முன்னோர்களுக்கு நன்றி சொல்லும் தை அமாவாசை- தர்பணம் அளித்து வழிபட்ட மக்கள்
நம்மை பாதுகாத்து ஆசி வழங்கும் முன்னோர்களுக்கு நன்றி சொல்லும் தை அமாவாசை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
சென்னை: அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்பணம் அளிப்பது காலம் காலமாக கடைபிடிக்கும் மரபு. அதுவும் ஆடி, புரட்டாசி, தை அமாவாசை காலங்களில் முன்னோர்களுக்கு புனித நீர் நிலைகளில் நீராடி தர்பணம் கொடுத்து படையலிட்டு வழிபடுவது சிறப்பு.
தை அமாவாசை தினமான இன்று ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேதாரண்யம், காவிரி ஆறு பாயும் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ஆகிய புனித தலங்களில் நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபட்டனர்.
முன்னோர்களுக்கு தர்பணம்
ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயண புண்ணிய காலம். இந்த காலங்களில் நம் முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து நம்மை காக்க பூலோகம் வருகின்றனர் என்பது ஐதீகம். முன்னோர்களை வரவேற்கும் விதமாக ஆடி அமாவாசை காலத்தில் தர்பணம் அளிக்கிறோம்.
மகாளய அமாவாசை
நம்முடைய வேண்டுதலை ஏற்று நம்மை காப்பதற்காக புராட்டாசி மாதம் மகாளய பட்சத்தில் பூமிக்கு வருகின்றனர் என்பது நம்பிக்கை. எனவேதான் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையன்று பூலோகம் வருகின்றனர்.
தை அமாவாசை
புரட்டாசியில் வரும் முன்னோர்கள் சில மாதங்கள் நம்முடன் தங்கியிருந்து தை மாதம் உத்தரயாணம் தொடங்கிய உடன் பித்ருலோகம் திரும்புகின்றனர். நம்முடன் தங்கியிருந்து நம்மை காத்த முன்னோர்களுக்கு நாம் நன்றி கூறி வழியனுப்பி வைக்கும் நாளே தை அமாவாசை.
தானம் அளியுங்கள்
நம்மை பாதுகாத்த முன்னோர்களுக்காக தர்பணம் அளித்து ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம் பரம்பரை பரம்பரையாக நமக்கு நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை.
பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது நலம். இவ்வாறு தர்பணம் அளிக்காவிட்டால் முன்னோர்களின் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.சாஸ்திரம் சொல்கிறது.
ராமேஸ்வரம் கோவில்
தை அமாவாசை நாளை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி பல்லாயிரக்கணக்கானோர் தர்பணம் அளித்தனர். தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மதியம் 3.30 மணிக்கு படிகலிங்க பூஜையும் இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகளுடன் ராமர் வீதி உலா வருதலும் நடைபெறுகிறது.
காவிரிக்கரைகளில் புனித நீராடல்
காவிரியில் தண்ணீர் இன்றி வறண்டுள்ளதால் குழாய்கள் மூலம் புனித நீராடிய பக்தர்கள், முன்னோர்களுக்கு தர்பணம் அளித்தனர். இதேபோல் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றங்கரைகளிலும் குழாய்கள் மூலம் புனித நீராடி தர்பணம் கொடுத்தனர்.
கடலில் நீராடிய பக்தர்கள்
நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை, ஆகிய இடங்களிலும் தை அமாவாசையையொட்டி புனித நீராட பக்தர்கள் குவிந்தனர். இதே போல திருச்செந்தூர், முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியிலும் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.
ஆசி பெறுவோம்
முன்னோர் நம்மிடம் பெரிதாக எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்களின் தேவை, எள்ளும், நீரும் மட்டுமே. அவற்றை புண்ணியத்தலங்களுக்குச் சென்று கொடுக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக மூதாதையர்களை நினைக்கத் தவறியவர்கள், ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில் மட்டும் தர்ப்பணம் செய்தாலே அந்த ஆண்டு முழுவதும் அவர்கள் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்பது முன்னோர் வாக்கு. எனவே இனியாவது தை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து அவர்களின் ஆசி பெறுவோம்.