர்களின் பாவத்தையும் சேர்த்து அழித்து, முன்னோர்களின் ஆன்மாக்களையும், நமது ஆன்மாக்களையும் நற்கதி அடைய வழிவகை செய்ய வேண்டும்.
மஹாளய பட்சம்
நம்முடைய முன்னோர்களான பித்ருக்களின் ஆன்மா நற்கதி அடையத்தக்க முறையான பரிகாரங்களையும் நாம் மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் தான் பித்ரு தோஷம் நிவர்த்தியாகும். பித்ரு தோஷத்தை எவ்வாறு நிவர்த்தி செய்வது?. ஒவ்வொரு ஆண்டும் மஹாளய பட்சம் என்று ஒரு காலம் வரும். அதாவது, தமிழ் வருடத்தின் புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை பிரதமை திதியில் இருந்து அமாவாசை திதி வரை உள்ள 14 நாட்கள் தான் அந்த மஹாளய பட்ச காலமாகும்.
பித்ரு தர்ப்பணம்
இந்த மஹாளய பட்ச காலத்தில் தான் நமது முன்னோர்கள் இந்த பூமிக்கு வந்து தன்னுடைய சந்ததிகளின் இல்லத்தில் உள்ள நீர் நிலைகளில் தங்கியிருப்பார்கள். அந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால், அந்த தர்ப்பணத்தை நமது பித்ருக்கள் நேரடியாகவே ஏற்றுக்கொண்டு நமக்கு ஆசி வழங்குவார்கள். ஒரு வேளை, மஹாளய பட்ச காலத்தில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், மகாபரணி நட்சத்திர நாளிலும், அமாவாசை திதியிலும் செய்தால் கூட போதும்.
தை அமாவாசை
குறிப்பாக ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களிலும் நாம் பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானம் நம்முடைய அனைத்து தோஷங்களையும், நீக்கும். மிகக்கடுமையான பித்ரு தோஷம் உள்ளவர்கள், ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்வது அவசியமாகும். மேலும் இந்துக்கள் அனைவரும், வாழ்வில் ஒரு முறையாவது ராமேஸ்வரம், காசி, கயா ஆகிய புண்ணிய தலங்களுக்கு சென்று பிதுர் தர்ப்பணம் செய்தால் வாழ்வு வளமாகும் என்பது ஐதீகம். பித்ருக்களை சாந்தப்படுத்தி அவர்களின் ஆசி பெறாமல் நாம் செய்யும் எந்த காரியமும் வெற்றி பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.