தை திருநாள் முதல் தைப்பூசம் வரை - தை மாத முக்கிய பண்டிகை நாட்கள் விரத நாட்கள்
தை மாதம் உத்தராயண புண்ய காலம் தொடங்குகிறது. தை மாதத்தில் முதல் நாள் தொடங்கி மாதம் முழுவதுமே பண்டிகை நாட்களும், விரத நாட்களும் உள்ளன. என்னென்ன விரத நாட்கள் உள்ளன என்பதை நீங்க உங்க டயரியில் குறித்து வைத
சென்னை: தை மாதத்தில் பொங்கல் பண்டிகை தொடங்கி மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், தை கிருத்திகை, தை அமாவாசை, ரத சப்தமி, பீஷ்ம ஏகாதசி, பீஷ்ம துவாதசி என முக்கிய பண்டிகைகள் உள்ளன. தை மாதம் திருமண முகூர்த்த நாட்களும் உள்ளன. இந்த பண்டிகை நாட்கள் எந்தெந்த தினத்தில் வருகின்றன. இதன் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்வோம்.
தை மாத முகூர்த்த நாட்கள்
ஜனவரி 20, தை 6 திங்கள் கிழமை ஏகாதசி திதி அனுசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 6 - 7.30 மகர லக்னம்
ஜனவரி 27, தை 13 திங்கள் கிழமை திரிதியை திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 6 - 7.30 கும்பம் லக்னம்
ஜனவரி 30, தை 16 வியாழன்கிழமை பஞ்சமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 7.30 - 9 கும்பம் லக்னம்
தை மாத பண்டிகை நாட்கள் விரத நாட்கள்
ஜனவரி 15 - தைப்பொங்கல் - தை முதல் நாள்
ஜனவரி 16 - மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 - காணும் பொங்கல்
ஜனவரி 24 - தை அமாவாசை மவுனி அமாவாசை நாள்
ஜனவரி 26 - சந்திர தரிசனம் வாஸ்து நாள்
ஜனவரி 29 - வசந்த பஞ்சமி
பிப்ரவரி 1 - ரத சப்தமி சூரியனை வணங்கும் நாள்
பிப்ரவரி 2 - பீஷ்ம அஷ்டமி
பிப்ரவரி 4 - தை கிருத்திகை
பிப்ரவரி 05 - பீஷ்ம ஏகாதசி
பிப்ரவரி 06 - பீஷ்ம துவாதசி
பிப்ரவரி 8 - தைப்பூசத் திருநாள் வடலூரில் ஜோதி தரிசனம்
தை பொங்கல் கோலாகலம்
தை திருநாள் பிறக்கும் போதே கோலாகலமாக தொடங்குகிறது. சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து வழிபடுகிறோம். கால் நடைகளுக்கு நன்றி சொல்ல மாட்டுப்பொங்கல், உறவினர்களுடன் கூடி மகிழ காணும் பொங்கல் என கொண்டாட்டம் களைகட்டும். கிராமங்களில் பொங்கல் பண்டிகையோடு விளையாட்டுப்போட்டிகளும் களை கட்டும்.
தைப்பூசம்
தேவர்களின் குருவான பிரஹஸ்பதியின் பூச நட்சத்திரத்தில் குருவை வழிபடுவது, நம் வாழ்வைத் தெளிவாக்கும். தை மாதத்தின் பூச நட்சத்திரம் அல்லது பௌர்ணமி திதியைக் கொண்டு, ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் செய்வது நாட்டு மக்களுக்கும் நாட்டை ஆள்பவர்களுக்கும் உயர்வைக் கொடுக்கும் என ஆகமங்கள் தெரிவிக்கின்றன. இன்று சிவபெருமான், முருகக் கடவுள் மற்றும் பிரதான தெய்வமாக வழிபடக்கூடிய அனைத்து தெய்வத் திருமேனிகளுக்கும் தேன் கொண்டு அபிஷேகம் செய்தல் சிறப்பு. தைப் பூசத்தில் சிவபெருமான் அன்னை உமையவளுடன் திருநடனம் புரிந்தார். எனவே உமை ஒருபாகனைத் துதிப்பது ரொம்பவே விசேஷம். குடும்ப ஒற்றுமை மேலோங்கும்! இந்த விரத மகிமைகளை வீரபத்திரர், பாணுகம்பனுக்கு உபதேசிப்பதாக ஸ்கந்த புராணம் தெரிவிக்கிறது. முருகப்பெருமானுக்கு பக்தர்கள் காவடியை சமர்ப்பித்து வணங்க நல்ல நாள். பழநியில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீதண்டாயுதபாணியை வழிபட்டு கஷ்டங்கள் நீங்கி, இன்பம் பெற காவடிகளைச் சமர்ப்பிப்பது வாழ்வில் வளம் சேர்க்கும்!
காணும் பொங்கல்
ஒரே வீட்டில் இருந்தாலும் பலரும் தனித்தனி தீவுகளாக வாழும் சூழ்நிலையை செல்பேசி ஏற்படுத்தி விட்டது. இந்த காணும் பொங்கல் நாளில் நண்பர்களும், உறவுகளும் ஒருவருக்கொருவர் ஒன்று கூடி அன்பையும் மகிழ்ச்சியையும் பரிமாறிக்கொள்ளும் நாளாக மாற்றுவோம். சுற்றுலா மையங்களுக்கு சென்று கொண்டாடுவதே காணும் பொங்கல் பண்டிகை.
வீடு கட்ட வாஸ்து நாள்
தை மாதம் 12ம் தேதி ஞாயிறு கிழமை வாஸ்து நாள் ஆகும். இன்று காலை 10-06 மணி முதல் 10-42 வரை வாஸ்து பூஜை செய்வது சிறப்பு. வாஸ்து பகவான் உணவு உண்பது தாம்பூலம் மெல்லுதல் ஆகிய காரியங்களை செய்யும் 36 நிமிடங்களில் வாஸ்து பூஜை செய்வது நன்மை ஏற்படும். அதாவது 10-06 மணி முதல் 10-42 மணிக்குள் வீடு கட்டக் கூடிய நிலத்தில் வாஸ்து பூஜை செய்வது சிறப்பு எவ்வித சிரமுமின்றி வீடு கட்டி முடிக்கலாம். புதிதாக வீடு கட்டுபவர்கள் மட்டுமல்லாமல் நம் இல்லத்திலும் மஞ்சள் மற்றும் உப்பு கலந்த நீரை வீடு முழுவதும் தெளித்து வாஸ்து பூஜை செய்வது வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்களை நீக்கும் வாழ்க்கையில் வளமாக்கும்.
முன்னோர் வழிபாடு
இந்தச் சரீரம், கடவுளின் அருளினால், நம் தாய் தந்தையர் மூலம் நமக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய பரிசு! தாய் தந்தையர் இந்தப் புவியில் இருக்கும்போது, அவர்களை போஷிக்க வேண்டும். அவர்கள் மேலுலகம் சென்றபின், அவர்களுக்கு உரிய கடமைகளைச் செய்வதே நம் தலையாயக் கடமை!
உத்தராயண தொடக்கத்தில் வரும் அமாவாசை நாளில், நம் முன்னோர்களை வழிபடுவது மிக மிக அவசியம்! முன்னோர் வழிபாடு என்பதை, வருடத்தில் அனைத்து மாதங்களிலும் செய்ய முடியாதவர்கள் கூட, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகிய முக்கிய நாட்களில் மறக்காமல் செய்தால், நம் கடமையைச் செய்தால், நாமும் நம் குடும்பமும் நிறைவுடன் வாழ்வோம். நாம் இந்த உலகுக்கு வரக் காரணமாக இருந்தவர்களைத் திருப்தி செய்தால்தான், நம்மால் இந்த உலகுக்கு வந்தவர்களைக் காக்க முடியும்! நம் முன்னோர்கள் நம் சந்ததிகள் வாழ ஆசி வழங்குவார்கள்.
பாவங்கள் போக்கும் ரத சப்தமி!
வசந்த பஞ்சமி தினத்தில் லட்சுமி பூஜை செய்தால் வாழ்க்கையில் வசந்தம் என்னும் சந்தோஷம் நிலைத்து நிற்கும். ரத சப்தமி தினத்தன்று பெருமாள் கோயில்களில் சூரிய பிரபையுடன் கூடிய ரதத்தில் திருமால் வலம் வருவார். ரதத்தில் வீற்றிருக்கும் திருமாலை தரிசித்தால் நம் முன்னோர்கள் மகிழ்ச்சியடைவார்கள். நம் வாழ்க்கை வளம் பெறும். தை மாதம் வளர்பிறை சப்தமி திதியன்று கொண்டாடப்படும் பண்டிகை இது. மிக எளிமையான, அதேநேரம் நம் சந்ததியை வளமாக்கும் நாள். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விடியற்காலையில் எழுந்து கிழக்கு நோக்கி நின்றபடி, ஏழு எருக்க இலைகள் அதனுடன் அட்சதை, பசுஞ்சாணி,மஞ்சள் பொடி ஆகியவற்றைச் சேர்த்து, தலையில் வைத்துக் கொண்டு சூரிய பகவானை நோக்கி, நாம் செய்த பாவங்கள் அனைத்தும் போக்கச் செய்யும்படி பிரார்த்திக்க வேண்டும். இந்த நாளன்று சூரியனின் தேரானது தெற்கிலிருந்து வடக்கு நோக்கித் திரும்புவதால் மிகுந்த ஆற்றல் படைத்தது என்பது ஐதீகம். இன்றைய தினம் சூரிய வழிபாடு செய்வதால் ஏழு ஜன்மங்களில் செய்த பாவங்களும் நம்மை விட்டு விலகிவிடும் என்பது நம்பிக்கை!
பீஷ்மர் வழிபாடு
தன் தந்தையின் பொருட்டு, திருமணமே செய்யப் போவது இல்லை எனும் உயர்ந்த சத்தியத்தைச் செய்த பிதாமஹர் பீஷ்மர் ஸித்தி அடைந்த தினமே பீஷ்மாஷ்டமி எனும் நன்னாள்!. ஓம் பீஷ்மாய நம: என்று மூன்று முறை, தண்ணீரை கைகளினால் அர்க்கியமாக விடவேண்டும். இதனால் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் கிடைக்கும்.
பீஷ்மர் விரதம்
தை மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு புத்ரதா என்பது பெயராகும். இந்த ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்களுக்கு நல்ல பிள்ளைகள் பிறப்பார்கள். இதுவேதான் பீஷ்ம ஏகாதசி என்று கூறப்படுவது. அதாவது பாரத யுத்தம் முடிவுற்ற பின்னரும் சரசயனத்தில் படுத்திருந்த பீஷ்ம பிதாமகர் இந்த ஏகாதசி அன்று தன் உயிரை உடலை விட்டு விடுபட்ட ஏகாதசியாகும். இன்று விரதம் இருந்து பெருமாளை வழிபடுபவர்களுக்கு முக்தி கிடைக்கும். பீம துவாதசி விரதம். இன்று பீமர் விரதம் இருந்து துவாதசி படையல் வைத்து அன்னதானம் செய்தார், இதனால் உடல் பலமும் வைகுண்ட பிராப்தியும் அடைந்தார்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
உத்தம, வராஹ கல்பாதி. இன்று கல்பாதி புண்ணிய தினம். இன்று முன்னோர்களை வழிபடுவதற்க்கும், தில தர்ப்பணம், பித்ரு ஹோமம், தில ஹோமம் போன்றவை செய்வதன் மூலம் முன்னோர்கள் திருப்தியடைவார்கள். இன்று பிரதோஷம் நந்தி பகவானையும் சிவ பெருமானையும் வழிபடுவது வாழ்க்கையில் வளம் சேர்க்கும். ஆகாமாவை நாளில் சூரிய உதயத்தில் புனித நீராடுவது சிறப்பு. சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.
முருகன் வழிபாடு தைப்பூசம்
தைப்பூசம் முருகனுக்கு உகந்த நாள். தை மாதம் பூச நட்சத்திர நாளில் உலகமெங்கும் வாழும் தமிழக மக்கள் தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு விழா எடுத்து கொண்டாடுவார்கள். வடலூரில் கோலாகலமாக வள்ளலார் ஜோதி தரிசனத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச திருநாளில் கூடுவார்கள். ஜோதியே கடவுளின் சொரூபம், ஜோதி தரிசனத்தின் மூலமாகவே இறைவனை அடையலாம், என்பதையெல்லாம் உணர்த்திய வள்ளலார் சுவாமிகள் ஜோதியுடன் கலந்து ஜோதியாகவே காட்சி தந்த நன்னாள். இந்தநாளில், வள்ளலாரை நினைப்பதும், அவர் அவதரித்து ஜோதியில் ஐக்கியமான வடலூர் சென்று தரிசிப்பதும் மகா புண்ணியமாகும்.