அறுவடை மாதமான தை மாதத்திற்கு என்னென்ன சிறப்புகள் இருக்கு தெரியுமா
மதுரை: தை மாத வளர்பிறையில் வரும் சப்தமி திதியானது ரதசப்தமியாக இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. அன்றைக்கு தான் சூரியன் தன்னுடைய வடதிசை பயணத்தை தொடங்குகிறார். ரத சப்தமி நாளில் விரதம் மேற்கொள்வோருக்கு தேக ஆரோக்கியம், நோய் இல்லாமை, புத்திரப்பேறு, நிலையான செல்வம், பகைவர்களையும் வெல்லும் சக்தி, வெற்றி, நிலம், தானியம் மற்றும் புண்ணியம் ஆகியவை கிடைக்கும்.
தை மாத மழை தவிட்டுக்கும் உதவாது
தை மாத மழை நெய் மழை
தை மாத விதைப்பு தவிட்டுக்கும் ஆகாது
தை மாத பனி தலையைப் பிளக்கும்
தை மாதம் தரை எல்லாம் பனி
தை மாதம் தரையும் குளிரும் என்று தை மாதத்தைப் பற்றியும் தை மாத குளிரையும் பனியையும் குறிப்பிட்டு சொல்வார்கள்.
மற்ற மாதங்களில் எல்லாம் கட்டாந்தரையில் படுத்து புரண்டாலும் கூட, தை மாதம் முதல் பங்குனி மாதம் வரை, நம்மால் வெறும் கட்டாந்தையில் கால் வைக்கக்கூட முடியாது. அந்த அளவுக்கு குளிரும் பனியும் போட்டி போட்டு நம்மை உறைய வைக்கும்.
தை மாத தொடக்கம் இலையுதிர் காலத்தின் தொடக்கம் என்பதால், அது நாள் வரையிலும் விளைவித்த பயிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராகி இருக்கும். அறுவடையை தொடங்காவிட்டால், விளைவித்த பயிர்கள் அனைத்துமே வீணாகி விடும் என்று உணர்ந்தே பண்டைய காலத்திலிருந்தே தமிழர்கள் தை மாதத்தை அறுவடை மாதம் என்று கணித்து வைத்திருந்தனர்.
சூரிய வழிபாடு மாதம்
தமிழர்கள் தை மாதத்தை அறுவடை காலமாகவும், சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் மாதமாகவும் போற்றி வணங்கி வருகின்றனர். இவை அனைத்திற்கும் மேலாக, சைவம், வைணவம், கௌமாரம், காணாபத்யம், வைஷ்ணவம் என இந்துக்கள் தங்களுடைய வழிபாட்டு முறையை பின்பற்றி வந்தாலும் கூட, அனைத்து இந்துக்களும் பின்பற்றும் வழிபாட்டு முறையானது சௌரம் எனப்படும் சூரியனை வழிபடும் முறையாகும்.
ஆதிபகவன் சூரியன்
நாம் வணக்கும் சிவனையோ முருகனையோ எந்த கடவுளையுமே கண்ணால் காண முடியாது. ஆனால் நம்மால் பார்த்து அறிந்து உணர முடிகின்ற ஒரே கடவுள் சூரியன். அதைத்தான் வள்ளுவரும் தன்னுடைய திருக்குறளில் முதல் குறளாக கூறியுள்ளார்.
பகவன் முதற்றே உலகு
என்று போற்றி எழுதியுள்ளார். இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக நாம் கொண்டாடும் வழிபாடே தை பொங்கல் என்னும் பொங்கல் பண்டிகை ஆகும். நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை தவிர தை மாதத்திற்கு எத்தனையோ சிறப்புகள் உள்ளன.
அறிவை வளர்க்கும் தை பூச வெள்ளி
உத்தராயண கால தொடக்க மாதமான தை மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமைகள் அம்மன் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாட்களாகும். அன்றை நாட்களில், அம்மனுக்கு உகந்த அபிராமி அந்தாதி, சௌவுந்தர்ய லஹரி போன்ற அம்மனை போற்றி பாடல்கள் பாடி வழிபாடு செய்யலாம். தேவர்களின் குருவான பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் பூச நட்சத்திரத்திற்கு உரியவர். எனவே தை மாத பூச நட்சத்திரத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால், நம்முடைய அறிவாற்றல் வளரும் என்பது ஐதீகமாகும்.
சிவனுக்கு உகந்த தைபூச திருநாள்
தை மாத பூச நட்சத்திரத்திற்கு அருகில் சந்திரன் வரும்போது தைபூச திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சிவபெருமானையும், முருகப் பெருமானையும், வீரபத்திரதையும் வழிபட உகந்த நாளாகும். எம்பெருமான் ஈசன் ஆடலரசராக நடராஜ பெருமானாக மக்களுக்கு காட்சி கொடுத்த நாள் தைபூச திருநாளாகும்.
சக்தி வேல் பெற்ற நாள்
தை பூச நாளில் தான் அன்னை பார்வதி தேவி, அசுரர்களை அழிப்பதற்காக ஆறுமுகக் கடவுளுக்கு சக்தி வேலை வழங்கிய நாள். அதனால் தான், தைபூச திருநாள் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நீத்தார் கடன் நீக்கும் நாள்
தை மாதத்தில் வரும் தை அமாவாசை மற்றொரு முக்கிய நாளாக கருதப்படுகிறது. அன்று தான் முன்னோர்களுக்கு தர்ப்பணம் எனப்படும் நீத்தார் கடன் வழிபாட்டை மோற்கொள்ளும் நாள். ஆறு, குளம், கடல் என அனைத்து நீர்நிலைகளிலும் பித்ரு கடன் வழிபாடு மேற்கொள்ளப்படும்.
ரத சப்தமி விரதம்
தை மாத வளர்பிறையில் வரும் சப்தமி திதியானது ரதசப்தமியாக இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. அன்றைக்கு தான் சூரியன் தன்னுடைய வடதிசை பயணத்தை தொடங்குகிறார். ரத சப்தமி நாளில் விரதம் மேற்கொள்வோருக்கு தேக ஆரோக்கியம், நோய் இல்லாமை, நோய் இல்லாமை, புத்திரப்பேறு, நிலையான செல்வம், பகைவர்களையும் வெல்லும் சக்தி, வெற்றி, நிலம், தானியம் மற்றும் புண்ணியம் ஆகியவை கிடைக்கும்.
வீரபத்திரர் வழிபாடு
தை மாதத்தில் வரும் மற்றொரு முக்கிய நாள், வீரபத்திரர் வழிபாடு ஆகும். வீரபத்திரர் வழிபாடு என்பது ஓர் ஆண்டு முழுவதும் கடைபிடிக்கப்படுவதாகும். ஒரு வருடம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட, தை மாத செவ்வாய்க் கிழமைகளில் மட்டுமாவது வீரபத்திரர் வழிபாட்டை கடைபிடிக்கலாம். அப்படி செய்தால், தீராத பகையும் பறந்தோடி விடும், அனைத்து தடங்கலும் தகர்ந்து போகும். நவக்கிரக பாதிப்புகளில் இருந்தும் நம்மை காக்கும்.
பாவங்கள் போக்கும் சபலா ஏகாதசி
தை மாத தேய்பிறையில் வரும் ஏகாதசி சபலா ஏகாதசி என அழைக்கப்படுகிறது. இந்நாளில் உண்ணாமல் உறங்காமல் விரதமிருந்து மஹாவிஷ்ணுவை வழிபட்டால் நாம் முன்பு செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். அன்றைய நாளில், ஏழைகளுக்கு பழங்களை தானம் செய்வதால், ஒளிமயமான வாழ்க்கை அமையும். லும்பகன் என்னும் இளவரசன் இவ்விரதத்தை கடைபிடித்து பாவங்கள் அனைத்தும் நீங்கி அரச பதவியையும், பின்னர் வைகுண்ட பதவியையும் பெற்றான் என்பது ஐதீகம்.
வளர்பிறை புத்ரதா ஏகாதசி
தை மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியானது, புத்ரதா ஏகாதசி என்றும் சந்தான ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் ஏகாதசி விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். சுகேது மான் என்ற மன்னன் புத்திர பாக்கியம் இல்லாத குறையை, புத்ரதா ஏகாதசி விரதமிருந்து நல்ல மகனை பெற்றான். அதோடு தன் நாட்டு மக்களையும் இந்த புத்ரதா ஏகாதசி விரதத்தை பின்பற்றச் செய்தான்.
சாவித்ரி கௌரி விரதம்
தை மாத இரண்டாம் நாளில் பின்பற்றப்படும் விரம் சாவித்ரி கௌரி விரதமாகும். சிரஞ்சீவியான மார்க்கண்டேயர் இந்த விரதத்தை தருமனுக்கு எடுத்துக் கூறியதை அடுத்து தருமரும் இந்த விரதத்தை மேற்கொண்டார். இவ்விரதத்தை மேற்கொள்வோர், அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடி, களிமண்ணால் செய்த சாவித்ரி அம்மனை பூஜை செய்ய வேண்டும்.
9 சுமங்கலிகள் 9 ஆண்டுகள்
சாவித்ரி அம்மனை பூஜை செய்யும் போது, அன்றைய தினம் 9 முடிச்சுகள் போடப்பட்ட கயிற்றை கையில் கட்டிக்கொண்டு மௌன விரதம் இருக்க வேண்டும். இவ்வாறு 9 நாட்கள், 9 ஆண்டுகள் பூஜை செய்து வரவேண்டும். 9ஆவது ஆண்டு முடிவில் 9 முறங்களில், ஒவ்வொன்றிலும் வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள் கிழங்குகள் என அனைத்தும் 9 எண்களுடன் வைத்து 9 சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், முறம் ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், நீடித்த ஆயுளும், வற்றாத செல்வமும், சந்தான பாக்கியமும் கிடைக்கும்.