தை அமாவாசை நாளில் தர்ப்பணம் மட்டுமல்ல தானம் கொடுங்க... முன்னோர்களின் ஆசி கிடைக்கும்
தை அமாவாசை தினத்தன்று நமது முன்னோர்களையும் மறைந்த தாய், தந்தையரையும் நினைத்து திதிகொடுப்பதுடன் தானம் கொடுக்க வேண்டும். ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திர தானம் கொடுப்பதன் மூலம் நமது கர்மவினைகள் நீங்கும்.
சென்னை: தை அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு ஏழைகள், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்ய வேண்டும். தானம் கொடுப்பதன் மூலம் நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் நீங்கும். தண்ணீர் கூட தானமாக தரலாம். அன்னதானம் கொடுப்பதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இராமேஸ்வரம், திருப்புல்லானி மற்றும் கயா அக்ஷயவடம் போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது தர்ப்பணம் செய்வது பித்ரு தோஷத்தை போக்கும் என்கிறது சாஸ்திரம். இந்தியாவில் பித்ரு ஸ்தலங்கள் 7 உள்ளன. அவை, காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி.
பித்ரு ஸ்தலங்களில் ஒன்றாக இந்த திலதர்ப்பணபுரி விளங்குகிறது. இராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப் படுகின்றன இந்த திலதர்ப்பணபுரி திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. அங்கு சென்று தர்ப்பணம் கொடுப்பவர்களுக்கு பித்ரு தோஷங்கள் நீங்கும்.
திருச்சி காவிரிக்கரையில் உள்ள அம்மா மண்டபம். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள புஷ்பவனேஸ்வரர் - செளந்தரநாயகியம்மன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த சிவ ஸ்தலமாகும். தை அமாவாசை நாளில் கடற்கரையிலும் நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வார்கள். வீட்டில் இருந்தும் வழிபட்டு தர்ப்பணம் செய்யலாம்.
அமாவாசை நாளில் நமது முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்யலாம். இதன் மூலம் நமது கடன் பிரச்சினை நீங்கும் வறுமை நிலை மாறும். ஆடை தானம் கொடுத்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும் நோய் பிரச்சனை நீங்கும். ஆயுள் அதிகரிக்கும்.
குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் தடை இருப்பவர்கள் அமாவாசை தினத்தில் தேன் வாங்கி தானம் கொடுக்கலாம். இதன் மூலம் புத்திர பாக்கியம் உண்டாகும்.
கண் பிரச்சினை உள்ளவர்கள் தீபம், விளக்கு தானமாக கொடுக்கலாம். பார்வை கோளாறுகள் நீங்கும். கண் பிரச்சினைகள் நீங்கும். நெய் தானம் கொடுக்க தீராத நோய்கள் தீரும். பால், தயிர் தானமாக கொடுக்கலாம் கணவன் மனைவி பிரச்சினை தீரும் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.
காரிய வெற்றிக்கு தேங்காய் தானமாக கொடுக்கலாம். மனக்குழப்பங்கள் நீங்க பழங்களை தானமாக வழங்கலாம். தோஷங்கள் நீங்கும். துன்பங்கள் துயரங்கள் நீங்க வெள்ளி தானமாக கொடுக்கலாம்.
வியாழக்கிழமை தை அமாவாசை தினத்தில் முன்னோர்களை வணங்கி தர்ப்பணம் கொடுப்பதுடன் நம்முடைய பிரச்சினைகள் நீங்க தானம் கொடுக்கலாம். முன்னோர்களின் ஆசியுடன் சகல செல்வ வளமும் பெருகும்.