தை அமாவாசை : ராமேஸ்வரம், குமரி, பாபாநாசத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு
சென்னை: தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், ஸ்ரீ ரங்கம், கன்னியாகுமரியில் புனித நீராடிய மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
காணும் பொங்கல் தினமான நேற்று தை அமாவாசையும் வந்ததால் கோவில் குளங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. கன்னியாகுமரியில் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் நேற்று அதிகாலை முதலே ஏராளமானோர் தமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், படையல் இட்டும் வழிபாடு செய்தனர். இன்று காலை வரையிலும் அமாவாசை திதி நீடித்ததால் இன்று ஏராளமானோர் திதி கொடுத்து வழிபட்டனர்.
திதி கொடுத்த மக்கள்
சென்னை கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் காலை முதலே ஏராளமானவர்கள் திதி கொடுத்து வழிபட்டனர். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி ஆற்றில் நீராடி ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். காவிரி பாயும் திருவையாறு, மயிலாடுதுறையிலும் மக்கள் திதி கொடுத்து தர்ப்பணம் செய்தனர்.
முன்னோர்களுக்கு வழிபாடு
நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில், இன்று அதிகாலையிலேயே ஏராளமானோர் தமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், படையல் இட்டும் வழிபாடு செய்தனர்.
குற்றாலத்தில் திதி
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் அருவியில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்த ஏராளமானோர் குற்றாலநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்தனர். அருவியில் குறைந்த அளவு தண்ணீர் கொட்டிய நிலையில் அருவிக்கரையில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது
முன்னோர்களுக்கு திதி
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில், ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, எள், பச்சரிசி மற்றும் பூக்களினால் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
வேதாரண்யத்தில் தர்பணம்
கும்பகோணம் மகாமக குளத்தில், ஏராளமானோர் புனித நீராடி கிழக்கு கரையில் முன்னோர்களுக்கு அரிசி, காய்கறிகள் படைத்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர். நாகை மாவட்டம் கோடியக்கரை சேதுக்கடலிலும், வேதாரண்யம் சன்னதிக் கடலிலும் ஏராளமானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு பச்சரிசி, காய்கறிகள், பழங்கள் படைத்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
பத்திர தீபம்
பாபாநாசம் உலகம்மை சமேத பாபநாச நாதர் திருக்கோவில், அம்பை அம்மையப்பன் திருக்கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
பத்திர தீபம் எனப்படும் பத்தாயிரம் தீபம் ஏற்றப்பட்டது.
தை அமாவாசை பூஜை
நெல்லையப்பர் கோவிலில் தங்க விளக்கு தீபம் ஏற்றப்பட்டது. சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்தனர். அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி ஆலயத்தில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோபுர திருப்பணி நடைபெறுகிறது. ஏழுநிலை கோபுரம் கட்டும் பணி நடைபெறுகிறது. மக்கள் தங்களால் இயன்ற அளவு திருப்பணிக்கு கொடுத்து உதவலாம்.