தைப்பூசம் 2020: உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் பழனி பாதயாத்திரை
பாதயாத்திரை என்பது நடந்தே திருத்தலப் பயணம் மேற்கொள்ளுவது என்றும் ஆன்மீகத்தில் விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது. அன்றைய காலத்தில் பெரும்பாலான ஆன்மீகப் பெரியவர்கள் பாதயாத்திரையாகவே நாடு முழுவதும் சென்று திர
மதுரை: பாதயாத்திரை செல்வதை முருக பக்தர்கள் ஆத்மார்த்தமாகவே செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தைப்பூச திருநாளில் பழனி தண்டாயுதபாணியை தரிசிக்க வேண்டி, தமிழகம் முழுவதும் இருந்து, லட்சக்கணக்கான முருக பக்தர்கள் மாலையணிந்து ஐயப்ப பக்தர்களைப் போலவே மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் கடுமையான விரத முறைகளை கடைபிடித்து பழநியாண்டவரை தரிசித்து வருவதாக 'பழனி அறப்பட்டயங்கள்' மூலமாக அறிய முடிகிறது.
இந்து சமயத்தில் மத நம்பிக்கையும் கடவுள் வழிபாடும் பிரிக்க முடியாத ஒன்றாகும். இதில் கடவுளை வணங்குவோர், ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடி வணங்கி வருவதுண்டு. சிலர் என்னதான் கடவுள் நம்பிக்கை இருந்தாலும், வீட்டிலேயே கும்பிட்டுவிட்டு, அத்தோடு தன் கடமை முடிந்தது என்று விட்டுவிடுவார்கள். சிலர் கோவிலுக்கு சென்று கடவுளை மனமுருக தரிசித்து செல்வார்கள்.
தங்களுக்கு பிடித்தமான கடவுளாக இருந்தாலும், ஏதாவது நேர்த்திக்கடன் செலுத்துவதாக இருந்தாலும் கடுமையான விரத நடைமுறைகளை பின்பற்றி, கடவுளை தரிசித்து தன்னுடைய நேர்த்திக்கடனை செலுத்துவதுண்டு. அப்படி நேர்த்திக்கடனை செலுத்த வரும் பக்தர்களில் பெரும்பாலானோர், அலகு குத்திக்கொண்டும், காவடி தூக்கிக்கொண்டும், பாதயாத்திரையாகவும் கடவுளை தரிசிப்பதுண்டு.
திருத்தல யாத்திரை
பொதுவாக யாத்திரை செல்வது என்பது திருத்தல யாத்திரை செல்வது என்று பொருளாகும். பாதயாத்திரை என்பது நடந்தே திருத்தலப் பயணம் மேற்கொள்ளுவது என்றும் ஆன்மீகத்தில் விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது. அன்றைய காலத்தில் பெரும்பாலான ஆன்மீகப் பெரியவர்கள் பாதயாத்திரையாகவே நாடு முழுவதும் சென்று திருத்தலங்களை தரிசித்துள்ளனர். எனவே, பாதயாத்திரை செல்வது என்பது பண்டைய காலம் தொட்டே தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் ஒரு வேண்டுதல் முறையாகும்.
இஷ்ட தெய்வ வழிபாடு
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் அதிக அளவிலான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று இறைவனை தரிசிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர். பாதாயாத்திரை என்பது, கடும் விரதமிருந்து தங்களின் வசிப்பிடத்தில் இருந்து, காலில் காலனிகள் அணியாமல் வெறும் கால்களில் நடந்தே தங்களின் இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ளும் முறையாகும். கோவில் திருவிழாக்கள், வைகாசி விசாகம், தைப்பூசம் மற்றும் மாசி மகம் போன்ற திருவிழா நாட்களின் போது பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருமுருகாற்றுப்படையில் பாதயாத்திரை
இதில், முருகனை வழிபடுபவர்கள் பெரும்பாலும், பாதயாத்திரையாக சென்று தரிசிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இது இன்று நேற்று உண்டான பழக்கம் கிடையாது, மிகப்பழமையான நடைமுறையாகும். இது பற்றி முருகனின் அறுபடை வீடுகளைப் பற்றி சொல்லும் திருமுருகாற்றுப்படையிலேயே எடுத்து சொல்லப்பட்டுள்ளது.
தெய்வஞ் சான்ற திறல்விளங் குருவின்
வான்தோய் நிவப்பின் தான்வந் தெய்தி
அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத் தன்
மனங்கமழ் தெய்வத் திளநலம் காட்டி
அஞ்சல் ஒம்புமதி அறிவனின் வரவென
அன்புடை நன்மொழி யளைஇ விளிவின்று
இருணிற முந்நீர் வளைஇய வுலகத்து
ஒருநீ யாகித் தோன்ற விழுமிய
பெறலரும் பரிசில் நல்குமதி
என்று குறிப்பிட்டு, முருகனின் அருளைப் பெற நினைந்து புறப்பட்ட ஒருவனிடம் முருகன் எழுந்தருளியிருக்கும் அறுபடை வீடுகளைப் பற்றி குறிப்பிட்டு சொல்லும் வகையில் பாடல் அமைந்துள்ளது. இதன் மூலம் முருகனை தரிசிக்க பாதயாத்திரை செல்வது என்பது சங்க காலத்திற்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பழனி அறப்பட்டயங்கள்
பாதயாத்திரை செல்வதை முருக பக்தர்கள் ஆத்மார்த்தமாகவே செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தைப்பூச திருநாளில் பழனி தண்டாயுதபாணியை தரிசிக்க வேண்டி, தமிழகம் முழுவதும் இருந்து, லட்சக்கணக்கான முருக பக்தர்கள் மாலையணிந்து ஐயப்ப பக்தர்களைப் போலவே மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் கடுமையான விரத முறைகளை கடைபிடித்து பழநியாண்டவரை தரிசித்து வருவதாக ‘பழனி அறப்பட்டயங்கள்' மூலமாக அறிய முடிகிறது.
நகரத்தார் தொடங்கிய பாதயாத்திரை
முதன் முதலில் நேமங்கோயில் குமரப்பன் என்பவர் பழநி முருகனுக்கு விரதமிருந்து காவடி எடுத்து பாதயாத்திரையாக வந்த செய்தியும், அதன் பின்னர் நகரத்தார் எனப்படும் செட்டிநாட்டு மக்கள் பழநிக்கு காவடி எடுத்து பாதயாத்திரை வந்தது பற்றியும், பழனி அறப்பட்டயங்கள் தெரிவிக்கின்றன. பழநிக்கு பாதயாத்திரை செல்வதை முறைப்படுத்தி சுமார் 350 ஆண்டகளாக தொடர்ந்து பின்பற்றி வரும் பெருமை செட்டிநாட்டு நகரத்தார் சமுதாயத்தையே சேரும்.
இறை பக்தியை காட்டும் பாதயாத்திரை
பாரம்பரியமும் தெய்வீகமும் நிறைந்த இந்த பாதயாத்திரை பயணத்தை முருக பக்தர்கள் அனைவருமே, உள்ளன்போடும், இறைபக்தியோடும், கட்டுப்பாட்டோடும் மாலையணிந்து விரதமிருந்து முருகப் பெருமானை உள்ளன்போடு நினைத்து பழநிக்கு பாதயாத்திரை வந்தால், எம்பெருமான் முருகன் நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் நம்முடனேயே இருந்து நமக்கு நல்வழி காட்டுவான் என்பது நிச்சயம். முருகப்பெருமானிடம் உண்மையான பக்தி சிரத்தையோடு இருந்து பாருங்கள். அவன் உங்களை அன்பால் கட்டிப்போடுவான்.
மனதிருப்தியுடன் பாதயாத்திரை
பாதயாத்திரையை பக்தர்கள் எல்லா பருவ காலங்களிலும், கரடு முரடான பாதைகளிலும் வெறும் கால்களில் நடந்து மன உறுதியோடு முருகனை வேண்டிக்கொண்டு செல்கின்றனர். இந்த யாத்திரையின் போது ஜாதி பேதம் இல்லாமல், ஆண் பெண், பெரியவர் சிறியவர் என எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைத்து தரப்பினரும் செல்வதுண்டு. அப்போது முருகப்பெருமானின் மூல மந்திரத்தையும், அவனைப் போற்றி பஜனை பாடல்களை பாடிக்கொண்டும் உற்சாகத்துடனும் மனதிருப்தியுடனும் செல்வதுண்டு.
மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி
பெரும்பாலான பக்தர்கள் ஆண்டு தோறும் பாதயாத்திரை செல்வதை வழக்கமாகவே கொண்டுள்ளனர். இதற்கு பக்தி மட்டுமே காரணம் இல்லை. மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி தரும் இனிய யாத்திரை என்பதால் தான். அலுவலக வேலையில் உள்ளவர்கள் பெரும்பாலானவர்கள், வேறு எந்த நிகழ்வுகளுக்காகவும், விடுமுறை எடுக்காமல், பாதயாத்திரை செல்வதற்காக வேண்டியே விடுமுறை எடுத்து வந்து யாத்திரை செல்வதுண்டு.
யாமிருக்க பயமேன்
முதன் முதலில் பாதயாத்திரை செல்பவர்கள், யாத்திரையின் தொடக்கத்தில், தான் தவறுதலாக, தெரியாமல் பாதயாத்திரை வந்துவிட்டோமோ என்று ஐயம் கொள்வதுண்டு. ஆனால், யாத்திரையின் முடிவில் பழனி மலையேறி தண்டாயுதபாணியை தரிசனம் முடித்து வெளியே வந்து, திரும்பி பார்த்தால், கோபுர உச்சியில் முருகப் பெருமான் கையில் தண்டத்துடனும், சிரித்த முகத்துடன் அங்கே ‘யாமிருக்க பயமேன்‘ என்று சொல்லும் வகையில் காட்சியளிப்பார். அதற்கு அச்சாரமாக கோபுர உச்சியில் கணீர் என்று மணியோசை கேட்கும்.
பாதயாத்திரை மகிமை
அந்த காட்சியையும், மணியோசையையும் கேட்ட உடனேயே, அவர்களின் மனதில் எழும் எண்ணம் என்ன தெரியுமா, அடடா... பாதயாத்திரை இவ்வளவு சீக்கிரத்தில் முடிந்துவிட்டதே, இனி இதற்காக ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமா என்று எண்ணுவதுண்டு. அது தான் பாதயாத்திரையின் மகிமை. பாதயாத்திரை முடிந்து நாம் வழக்கமான பணிக்கு திரும்பும் போது, நம்முடைய உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியோடு, அப்போது தான் பிறந்தது போல் இருக்கும். இதன் காரணமாகவே ஆண்டு தோறும் பாதயாத்திரை வரும் பக்தர்களின் எண்ணம் கூடிக்கொண்டே செல்கிறது.
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தணுன்டு கவலையில்லை மனமே
கருணையே வடிவமான
கந்தசாமி தெய்வமே உன்
கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் கந்தனே
பரங்குன்று செந்திலும்
பழனி மலை ஏரகம்
பலகுன்று பழமுதிரும் சோலையாம் முருகா