பொங்கல் பானையில் பொங்கும் பால் எந்த திசை நோக்கி வழிய வேண்டும் தெரியுமா
நமது வாழ்க்கையில் சூரிய பூஜை மிகவும் முக்கியமான ஒன்று. மனத்தில் உறுதியும், பலமும் தேக ஆரோக்கியத்திற்கும் சூரிய வழிபாடு மிகவும் இன்றியமையாததாகும்.
சென்னை: சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயாண காலம் தொடங்குகிறது. சூரியனின் வடதிசை தொடங்கும் காலமே உத்தராயண புண்ணியகாலமாகும். மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் நாளை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர். மார்கழி மாதக் குளிர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய, தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது என்பதால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி உண்டானது.
சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் பெண்கள் நோன்பு கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த நோன்பை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய கால்நடை, போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது.
பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் தொடர்புடையதாகவே இருந்துள்ளது மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை போகியன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது.தற்போது, "பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழம் பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர்.
பொங்கல் என்பது பொங்கு என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும். அறுவடை முடிந்து புது நெல் வந்திருக்கும் ஆதலால் அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது விவசாய பெருமக்களின் நம்பிக்கை. நம் வாழ்க்கையில் வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவாக அமைந்துள்ளது.
பொங்கல் பானையின் கழுத்துப்பகுதிகளில், மாவிலை கட்டி, விபூதிப்பூச்சுகளும், சந்தனம் குங்குமம் ஆகியவற்றால் பொட்டிட்டும் , அலங்கரிப்பார்கள். தண்ணீரும் பாலும் சேர்ந்துப் பொங்கல் பானையை நிரப்பி, அடுப்பிலேற்றி பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது பொங்கலோ பொங்கல் என்று சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு.
பொங்கல்பானை நுரைத்துப்பொங்கும்போது பொங்கலோ பொங்கல் என்று சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது நமது பண்பாடு. பானையில் இருந்து பொங்கிக் தள்ளும் அந்த நுரைத்த பால் எந்தத்திசையில் வழிகிறது என்று பார்த்துக் வணங்குவார்கள். கிழக்கு, வடக்கு, நோக்கி பொங்கிய பால்வழிந்தால் நம் வீட்டில் நல்லது நடைபெறும் என்பது நம்பிக்கை.
பொங்கல் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என்று வீட்டில் உள்ள அனைவரும் சொல்லி ஆரவாரம் செய்து மங்கல ஒலியாக குலவையிட்டு பானையில் அரிசியையும், பாலையும் இட்டு மகிழ்ச்சி பொங்கித்ததும்பும் விழா பொங்கல் விழா. பால் போல் மனமும் நீர் போல் தெளிவும் வார்த்தையில் இனிமையும் கொண்டு சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்தும் மங்கல விழா பொங்கல்.
பொங்கல் என்பது லட்சுமி வீட்டிற்கு வரும் நாள் என்று எண்ணுவதால், அன்னை மகாலட்சுமியை தங்க வைப்பதற்காக வீட்டை விட்டு எதையும் வெளியேற்றக் கூடாது என்பது ஐதீகம். பொங்கல் பண்டிகை நாளில் சர்க்கரை பொங்கல் வைத்து வழிபடவோம். சந்தோஷமாக கொண்டாடுவோம்.