தை அமாவாசை: ராமேஸ்வரம் கோவிலில் தீர்த்தவாரி... நாளை பகல் முழுவதும் கோவில் திறந்திருக்கும்
தை அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பகல் முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம்: தை அமாவாசையான நாளைய தினம் ராமேஸ்வரம் கோவிலில் காலை 7 மணியளவில் சுவாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும், தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. இதனையொட்டி அதிகாலை 2.30 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடை இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமாவாசை தினத்தில் ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து இறந்து போன முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய திதி தர்ப்பண பூஜை செய்வது வழக்கம். கோவிலில் உள்ள தீர்த்தங்களில் நீராடி விட்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். தை அமாவாசை தினத்தை முன்னிட்டு நாளை பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் பகல் முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் தலத்தின் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடி, சிவ பூஜையும் தரிசனமும் செய்து, பித்ருக்கடன் செய்தாலே, நம் முந்தைய ஜென்ம பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். ஸ்ரீராமபிரான் ராமேஸ்வரத்துக்கு வந்து புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சிவலிங்க பூஜை செய்து, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்டார் என்று ஸ்தலபுராணம் தெரிவிக்கிறது.
கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதோடு அக்னிதீர்த்த கடல் மற்றும் 22 தீர்த்த கடலில் புனித நீராடும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால்கடந்த ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாட்களிலும் ராமேஸ்வரம் கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆடி மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை பக்தர்கள் வர முடியாத காரணத்தால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தடை விலக்கப்பட்டதால் ஏராளமானோர் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ராமேஸ்வரம் திருக்கோயில் தலத்தில் 22 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. இந்த இப்பிறவியில் ஒருமுறையேனும் 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடவேண்டும் என்றும் அப்படி நீராடினால், நம் பாவங்களெல்லாம் தொலையும் நன்மைகள் நடைபெறும்.
கடலிலேயே கலந்திருக்கிறது அக்னி தீர்த்தம். இதில் நீராடிவிட்டே தரிசனத்துக்குச் செல்கிறார்கள் பக்தர்கள். இங்குள்ள கோடி தீர்த்தத்தில் நீராடினால் மகா புண்ணியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
ஸ்ரீராமர், சிவலிங்க அபிஷேகத்துக்குப் பயன்படுத்திய தீர்த்தம் இது. சிவ பெருமானின் அருளையும் ஸ்ரீராமரின் அருளையும் பெற்றுப் பெருவாழ்வு வாழவைக்கும் மகா தீர்த்தம் இதுவாகும்.
தை அமாவாசையான நாளை ராமேஸ்வரம் கோவிலில் காலை 7 மணியளவில் சுவாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும், தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. இதனையொட்டி அதிகாலை 2.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3.30 முதல் 4.30 மணி வரை ஸ்படிக லிங்க தரிசனமும் தொடர்ந்து வழக்கமான பூஜை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 2.30 மணிக்கு திறக்கப்படும் நடையானது பகல் முழுவதும் திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அடைக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.