தைப்பூசம் 2019: முருகன் ஆலயங்களில் கோலாகலம் - பழனியில் குவியும் பக்தர்கள்
தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் தமிழகம் முழுவதிலுமுள்ள முருகன் கோயில்களிலும் பக்தர்கள் முருகனை தரிசிக்க குவிந்துள்ளனர். பால்குடமும், காவடிகளும் முருகன் கோவில்களில்
Recommended Video
பழனி: தைப்பூசம் என்றாலே அது தமிழ்கடவுள் முருகனுக்கு உகந்த விழா. அசுரர்களை அழிக்க முருகனுக்கு அன்னை பார்வதி சக்தி வேல் அளித்த நாளாகவும் புராண கதைகள் கூறுகின்றனர். முருகனின் அறுபடை வீடுகளான பழனி, திருச்செந்தூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், சுவாமி மலை, பழமுதிர்சோலை ஆகிய முருகன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்து வருகின்றனர். பழனியில் இன்று மாலையில் நடைபெறும் தேரோட்டத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
பழனியில் தைப்பூசம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று நடைபெறும் தேரோட்டத்தைக் காண பாதையாத்திரையாக வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். முருகப்பெருமானில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திரு ஆவினன் குடி எனப்படும் பழனி. பழனிக்கு பக்தர்கள் பாதையாத்திரையாக சென்று முருகனை வழிபடுவதுதான் சிறப்பு.
இந்த ஆண்டுகக்கான தைப்பூச திருவிழா பழநியில் ஊர்க்கோயில் என அழைக்கப்படும் பெரியநாயகியம்மன் கோயிலில் கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அது முதலே பக்தர்களின் கூட்டம் பழனிக்கு அலைமோதி வருகிறது.
பக்தர்கள் பாதையாத்திரை
தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், விரதமிருந்து முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. செம்பட்டி, ஒட்டன்சத்திரம், காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், காங்கேயம், திருப்பூர் என பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளை சுமந்து கொண்டு பாதையாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.
முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம்
ஆறாம் திருவிழாவான நேற்று வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று மட்டும் 6 லட்சம் பேர் முருகனை தரிசனம் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு வெள்ளித் தேரில் முத்துக்குமார சுவாமி, வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனியில் தேரோட்டம்
முக்கிய விழாவான தைப்பூச தினமான இன்று மாலையில் தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தைக் காண லட்சக்கணக்காண பக்தர்கள் பழனியில் குவிந்த வண்ணம் உள்ளனர். தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க திருத்தேர் 4 ரத வீதிகளில் உலா வந்து மீண்டும் நிலையை அடையும்.
பக்தர்கள் வெள்ளத்தில் பழனி
தைப்பூச திருவிழா முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதால் பழனி நகரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. திண்டுக்கல் - பழனி சாலை, மதுரை சாலை, தாராபுரம் சாலை என திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டம் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. பாதையாத்திரையாக வரும் பக்தர்களுக்காக வழி நெடுகிலும் பக்தர்களுக்காக அன்னதான முகாம்களும், மருத்துவ குழுவினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாத யாத்திரை பக்தர்களுக்கு உதவுவதற்காக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர்.