தை அமாவாசை 2019 - நெல்லையப்பர் கோவிலில் பத்ரதீபம் - பெருமாள் கோவில்களில் பஞ்ச கருடசேவை
தை அமாவாசையை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் பத்ர தீபம் ஏற்றப்பட்டது. நெல்லையில் உள்ள பெருமாள் ஆலயங்களில் பஞ்ச கருட சேவை நடைபெற்றது.
நெல்லை: நெல்லையப்பர், காந்திமதியம்பாள் கோயிலில் தை அமாவாசை நாளான நேற்று பத்தாயிரம் தீபம் ஏற்றி வழிபடும் பத்ரதீப விழா நடைபெற்றது. பத்ர தீப திருவிழாவை முன்னிட்டு ஆண்டுக்கு இருமுறை மட்டும் ஏற்றப்படும் தங்க விளக்கு சுவாமி சன்னதியில் உள்ள மணிமண்டபத்தில் ஏற்றப்பட்டது. முன்னதாக, வினாயகர் சன்னதி முன்பு தங்கவிளக்குக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. நெல்லை டவுனில் உள்ள பெருமாள் ஆலயங்களில் இருந்து பஞ்ச கருட வாகனங்களில் உற்சவர்கள் எழுந்தருளினார்கள்.
நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் பத்ரதீப திருவிழா நடந்து வருகிறது. இந்தாண்டுக்கான பத்ர தீப திருவிழா ஞாயிறன்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இத்திருவிழா நேற்று வரை நடைபெற்றது. திருவிழா நாட்களில் சுவாமி வேணுவனநாதருக்கு மூலஸ்தானம் ருத்ர ஜெபம் மற்றும் அபிஷேக ஆராதனையும், மூலமகாலிங்கம், காந்திமதி அம்மன் மூலவர் சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும், ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் உற்சவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு ஹோமம், சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது.
விழாவையொட்டி 3ஆம் தேதி இரவு 7 மணிக்கு மணி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றும் வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த தீபமானது அமாவாசை வரை தொடர்ந்து எரிந்தது. இதனை தொடர்ந்து நேற்று ஆறுமுக நயினார் சன்னதியில் மகேஸ்வர பூஜையும், மாலை 6 மணிக்கு சுவாமி சன்னதி உள், வெளி பிரகாரங்கள், அம்மன் சன்னதி பிரகாரங்கள், ஆறுமுகநயினார் உள்சன்னதி பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் பத்ர தீபம் ஏற்றும் வைபவம் நடக்கிறது.
இதனையடுத்து சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் தங்க சப் பரத்திலும் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் ரத வீதியுலாவும் இரவு 10 மணிக்கும், கோயிலில் உள்ள நின்றசீர் நெடுமாறன் கலையரங்கத்தில் இரவு 7 மணி முதல் 10 மணி வரை ஆன்மீக சொற்பொழிவுகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் நெல்லை இந்து ஜவுளி வியாபாரிகள் மகமை சங்கத்தினர் செய்திருந்தனர்.
நெல்லை பெருமாள் கோவில்களில் பஞ்ச கருடசேவை
தைத்திருவோணமும், தை அமாவாசையும் இணைந்து இந்த ஆண்டு வருவதால் பெருமாள் கோவில்களில் கருட சேவை நிகழ்ச்சி நேற்று வெகு சிறப்பாக நடந்தது. இதையொட்டி நெல்லையை அடுத்த பேட்டை தென்திருப்பதி எனப்படும் வெங்கடாசல பெருமாள், சங்காணி வெங்கடாசல பெருமாள், நெல்லை டவுன் கரியமாணிக்க பெருமாள், லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் மகிழ்வண்ணநாத பெருமாள் ஆகிய கோவில்களில் நேற்று காலை திருமஞ்சனம் நடந்தது.
பின்னர் அந்த கோவில்களில் சிறப்பு வழிபாடு, அலங்கார தீபம் நடந்தது.மாலை 6 மணிக்கு கரியமாணிக்க பெருமாள் கோவில்களில் இருந்து அனைத்து சுவாமிகளும் எழுந்தருளினர். சந்தி விநாயகர் கோவில், லாலா சந்திர முக்கில் 5 கருட வாகனங்களில் உள்ள பெருமாள்களுக்கும் தீபாராதனை நடந்தது.
பின்னர் அங்கிருந்து புறப்பாடாகிய சுவாமிகள் பெரிய தேரடி திடல் அருகில் வந்தடைந்தனர். அங்கு சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்தது. அங்கு இருந்து புறப்பாடாகி நெல்லையப்பர் தேரடி திடல் பகுதிக்கு சென்று பக்தர்களுக்கு சுவாமிகள் காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து இருந்தனர்.