தை அமாவாசை 2020: பித்ருக்களின் சாபம் எத்தனை வலிமையானது தெரியுமா
அமாவாசை திதியன்று நாம் முறையாக பித்ருக்களை வழிபட்டு அவர்களின் பசியை போக்கவேண்டும். இல்லாவிட்டால், நமது பித்ருக்கள் மிகுந்த வருத்தத்துடன் பிதுர் லோகம் சென்றுவிடுவார்கள். பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்யா
மதுரை: அமாவாசை திதியன்று நாம் முறையாக பித்ருக்களை வழிபட்டு அவர்களின் பசியை போக்கவேண்டும். இல்லாவிட்டால், நமது பித்ருக்கள் மிகுந்த வருத்தத்துடன் பிதுர் லோகம் சென்றுவிடுவார்கள். அப்படி வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்லும் நமது முன்னோர்கள் கோபம் கொண்டு, நமக்கு சாபமும் அளித்துவிடுவார்கள். இந்த சாபமானது தெய்வத்தின் அருளையும் கூட தடை செய்யும் சக்தி பெற்றது. முறையாக பித்ரு கடன்களை செலுத்தாவிட்டால், நம்மை படைத்த கடவுளால் கூட நமக்கு கருணை காட்ட முடியாது. அவ்வளவு வலிமையானவர்கள் நம்முடைய பித்ருக்கள் தான்.
கடவுளால் இந்த பூமியில் படைக்கப்பட்ட எந்த ஒரு ஆன்மாவுக்கும் அழிவு என்பதே கிடையாது. கடவுளின் அருளால் உருவாக்கப்பட்ட ஜீவராசிகளின் உடம்புக்குள் ஆன்மாவாக நுழைந்து, அந்த ஜீவராசியின் ஆயுள் முடிந்த உடன், வந்த வேலை முடிந்தது என்று நினைத்து, பிறகு வேறு ஒரு ஜீவராசியின் உடம்புக்குள் புகுந்து அந்த ஜீவராசியின் பாவ புண்ணியத்துக்கு ஏற்ப ஆட்டம் காட்டும். அது மண்புழுவாக இருந்தாலும் சரி அல்லது ஆறறிவு படைத்த மனிதனாக இருந்தாலும் சரி ஒரே அளவு கோல் தான்.
மற்ற ஜீவராசிகளைப் பற்றி மனிதனுக்கு எந்தவிதமான கவலையும் கிடையாது. ஆனால், மனிதனாக பிறந்த ஒவ்வொரும், தான் முற்பிறப்பில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்றவாறே மீண்டும், மீண்டும் மறபிறவி எடுத்து, முற்பிறவியில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப பலா பலன்களை அனுபவித்து வாழ்ந்து மடிந்தது கடைசியில் இறைவனோடு கலந்து விடுகிறான்.
பித்ரு லோகம்
ஒரு ஆன்மா மனிதனாக பிறவி எடுத்து, பாவ புண்ணியத்துக்கு ஏற்ப பலா பலன்களை அனுபவித்துவிட்டு இறந்து போனால், இறந்த உடனேயே மீண்டும் ஒரு மனிதப் பிறவி எடுப்பது கிடையாது. இறந்த பின்பு ஆன்மாக்களின் உலகம் எனப்படும் பித்ரு லோகத்திற்கு சென்று, அங்கேயே தங்கியிருந்து, தனக்காக தன்னுடைய வாரிசுகள் செய்யும் பித்ரு கடன் எனப்படும் தர்ப்பணத்தை பெற்றுக்கொள்ளும் வரை ஆன்மாவாகவே சுற்றித் திரியும்.
ரத்தத்தின் ரத்தங்கள்
பித்ரு என்பது, இறந்துபோன நமது தந்தை, தாய், உள்ளிட்ட முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழி மற்றும் தாய் வழி சொந்தம் என இறந்துபோன நம்முடைய அனைத்து முன்னோர்களுமே நமது பித்ருக்கள் தான். நமது தந்தை வழியில் இருந்து போன முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் என்றும், தாய் வழியில் இறந்த முன்னோர்கள் அனைவரும் மாத்ரு வழி பித்ருக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். சுருக்கமாக சொல்வதென்றால், நமது ரத்த சொந்தத்தில் இறந்து முன்னோர்கள் அனைவருமே பித்ருக்கள் தான்.
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
நாம் அழகாக பேணி காக்கும் நம்முடைய உடல், பொருள், ஆன்மா அனைத்துமே, நம்முடைய பித்ருக்கள் நமக்கு அளிதத பிச்சை தான். அவர்கள் போட்ட பிச்சையில் தான் நாம் இவற்றை சுகபோகமாக அனுபவித்து வருகிறோம். அப்படி நாம் அனுபவிக்கும் போது, அந்த பித்ருக்கள் செய்த பாவ புண்ணியத்தையும் சேர்த்தே தான் நாம் அனுபவித்து வருகிறோம். அப்படி எல்லாம் முடியாது, அவர்கள் செய்த புண்ணியத்தை மட்டுமே நான் அனுபவிப்பேன் என்று ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. பாவ புண்ணியம் என இரண்டையும் சேர்த்து தான் அனுபவிக்க வேண்டும்.
ஆன்மாவை சாந்தப்படுத்தனும்
நம்மோடு வாழ்ந்து மறைந்துவிட்ட நமது முன்னோர்களான பித்ருக்கள் அனைவருமே, நாமும் நம்முடைய சந்ததிகளும் நலமுடன் வாழவேண்டும் என்று தான் விரும்புவார்கள். எனவே தான், அவர்கள் உயிரோடு இருந்தபோது, அவர்களை முறையாக பேணி காத்து அவர்களின் பசியை போக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட, அவர்கள் இறந்த பிறகாவது அவர்களின் பசியை போக்கி அவர்களின் ஆன்மாவை சாந்தப்படுத்த வேண்டும். இது தான் பிதுர்க்கடன் என கூறப்படுகிறது.
தமிழர்களின் ஆவி வழிபாடு
நமது பித்ருக்களுக்கு நாம் செய்யும் பித்ரு கடன் வழிபாடு என்பது ஆவி வழிபாடு எனப்படும். ஆவி வழிபாடு என்பது பழந்தமிழர்களின் மூதாதையர் வழிபாட்டு முறையாகும். இந்த வழிபாடு தற்போது மறைந்து வருகிறது. ஆனால், கிராமங்களில் இன்றும் இந்த மூதாதையர் வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆவி வழிபாடு என்பதால் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. காரணம், நம்முடைய முன்னோர்களின் ஆவியானது, மறுபிறப்பு எடுக்கும் வரையிலும் நம்முடைய நலனில் பெரிதும் அக்கரை கொண்டவையாகவே இருக்கும்.
ஆவி ரூபத்தில் பித்ருக்கள்
நமது பித்ருக்கள் தான், நமக்கும் இறைவனுக்கும் நடுவில் இருந்து இறைவின் அருளாசியை நமக்கு பெற்றுத் தருவதோடு, நமது வேண்டுதல்களையும் இறைவனிடம் கொண்டு சேர்த்து வேண்டுதல்களையும் நிறைவேற்றித் தருவார்கள். இப்படி, ஆவிகள் ரூபத்தில் உலவிடும் நமது முன்னோர்களுக்கு நாம் முறையாக செய்யும் வழிபாடு தான் பித்ருகடன் அல்லது தர்ப்பணம் என கூறப்படுகிறது.
நீர் நிலைகளில் தங்கும் பித்ருக்கள்
நம் மீதும் நம்முடைய சந்ததிகள் மீதும் அதிக அக்கறை கொண்ட நமது பித்ருக்களை நாம் வழிபாடு செய்து அவரிகளின் பசியைப் போக்க வேண்டியது நமது கடமையாகும். அப்படி இல்லாமல் பித்ருக்களின் பசியை போக்காமல், அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு நாம் ஏன் மரியாதை செலுத்த வேண்டும் என்று உதாசீனப்படுத்தினால், நமது பித்ருக்கள் பசியால் வாடுவர். அப்படி பசியால் வாடும் பித்ருக்கள் ஒவ்வொரு அமாவாசை திதியிலும் நமது வீட்டிலுள்ள நீர் நிலைகளில் வந்து தங்குவார்கள்.
பித்ருக்களின் சாபம்
அமாவாசை திதியன்று நாம் முறையாக பித்ருக்களை வழிபட்டு அவர்களின் பசியை போக்கவேண்டும். இல்லாவிட்டால், நமது பித்ருக்கள் மிகுந்த வருத்தத்துடன் பிதுர் லோகம் சென்றுவிடுவார்கள். அப்படி வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்லும் நமது முன்னோர்கள் கோபம் கொண்டு, நமக்கு சாபமும் அளித்துவிடுவார்கள். இந்த சாபமானது தெய்வத்தின் அருளையும் கூட தடை செய்யும் சக்தி பெற்றது. முறையாக பித்ரு கடன்களை செலுத்தாவிட்டால், நம்மை படைத்த கடவுளால் கூட நமக்கு கருணை காட்ட முடியாது. அவ்வளவு வலிமையானவர்கள் நம்முடைய பித்ருக்கள் தான்.
ஜாதகத்தில் பித்ரு தோஷம்
எனவே தான், நாம் பித்ருக்களின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பிக்க வேண்டுமானால், அவர்களுக்கு நாம் முறையாக பித்ரு கடன் செய்து அவர்களின் பசியை போக்கி அவர்களை சாந்தப்படுத்த வேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள தோஷத்திலேயே மிகக் கடுமையான தோஷமே பித்ரு தோஷம் தான். பித்ரு தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு முதல், வேலை, தாம்பத்ய வாழ்க்கை, குழந்தை என இவற்றில் ஏதாவது ஒன்றில் தீராத பிரச்சனையும் சிக்கலும் இருந்து வரும்.
பித்ரு தோஷம் என்ன செய்யும்
பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்யாமல் நாம் செய்யும் எந்த ஒரு பூஜையோ பரிகாரமும் வேலைக்கு உதவாது, பலனும் தராது. ஆகவே தான், நாம் முதலில் பிதுர் தோஷத்தை போக்கிட வேண்டியது அவசியமாகும். பிதுர் தோஷம் உள்ளவர்களின் ஜாதகமே, பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்த பின்பு தான் தன்னுடைய வேலையை தொடங்கும். இல்லாவிட்டால் ஒருவருக்கு ஒன்பது ராசிகளும் உச்சம் பெற்று முதல்வராக ஆகும் ஜாதகமாக இருந்தாலும் கூட, அனைத்து ராசிகளும் சைலண்ட் மோடிலேயே இருக்கும். எனவே, பிதுர் தோஷம் உள்ளவர்கள் முதலில் அந்த தோஷத்தை போக்க வேண்டியது அவசியமாகும்.