தை அமாவாசை நாளில் லட்சதீபத்தில் ஜொலிக்கப்போகும் நெல்லையப்பர் கோவில் - நாளை தங்க விளக்கு தீபம்
பித்ருகர்மா என்னும் நீத்தார் கடன்களை சரிவர நிறைவேற்றாதவர்கள் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தை அமாவாசை தினத்தன்று நடைபெறும் பத்ரதீபம் அல்லது லட்சதீப விழாவின்போது தீபமேற்றினால் குடும்ப சாபங்கள் வ
திருநெல்வேலி: தை அமாவாசை தினத்தன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பத்ரதீபமும் நடைபெறுகிறது. இதில் பத்தாயிரம் விளக்குகள் ஏற்றப்படும் ஆறாண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசையன்று, லட்சதீபமும் ஏற்றப்படுகிறது. பத்ரதீபம் மற்றும் லட்சதீப திருவிழாக்களின்போது மணி மண்டபத்தில் தங்கவிளக்கு, 2 வெள்ளி விளக்குகள் மற்றும் அவற்றைச் சுற்றி 8 தீபங்களை வைத்து பூஜை நடைபெறுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதியன்று லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் சிறப்பு வாய்ந்தது. சிவபெருமானின் பஞ்சசபைகளில் தாமிரசபையாக போற்றப்படுகிறது. இறைவன் நெல்லையப்பராகவும். வேணுவனநாதராகவும் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். வேதசர்மா என்பவர் சிவன் மீது பக்தி கொண்டவர். ஊர் ஊராக சென்று சேகரித்த நெல்மணிகளை தனது வீட்டிற்கு பக்கத்தில் காயவைத்திருந்தார். அப்போது பெரு வெள்ளத்துடன் மழை பெய்தது. மழை வெள்ளம் நெல்லை அடித்துச் சென்று விட்டால் இறைவனுக்கு எப்படி நைவேத்தியம் படைப்பது என்று கவலைப்பட்டார் வேதசர்மா. அப்போது இறைவன் சிவபெருமான் நெல்லுக்கு வேலி அமைத்தார். நெல்லுக்கு இறைவன் வேலி அமைத்து காத்த காரணத்தால் நெல்வேலி நாதானாக நெல்லையப்பராக போற்றப்படுகிறார். திருநெல்வேலி என்ற பெயரும் ஊருக்கு வந்தது.
நான்கு வேதங்களும் சிவனுக்கு நிழல் தருவதற்காக தவமிருந்து வரம் பெற்றன. மூங்கில் மரத்தின் நிழலில் இறைவன் எழுந்தருளினார். மூங்கில் வனத்தில் லிங்கமாக மறைந்திருந்த இறைவன் ஒருநாள் தன்னை வெளிப்படுத்தினார். அதுவும் திருவிளையாடல் நடத்திதான். பாற்குடம் சுமந்து சென்ற ராமகோபனின் காலை இடறிவிட்டு தன்னை சிவ லிங்கமாக வெளிப்படுத்தினார் சிவபெருமான். மன்னன் ராமபாண்டியன் பக்தி பரவசத்துடன் சிவனை வழிபட்டு அவருக்காக கோவில் எழுப்பினார். மூங்கில் வனத்தில் வெளிப்பட்ட இறைவன் வேணுவனநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற நெல்லையப்பர் கோவிலில் தை அமாவாசை நாளில் பத்ரதீபமும் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை லட்ச தீபமும் ஏற்றப்படும். இந்த ஆண்டுக்கான லட்சத்தீப திருவிழா கடந்த 13ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வேணுவனநாதர் மூலஸ்தானத்தில் சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்று வருகிறது. நேற்று அம்பாள் ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி, அம்பாள், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு யாகம் வருகிற 24ஆம் தேதி வரை நடக்கிறது.
நாளை ஜனவரி 19ஆம் ஞாயிறுகிழமை மாலை 6 மணிக்கு சுவாமி கோவில் மணிமண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றப்படுகிறது. அந்த தீபம் தை அமாவாசை தினமான ஜனவரி 24 வெள்ளிக்கிழமை இரவு 7 மணி வரை தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்கும். அன்று மாலை 6.30 மணி அளவில் சுவாமி கோவிலில் உள்ள உள் சன்னிதி, வெளிப்பிரகாரங்கள், காந்திமதி அம்மன் கோவில் உள் சன்னிதி, வெளி பிரகாரங்கள் ஆகிய இடங்களில் லட்சத்தீபம் ஏற்படுகிறது.
தை அமாவாசை நாளான 24ஆம் தேதி இரவு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் தங்க சப்பரத்திலும், சண்டிகேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் சுற்றி பின்னர் இரவு 10 மணிக்கு நெல்லை டவுன் ரத வீதிகளில் வீதி உலா நடக்கிறது. அன்று மதியம் 12 மணிக்கு ஆறுமுக நயினார் வெளிப்பிரகாரத்தில் மகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது.