தைப்பூசம் 2019: பழனிக்கு காவடியுடன் படையெடுக்கும் பக்தர்கள் - 21ல் தேரோட்டம்
முருகனின் 3ம் படைவீடான பழனியில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 21ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
Recommended Video
சென்னை: அறுபடைவீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 20ஆம் தேதி 6ஆம் திருவிழாவாக திருக்கல்யாணமும், வெள்ளித்தேரோட்டமும் நடைபெறுகிறது. மறுநாள் 21ஆம் தேதி தைப்பூசத் தேரோட்டம் நடைபெறுகிறது. பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக காவடிகளுடன் படையெடுத்து வருகின்றனர்.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையொட்டியோ தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்தநாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
இந்த ஆண்டு தைப்பூச விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ராக்கால பூஜைக்கு பின் கிராமசாந்தி பூஜை நடைபெற்றது. அதைதொடர்ந்து தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி சந்திப்பில் உள்ள அபரஞ்சி விநாயகர் கோவிலில் வாஸ்து சாந்தி பூஜையும், பெரிய நாயகி அம்மன் கோவில் முன்பு உள்ள தீப ஸ்தம்பம் அருகே புனித மண் எடுத்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
பழனியில் கொடியேற்றம்
பழநியில் ஊர்க்கோயில் என அழைக்கப்படும் பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினார். இங்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து நேற்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. மயில், வேல், சேவல் உருவங்கள் பொறித்த மஞ்சள் நிற கொடி கோயிலின் உட்புறம் உள்ள கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா முழக்கமிட்டு முருகனை வழிபட்டனர்.
வள்ளி தேவசேனா சமேத முத்துக் குமாரசுவாமி
இரவு பெரிய நாயகியம்மன் கோயிலை சுற்றி யுள்ள நான்குரத வீதிகளில் வள்ளி தேவசேனா சமேத முத்துக் குமாரசுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினசரி காலை முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடும், மாலை 8.30 மணிக்கு மேல் புதுச்சேரி சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேணு, வெள்ளி யானை, பெரிய தங்கமயில் வாகனம், மற்றும் தங்கக்குதிரை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
தைப்பூச தேரோட்டம்
இவ்விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வரத்தொடங்கி உள்ளனர். மதுரை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 20ஆம் தேதி 6ஆம் திருவிழாவாக திருக்கல்யாணமும், வெள்ளித்தேரோட்டமும் நடைபெறுகிறது. மறுநாள் 21ஆம் தேதி தைப்பூசத் தேரோட்டம் நடைபெறுகிறது.
தைப்பூச தெப்பத்திருவிழா
21ஆம் தேதி தைப்பூசம் தினத்தன்று காலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சண்முக நதியில் தீர்த்தம் வழங்குதல். பகல் 12.40 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளளும், மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 24ஆம் தேதியன்று தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. தைப்பூச திருவிழாவையொட்டி இம்மாதம் 19ஆம்தேதி முதல் 23ஆம்தேதி வரை 5 நாட்களுக்கு தங்கரதத்தில் சாமி புறப்பாடு நடைபெறாது என்றும், என்றும், கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.