தைப்பூசம் பழனியில் கோலாகலமாக தொடங்கியது - முருகனை எந்த கோலத்தில் தரிசிக்கலாம்
பழனி மலை எங்கும் அரோகரா முழக்கம் ஒலிக்க தைப்பூசம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. வேல், சேவல்கள் கொண்ட கொடிபட்டம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, மலைஅடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில்,
பழனி: தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் பழனியில் தைப்பூசம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். வேல், சேவல்கள் கொண்ட கொடிபட்டம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, மலைஅடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில், உற்சவர் முருகருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடந்தது. திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வரும் 7 ஆம் தேதியும், தைப்பூசத் தேரோட்டம் வரும் 8ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
பழனியில் 10 நாள்களுக்குத் தைப்பூசத் திருவிழா நடைபெறும். இந்த நாள்களில் ரதவீதிகளில் தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையோடு தங்கமயில் தங்கத்துரை வெள்ளி யானை வெள்ளி ஆட்டுக்கிடா வெள்ளி காமதேனு அந்தப்புரம் என பல்வேறு வகையான வாகனங்களில் நான்கு ரத வீதிகளில் உலா வருகிறார்.
தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வார்கள். தமிழகத்தில் உள்ள காரைக்குடி தேவகோட்டை வேலூர் திருச்சி மதுரை தேனி பெரியகுளம் திருப்பூர் ஈரோடு பொள்ளாச்சி திண்டுக்கல் உள்பட தமிழகத்திலிருந்து பல மாவட்டங்களிலிருந்து இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகிறார்கள். பாதையாத்திரையாக வரும் பக்தர்கள் அனைவரும் பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, மலர் காவடி என பல்வேறு வகையான காவடிகளை சுமந்து ஆடிப்பாடி பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றன.
மகரத்தில் சனியோடு இணையப்போகும் குரு பகவான் - இந்த ராசிக்காரங்களுக்கு ரொம்ப நல்லது
நவபாஷாண சிலை
பழனி மலை முருகன் மூலவர் நவபாஷாணங்களால் உருவாக்கப்பட்டவர். போகர் சித்தர் உருவாக்கிய இந்த மூலவரை தரிசனம் செய்தால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை. எந்த கோலத்தில் யார் தரிசிக்க வேண்டும் என்று ஆன்மீகவாதிகள் கூறியுள்ளனர்.
முருகனுக்கு அபிஷேகம்
பழனி தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படுகிறது. நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி. மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர் உபயோகப்படுத்தப்படுகிறது.
விபூதி பிரசாதம்
சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முடி முதல்,அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம். இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.
சூடாகும் முருகன்
அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.
இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.
நோய் தீர்க்கும் பிரசாதம்
தண்டாயுதபாணி சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் பரவி நிற்கும்.தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து,காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.
போகர் சித்தர் சிலை
பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு தகவல் உண்டு. தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க முடியாது.
ராஜ அலங்கார முருகன்
தண்டாயுதபாணி சிலையை இராஜ அலங்காரத்தில் தரிசிக்க வேண்டுமா? ஆண்டி கோலத்தில் தரிசிக்க வேண்டுமா என்ற குழப்பம் உள்ளது.
முற்றும் துறந்த தவ நிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும் என்பதற்காக,பெரிய ஞானிகளெல்லாம் அந்தக் கோலத்தைக் காண்பதற்காகத்தான் துடிப்பார்கள். முற்றும் துறந்தவர்கள், குடும்பத்தில் பல நிலைகளைக் கடந்தவர்கள் இவர்களெல்லாம் அந்தக் கோலத்தை விரும்பி பார்க்கலாம். வழக்குகளெல்லாம் நடக்கிறது, தீராத நோய்களெல்லாம் இருக்கிறது போன்ற பிரச்சனைகளுக்கு அலங்காரம் இல்லாத முருகனை வணங்குவது சிறந்தது.
வழக்குகள் தீரும்
மன குழப்பம் அடைந்து இருக்கிறார்களே, அவர்களையும் இந்த ஆண்டிக் கோல முருகனை வழிபடச் சொல்லலாம். அவர்களுக்கு மன நிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. வழக்குகள், நோய்கள் தீர அலங்காரம் இல்லாத முருகனை வணங்கலாம். 20 வருடமாக வாதாடிக் கொண்டிருக்கிறேன்.தீர்ப்பு தள்ளி தள்ளிப் போகிறது என்றால் அதற்கு அலங்காரம் இல்லாத ஆண்டிக் கோல முருகன் வழிகாட்டுவார்.
நோய் தீர்க்கும் முருகன்
பேச இயலாதவர்கள், குறைபாடு உள்ளவர்கள், மன எழுச்சி, மன உளைச்சல் உள்ளவர்கள் இவர்களெல்லாம் ஆண்டி கோலத்தைப் பார்த்தால் ஒரு சாத்வீகம், சமத்துவம் அவர்கள் மனதிற்குள் பாயும். தீராத நோய் என்று மருத்துவர்கள் சொன்னாலும் முருகனின் ஆண்டி கோலத்தை தரிசிக்க நோய்கள் தீரும்.
ராஜ அலங்கார கோலத்தில் தரிசனம்
நம்மால் சரி செய்யக்கூடிய விஷயங்களுக்கு ராஜ அலங்கார தரிசனம். நம்மால் முடியாது, மருத்துவராலும் முடியாது, யாராலும் முடியாது போன்ற விஷயங்களுக்கெல்லாம் ஆண்டிக் கோலம் மிக மிக உகந்த தரிசனக் கோலம் ஆகும். பெண்ணிற்கு கல்யாணம் முடிக்கப் போகிறோம், பத்திரிக்கை அடித்து கும்பிடப் போகிறோம், வீடு விற்பது, வாங்குவது, கட்டுவது, கட்டிய பின் கிரகப் பிரவேசம் செய்வதற்கு சாமி கும்பிடப் போகிறோம் ஆகிய இதுபோன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் ராஜ அலங்கார கோலத்தில் தரிசிக்கலாம்.